Thursday 14 March 2019

ஒரு மரணமும் கொஞ்சம் நன்றியும்

நாகர்கோவிலில் ரயிலை விட்டு இறங்கிய போது, கடும் மழை. ஏற்பாடு செய்திருந்த வாகனம் வரவில்லை. காத்திருந்தேன். அருகே, ஐதராபாத் நகர தம்பதி. கன்னியாகுமரி போகும் பஸ் பற்றி விசாரித்தனர். ‘அதே ரயிலில் போக வேண்டியதுதானே...’ என்றேன். விவேகானந்தபுரத்தில், குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்தள்ளதாக கூறியவர், ஆட்டோ அடாவடி பற்றி அச்சம் தெரிவித்தார். மிகவும் திட்டமிட்ட அவரது பயண நோக்கம்  புரிந்தது.
ஒரு ஆட்டோக்காரர் வந்தார். இடலாக்குடி செல்ல நச்சரி்த்தார். மொழி தெரியாத அந்த தம்பதி, புரியாமல் நடுங்கியபடி நின்றனர். ஆட்டோ சுற்றி சுற்றி துரத்தியது. நான் தடையாக இருப்பதாக கருதிய டிரைவர், எனக்கு சில வசவுகளை வழங்கினார். சிரித்து வாங்கிக் கொண்டேன். வாழ்வதற்கான போராட்டம். சுவாரி பணத்தில் அவருக்கு எத்தனை திட்டமோ...
வழியெல்லாம் மழை. வீட்டு முற்றத்தில், கணுக்கால் அளவு தண்ணீர். அவசரமாக புறப்பட்டு, நாகர்கோவில் வந்தேன். மருத்துவமனை நோக்கி சென்ற போது அவசர அழைப்பு.  தாயார் மரணத்தை உறுதி செய்தார் டாக்டர். நேரத்தை உறுதி செய்யவில்லை.
மரணம் திட்டமிட முடியாதது. அந்த நிகழ்வை, முடித்து கடப்பது எளிதாக இல்லை. காத்திருந்தேன். சிந்திக்க முடியவில்லை. என்ன தகவலை யாரிடம் பகிர்வது. எதுவும் புரியவில்லை. நண்பர் கென்னடி, ‘சமாளிக்கலாம்...’ என்றார்.
சுகாதார அதிகாரி நண்பர் மதன்குமார், சில ஆலோசனைகளை வழங்கினார்.
பிற்பகலில், மரணம் நடந்தது.
மழை தீவிரமாகியிருந்தது. என் சிந்தனையைப் போல், மொபைல் போனும் இயங்கவில்லை.
ஒரு வழியாக, கோவைக்கு போன் பேசினேன். தங்கை கணவரிடம் தகவல் சொன்னேன். ஆலடிவிளை ஊர்த்தலைவர் தம்பி ஜேம்ஸ், தாய் வழி உறவினர்கள் என சொல்லிக் கொண்டே வந்தேன். நண்பர்களுக்கு, கென்னடி தகவல் சொன்னார். மரத்து போனது மனது. அடுத்து என்ன செய்வது...
தந்தை வழி உறவினர் சிலரை அழைத்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. தம்பி பிரபு லைனில் வந்தான். ஊரில் எல்லா ஏற்பாட்டுக்கும் பொறுப்பேற்றான். மருத்துவமனையில் எனக்கு உதவியாக, தம்பிகள், பாலசந்திரன், சுபாசை அனுப்பினான்.
மழை சற்று ஓய்ந்த மாதிரி இருந்தது.
நண்பர் மதன்குமார் மருத்துவமனைக்கு வந்தார். நிகழ்வை முழுமையாக ஒருங்கிணைத்தார். தேவைகளை தகவலாக தந்தார். மாலை, 6:00 மணிக்குள் உடலை அலங்கரித்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றுவது வரை உடனிருந்து வழிகாட்டினார். செயல்பட்டார்.
மழை ஓய்ந்திருந்தது. உடலை கொண்டு வந்தோம். வீட்டு முற்றத்தில் பல நுாறு பேர் அஞ்சலி செலுத்தினர். அடுத்த சிலமணித் துளிகளில், நெடுவிளையில் அப்பாவின் உடல் அருகே, புதைக்கும் பணி நடந்த போது, வடக்கில் மழையின் இரைச்சல் அதிர்ந்தது. அங்கு அஞ்சலி செலுத்தியோரை குளிப்பாட்டியது. மழையின் ஈர சுவட்டில் முகிழ்த்தபடி திரும்பிக் கொண்டிருந்தேன்.
டாக்டர் ரூபி, மருத்துவமனை ஊழியர்கள், நண்பர்கள் கென்னடி, மதன்குமார், தம்பிகள் பிரபு, பாலச்சந்திரன், சுபாஷ், ஊர்த்தலைவர் ஜேம்ஸ், தம்பி ஆல்பிரைட் சலோமன், நண்பன் அதிசய அருள்மணி என, மனத்திரையில் வந்து போயினர். என் கவனத்துக்கு வராத பலர் இருக்கலாம். அவர்களுக்கு  கைமாறாக என்ன செய்வேன்.
கடும் மழையை பொருட்படுத்தாமல் காத்திருந்து அஞ்சலி செலுத்திய, நண்பர் ஜெயா வைகுண்டராஜ், வக்கீல் கனகமணிராஜ் குடும்பத்தினர், உறவினர்கள், ஊர்மக்கள், நண்பர்கள்...
செய்தி பணியாற்றி இரட்டை குடியுரிமை போல் வாழும் என் போன்றோர் என்ன செய்ய முடியும்... நன்றி என்ற ஒற்றை சொல் பகிர்வதைத் தவிர...
மழையில் நனைந்து கொண்டே திரும்பிய போதும், வீட்டில் நண்பர்கள் கூடி சிறு அஞ்சலி நிகழ்வை வடிவமைத்தனர். இதில் பங்கேற்ற குடிசை ஆசிரியர் திரு. இரத்தினசுவாமி, அவரது அன்பு மகன் பகத்சிங், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லுாரி முதல்வர் திரு. எட்வர்டு, வரலாற்று ஆய்வாளர் நண்பர் தினகர், பத்திரிகையாளர் கென்னடி ஆகியோரையும் நினைவில் கொள்கிறேன்.
என் முகமறியா நட்பு வட்டாரத்தில், முகநுால் தகவலால் துயரத்தை பகிர்ந்து ஆறுதல் சொன்ன பல நுாறு  தோழர், தோழியருக்கு என் மனம் திறந்த நன்றிகள்.
நேரில் வரமுடியமால், தகவல் தெரியாமல், தொலைபேசியில் ஆறுதல் பகிர்ந்த நண்பர்கள் என அனைவருக்கும் என் நிறைவை சொல்வதைத் தவிர... என்ன  செய்ய இயலும்.

No comments:

Post a Comment