Thursday 14 March 2019

கூரிய வாளாற் குறைபட்ட கூன்பலா...

ஒளைவையின் தனிப்பாடல் ஒன்றின் துவக்க வரி இது. இரண்டு வாரங்களாக, இந்த கவிதை, உரிய இடைவெளியில் அதிகாலை, காலை,  முன்இரவு, பின்னிரவு, நள்ளிரவு என... வீட்டில் ஒலித்துக் கொண்டே இருந்தது. வழக்கமான வகுப்பு பாடத்தை படித்து முடித்த பின், இந்த பயிற்சியை மேற்கொள்வார்.
முதலில்  ஒப்புவித்தல் பாணியில் துவங்கி, கல்யாணி ராகத்தில் இசை வடிவமாக்கி பயற்சியை கூர்மையாக்கிக் கொண்டிருந்தார் மகள். அவரது பயற்சி வடிவம்... ஓரிலையாய், கொம்பாய், உயர் மரமாய் – சீரிய வண்டு போல் கொட்டையாய், வன்காயாய்ப் பின் பழமாய்... என  காட்சியாக மனதில் பதிந்தது.
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்...
என,
வளர்மதியிடம், முதலில் ஒப்புவிக்க துவங்கியவர், பின்னர் பொருத்தமான இசை வடிவத்தைக் கண்டறிந்து நிகழ்த்தத் துவங்கினார். பள்ளி பாடத்தை முடித்து  அவருக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நிகழ்ந்தது. அதிகாலை எழுந்ததும், இரவில் துாங்கப் போகும் முன் என, தொடர்ச்சியாக நடந்தது. 
அந்த நிகழ்த்துதல் வீட்டை  நிறைத்து நெகிழ வைத்து. மனங்களைப் புதிப்பித்துக் கொண்டே இருந்தது.
ஒளவையின் பாடல் வரிகள் சொல்லும் பொருள் போல, இயல்பாக அவரின் பயிற்சியை புரிந்து கொண்டேன்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான, ஒளவை பாடல் ஒப்புவித்தல் போட்டிக்கு அவர் தயாரான இரண்டு வாரங்களும், நாட்கள் இப்படித்தான் நடந்தது.
இது போன்ற போட்டிகள் பற்றி ஒரு தெளிவை  உருவாக்கியுள்ளோம்.  போட்டியில் பங்கேற்பு என்பது மட்டும் தான் முக்கியம். பயிற்சியை நிறைவு செய்யும் களம் அது.  அங்கு, ‘பயிற்சியால் பெற்ற திறனை முன்னுணர்த்துவது மட்டுமே நடக்க வேண்டும்; எந்த எதிர்பார்ப்பும் கூடாது...’ என்பது தான் அந்த தெளிவு.
அந்த தெளிவின் அடிப்படையில் செயல்பட்டார். அவரது நிகழ்த்துதல், முதல் பரிசாக தேர்வானது. ஆண்டு தோறும் இது போன்ற ஒன்றிரண்டு பயிற்சிகளில் பங்கேற்று, அறம் கற்று வருகிறார். திருக்குறள் பேரவை நடத்திய, பொருளுடன் குறள் ஒப்புவித்தல் போட்டியிலும் முதன்மை பரிசுக்கு தேர்வாகியுள்ளார். 

ஒளவை இயற்றி, கல்யாணி ராகத்தில் நிகிதா நிகழ்த்திய கவிதையின் வரி வடிவம்:
கூரிய வாளாற் குறைபட்ட கூன்பலா
ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய் - சீரிய
வண்டுபோற் கொட்டையாய் வன்காயாய்ப் பின் பழமாய்ப்
பண்டுபோல் நிற்கப் பணி
vvvv
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்து - பொய்ய
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகஞ் செறியாதோ கைக்கு
vvvv
தடவுநிலைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்!
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாம் சில
அரிசி வேண்டினெம் ஆகத் தான்பிற
வரிசை அறிதலால், தன்னும் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன
பெருங்களிறு நல்கி யோனே அன்னதோர்
தேற்றா ஈகையும் உளது கொல்
போற்றார் அம்ம பெரியோர்தம் கடனே!

ஆலைப் பலாவாக்க லாமோ அருஞ்சுணங்கள்
வாலை நிமிர்க் வசமாமோ - நீலநிறக்
காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா
மூர்க்கனைச் சீராக்க லாமோ...

No comments:

Post a Comment