Monday 23 September 2019

காக்கை தவளையுடன் கோடை ஞாயிறு

அது, 2019 கோடைகால ஞாயிற்றுக்கிழமை.
மதிய உணவுக்கு பின், மாடியில் உலாவ சென்றேன். தோட்டத்தை கவனித்த போது, ஒரு காக்கை இரையை, கொத்தி பிடுங்க முயன்று கொண்டிருந்தது. அது ஒரு செந்நாம தவளை. கால்களை பரப்பியபடி கிடந்தது. அதை, புரட்டிப் புரட்டி, கால்களால் பற்றி, அலகால் கொத்தி கிழிக்க முயன்றது காகம். இறந்த தவளையை, கொத்தி பிடுங்கி தின்ன முயல்வதாக தான் முதலில் எண்ணினேன்.
சற்று நேரத்துக்குப் பின், உயிர் வாழ போராடும் தவளையின் தனித்துவமிக்க முயற்சியையும் கண்டேன். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள்  கவனித்துக் கொண்டிருந்தேன்.
கூர்மையான தடித்த அலகு, அந்த மெல் உடலியை ஒன்றும் செய்ய முடிவில்லை. உடலை உப்பி, செத்தது போல் தவளை காலை பரப்பி கிடந்தது. காற்று நிறைந்த ஒரு பலுானை கொத்தி உடைக்க முயல்வது போல் இருந்தது காக்கையின் செயல்.
அது ஓர் இயற்கை நிகழ்வு. உணவை நினைக்கிறது காக்கை; உயிரை எண்ணுகிறது தவளை. என் முன்னால் போராட்டம் நடக்கிறது. இன்னும், இரண்டு நிமிடம் பார்க்கலாம். தவளை தாக்குப்பிடித்தால், உதவலாம் என்று எண்ணியபடி நின்றேன்.
காக்கையின் தீவிரம் அதிகமானது. கொத்தும் வேகத்தை தீவிரப்படுத்தியிருந்தது. இரண்டு நிமிடங்கள் கடந்தன. தவளைக்கு உதவும் எண்ணத்தை நிறைவேற்றினேன்.
போராட்ட களத்தை நோக்கி நகரத்துவங்கியதும், காக்கை பறந்து சற்று விலகியது. தவளையை எடுத்து, தண்ணீர் நிரம்பிய வாளியில் போட்டேன். அது, சற்று அமிழ்ந்து மேலெழுந்து மீண்டும் மறைந்தது. காக்கை சற்று ஏளனமாக பார்த்தபடி பறந்து வேம்பில் அமர்ந்தது4.
இந்த நிகழ்வு, ஒரு பாடம் கற்றுத்தந்தது. மாடியில் தோட்டம் போட்ட சில நாட்களில், தவளைகள் வருவதை கவனித்து வந்தேன். இரண்டு மாடிகள் ஏறி வருமா என்ற ஐயம் இருந்தது. அது, அன்று தீர்ந்தது.
கோடை காலத்தில் மட்டும், மாடித் தோட்டத்தில், பறவைகளுக்காக குடிநீர் வைப்பதை வழக்கமாக்கியுள்ளோம். காக்கை, அண்டங்காக்கை, கரிச்சான், மைனா, கொண்டை குருவி, குயில் என, பலவும் வரும். இந்த ஆண்டு, கடும் நீர் தட்டுப்பாடு நிலவிய போதும், நிறைவேற்றினோம். நொடியில் உளம் புகுந்து, நினைவை பசுமையாக்கும் பறவைகள் பலவிதம்.