Wednesday 11 March 2020

தாய்மை சிந்திய பெண் கல்வி

சாவித்ரிபாய் புலே... இந்திய துணை கண்டத்தில் முதல் பெண் ஆசிரியர். தற்போதைய மகாராஷ்டிரா மாநிலம் உள்ள பகுதியில், கல்வி வாய்ப்பற்ற குடும்பத்தில் பிறந்தார். ஏழை எளிய மக்களுக்காகப் போராடிய தீரர் மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலேயை மணந்தார். அவரது  முயற்சியால்  கல்வி பயின்றார்.
எளியவர்களுக்கு கற்பிக்க, பள்ளியை தொடங்கினார் ஜோதிபா. அதில் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார் சாவித்ரி. கற்பிக்கும் பணிக்கு சென்று திரும்பிய போதெல்லாம், வீசப்பட்ட கற்களையும், மலத்தையும் பொருட்படுத்தவில்லை. மிகவும் கண்ணியமாக எதிர்ப்புகளை சகிப்புடன் வென்றார்.
மாற்றுடை ஒன்றை, எப்போதும் உடன் வைத்திருப்பார். எதிர்ப்புகளை உள்வாங்கும் உடையை வகுப்பறையில் மாற்றி, புதிய உடை அணிந்து பாடம் நடத்துவார். எதிர்த்தவர் எண்ணத்தை, தவிடு பொடியாக்கி கற்பித்தலில் கவனம் செலுத்தினார்.
* தீண்டத்தகாதவர் என, பெரும் பிரிவு மக்களை ஒதுக்கி  தண்ணீர் தர மறுத்தது ஆதிக்க சமூகம். வீட்டிலேயே தண்ணீர் எடுக்க  அனுமதித்து, அந்த கொடுமையை தவிடு பொடியாக்கினார்.
*விதவையாகும் சிறுமியரின் தலையை மழிக்கும் கொடிய வழக்கம் நடைமுறையாக இருந்தது; அதற்கு எதிராக முழங்கினார். மழிக்கும் பணியைச் செய்த பணியாளர்களை திரட்டி கற்பித்து, அந்த  கொடுமைக்கு முடிவு கட்டினார். விதவை மறுமணங்களுக்கு முக்கியத்துவம் தந்தார்.
'மஹிளா சேவா மண்டல்' என்ற பெண்கள் சேவை மையத்தை, 1852ல் துவங்கினார். மனித மாண்பை உயர்த்தவும், பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரும்பாடுபட்டது அந்த அமைப்பு.
மகாராஷ்டிராவில்,  1876 முதல் 78 வரை பெரும் பஞ்சம் நிலவியது. அந்த காலத்தில் பட்டினியைப் போக்க கணவருடன் இணைந்து கடுமையாக உழைத்தார். துயரம் தீர பல ஆலோசனைகளை முன்வைத்தார். இலவச உணவு திட்டத்தை அமல்படுத்தி பசி பிணி போக்கினார்.
பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு, வீட்டில் தங்க வைத்தார். அவருக்குப் பிறந்த குழந்தையை வளர்த்து, மருத்துவம் படிக்க வைத்தார்.
கைவிடப்பட்ட பெண்களைக் காக்கும் வகையில், 'பால்ஹத்திய பிரதிபந்தக் கிருஹா' எனும் இல்லத்தைத் துவக்கினார்.
சாவித்ரியிடம் கற்ற மாணவி முக்தாபாய், 1855ல் ஒரு கவிதை எழுதினார். அது,  ‘தியானோதயா’ இதழில், 'மங்குகள், மகர்களின் துக்கம்' என்ற தலைப்பில் பிரசுரமானது. சாவித்ரிபாயின் பணி அந்த கால சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை அது தெளிவாக்குகிறது.
அந்த கவிதை:
 ஓ இறைவா...
எங்கள் மதம் எது என்று சொல்
வாழ்க்கையை
செம்மை வழி நடத்த கற்பி
உயர்வு தாழ்வை வளர்க்கிற மதம்
பூமியை விட்டு ஒழியட்டும்
மனதில் புகுந்த
இழிந்த சாதி, மத இருள் விலகட்டும்...

கல்வி எனும் அறிவு மருந்து...
ஏழ்மை, நோயால் வாடும்
மங்கு, மகர்களை
குணப்படுத்தட்டும்.
***
மகாராஷ்டிராவில்,  பிளேக் நோய் தாக்கம், 1897ல் அதிகம் இருந்தது. ஆங்கிலேய அரசு நோய்த்தொற்றை தடுக்க கடும் சட்டங்களை  அமல்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் தனிமை படுத்தப்பட்டனர் . அவர்களை பிரித்து வைத்தது சட்டம். இதை எல்லாம் தாண்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார் சாவித்ரி.
சாவித்ரியின் வளர்ப்பு மகன் யெஸ்வந்த். மருத்துவம் படித்து ராணுவ பணியில் ஈடுபட்டிருந்தார். தென் ஆப்பிரிக்காவில் பணியாற்றி விடுமுறைக்காக ஊர் திரும்பியிருந்தவரை, ஊருக்கு வெளியே ஒரு மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்ரி.
பாதிக்கப்பட்டவர்களை தூக்கி வந்து, அங்கு சிகிச்சை அளித்தார். உயிர் காக்கப்போராடினார். பாதிக்கப்பட்ட, 10 வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை  தூக்கி வந்த போது, 66 வயதான சாவித்ரிக்கு, அந்த நோய் தொற்றியது.  சிகிச்சை  பலனின்றி மரணமடைந்தார். அவர் துாக்கி வந்த சிறுவன் பிழைத்தான்.
வாழ்க்கையை, சேவையால் நிறைத்தவர் சாவித்ரிபாய். இந்தியக் கல்வியின் தாய் என போற்றத்தக்கவர்.
கவிதைகள் பல எழுதியுள்ளார். மராத்தி மொழியில் நவீன கவிதைகள்  இவரின் அனுபவத்தில் இருந்தே துவங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல பொருண்மைகள் சார்ந்து கவிதைகள் பாடியுள்ளார்.
 அவர் பாடிய கவிதை ஒன்று :
போ...  படி...
சோராமல் உழை
சொந்தக்காலில் நில்
ஞானத்தை தேடு...
செல்வம் சேர்
***
ஞானம் இழந்தால்...
விலங்காவாய்
அறிவற்றால்  அழியும்
***
சோம்பல் படாதே
போ... படி !
ஏழை எளிய
மக்களின் துயரை துடை
***
பொன்னான வாய்ப்பு
போ... படி...
அடிமைகளுக்கு அறிவை அளி
தடுக்கும் சங்கிலியை உடை.
***
சாவித்ரிபாய் பிறந்து, இரண்டு நுாற்றாண்டுகள் ஆகிவிட்டன. அவர் எதற்காக போராடினாரோ அந்த நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. அந்த பணியை பலர் தொடர்கின்றனர். அது நிறைவடையவில்லை. அந்த பணியை முழுமையாக்கி முற்றுப்புள்ளி வைப்போம்.