Thursday 14 March 2019

துயரற்ற தும்பிகள் – இயற்கையின் இன்ப விளையாட்டு

தும்பிகள் பறக்கும் காலம் இது. தட்டான், தட்டாரப்பூச்சி, புட்டான் என, இதை அழைக்க  இன்னும் பல பெயர்கள் உண்டு. நுாதனமான அதன் வண்ணங்கள், கவர்ச்சியானது.   
தும்பிகள் ஏன் பறக்க வேண்டும். உயிர் சூழலை சமன் படுத்த என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் சூழல் சமமாக இல்லையா? இருக்கிறது; இல்லாமலும் இருக்கிறது. 
சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்காவிட்டால், கொசு போன்ற ரத்தக்காட்டேரிகள் பெருகும். சூழலில் அவற்றின் ஆதிக்கம் அதிகமாகும். அவை உணவு தேடி ரத்தம் குடிக்கும். அப்போது, நோயைப் பரப்பும். டெங்கு போன்ற நோய்கள் பரவும். உயிர் சூழல் சமநிலை கெடும்.
மழைக்காலம் துவங்கும் போது உள்ளாட்சி ஊழியர்கள் மழைநீர் கால்வாயை துார்வாருவர். சுற்றுப்புறத்தை துாய்மைப்படுத்துவர். கொசு தடுப்பு மருந்து  தௌிப்பர். தெருவில், சுண்ணாம்பு கோலம் போடுவர்.
இவை எல்லாம், சூழலை சரி செய்வதற்கு தான். நாமும் இது போன்ற செயல்களுடன் இணையலாம். பொது இடங்களில் என்று இல்லை;  நம் வீட்டின் சுற்றுப்பகுதியில்... 
இயற்கையும், சூழலை சமன் செய்கிறது. எப்படி... நம்மை சுற்றி பறக்கும் தும்பிகளை கூர்ந்து கவனிக்கலாம்.
 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் இது. மழை அறிகுறி தென்படுகிறது. லேசான ஈரப்பதத்துடன் சமநிலையில் வெப்பம் கவிகிறது. இந்த சூழ்நிலை பூச்சிகளுக்கு சாதகம். அவை பெருகுகின்றன. கொசுக்கள் பெருகுவதால் சூழல் சமநிலை கெடுகிறது. இதைத் தடுக்கும் விதமாக, தும்பிகள் பெருகுகின்றன. தும்பிகளுக்கு உணவு கொசு மற்றும் அவற்றின் முட்டை. கொசு வாழும் அதே சூழலில் தும்பிகளும் வாழுகின்றன. ஆனால் ஒரு வித்தியாசம். கெசுக்கள் இரவிலும் சஞ்சரிக்கின்றன. தும்பிகள் பகலில் மட்டுமே பறக்கின்றன. வினோதமான வண்ணக்கலவையால் நம்மை நிரப்புகின்றன. கற்பனையை துாண்டி  ஆர்வம் ஊட்டுகின்றன.
சரி இனி தும்பிகள்...
* தும்பி உடலை மூன்று பாகமாகப் பிரிக்கலாம். முதலில் தலை; அடுத்து நெஞ்சு; கடைசியாக வால் போல் உள்ள வயிறு.
தலைப் பகுதியில் பெரிய இரண்டு கூட்டுக்கண்களும், வாயும், இரண்டு உணர்விழைகளும் உண்டு. பறக்கும் போதே, இரையைக் கண்காணிக்கும். உடல் பகுதியில் ஆறு கால்கள் நான்கு இறக்ககைள் உண்டு. கால்களில் மெல்லிய மயிர் போன்ற இழைகள் உண்டு. பறக்கும் போது ஆறு கால்களையும் சிறு கூடை போல் வைத்துக்கொள்ளும். அப்பொழுது அதில் சிக்கும் கொசு , ஈ, பட்டாம்பூச்சி போன்ற பறக்கும் பூச்சிகளை பிடித்து உண்ணும்.
* நான்கு சிறகுகளால் பறக்கிறது. இலையில் பச்சையத்தை சுரண்டினால் எப்படி தெரியும். அதுதான் இறகுகள் வடிவம். மணிக்கு 70 முதல் 90 கி.மீ. கேவகத்தில் பறக்கும் திறன் பெற்றது. இரை பிடிக்கும் போது, வேகம் இன்னும் அதிகம். ஆண்டுக்கு, 14000 முதல் 18000 கி.மீ. வரைப் பறக்கக்கூடியவை. முன் இறக்கைகள் உடலோடு சேரும் பகுதி அகலம் குறைவானது. பின் இறக்கையின் அடிப்பகுதி சேரும் இடம் அகலமானது. வினோதமான இந்த வடிவமைப்பை, ‘சீரிலாயிறகி’ என்கின்றனர். பறந்த நிலையில் ஒரே இடத்தில் நிற்கும். இதை, ஞாற்சி என்பர். பறக்கும் போது திடீர் என, 180 டிகிரி திரும்பி பறக்கும் திறனும் உண்டு.
* இதுவரை, 6000 வகை தும்பிகளை அறிந்துள்ளனர். இந்தியாவில், 503 இனங்கள்  உள்ளன.
* உலகில், 32.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இவை உள்ளதாக கணித்துள்ளனர்.
*பெண் தும்பி,  முட்டைகளை நீரிலோ, நீரருகே உள்ள மண்ணிலோ, நீர்ச்செடிகளிலோ இடுகிறது. முட்டைகள் வெப்ப நாடுகளில் ஒரு மாத அளவிலே பொரிக்கும். குளிர் நாடுகளில், இரண்டு மாதம் முதல், ஏழு மாதங்கள் வரை எடுக்கும். அந்த முட்டைகளில் இருந்து பிறப்பது சிறகில்லாத தும்பி. இது, ஐந்து ஆண்டுகள் வரை, நீருக்குள் வசிக்கிறது. அதன் பின், சிறகு முளைத்து, நம் கற்பனையை பெருக்க பறக்கத் துவங்குகிறது. பின், இரண்டு மாதங்கள் வரை பறந்து திரிந்து மடிகிறது.
சரி, இவை தும்பி பற்றிய பொதுத்தகவல். தும்பி உங்களுக்கு பிடித்த பூச்சி. பார்க்கும் போது மகிழ்ச்சியை தருகிறது. நல வாழ்வுக்கான சூழலை உருவாக்குகிறது. பயிர் விளைச்சலில் உதவுகிறது. இனி தும்பிகளை அதிக கவனத்துடன் ரசியுங்கள்.
 தும்பியை ஒரு ஹெலிகாப்டராக நினைவு படுத்த முடியும்; விமானமாக நினைக்க முடியும். ஆனால் தும்பி பறக்கும் தொழில் நுட்பம் வேறு. அதை அறிய முயலுங்கள்; கற்பனை செய்யுங்கள். புதிய வழியிலான தொழில் நுட்பத்தை உருவாக்குங்கள். அதை பயன்படுத்தி நாம் பறந்து திரியலாம். தும்பிகளையும் பாதுகாக்கலாம். தும்பிகளைப் பற்றி பாட்டுக்களையும் எழுதலாம்.
தும்பியின் தம்பி
காத்தட்டான்
தும்பித்தட்டான்
தம்பி வர்ரான்
நின்னுக்கோ


புதிய சொற்கள்
ஞாற்சி – பறந்து கொண்டே ஓர் இடத்தில் நிற்பது
சீரிலாயிறகி – சீரற்ற இறக்கைகள் கொண்டது
–அமுதன்

No comments:

Post a Comment