Thursday 21 March 2019

உத்திர பட்டையும் பாயாசக் கஞ்சியும்

நினைவிடத்தை, குழிவாசல் என அழைக்கும் வழக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உண்டு. மையக்குழி என்றும் அழைப்பர். பங்குனி உத்திர நாளில்,  சில குழுக்களுக்கு குழிவாசல் முக்கியத்துவம் பெறும்.
அன்று, நினைவிடத்தை துலக்கி, சுண்ணாம்பு தெளித்து வெற்றிலை, பாக்கு, பூக்களால் படையல் வைத்து, அந்த குடும்பத்தினர் வழிபடுவர். தொடர்ந்து, அரைப்பத இனிப்பில் கஞ்சி காய்ச்சி, முற்பகல் முதலே விநியோகிப்பர். கஞ்சி குடிக்க, பனை ஓலை பட்டைகள் தயாராக இருக்கும்.
நினைவிடத்தில் கஞ்சி காய்ச்சி விநியோகிக்க வழி இல்லாத ஏழைகள், அண்டை அயலில் ஊற்றும் கஞ்சியை, பட்டைகளில் குடித்து விட்டு, பாத்திரங்களில் வாங்கியும் செல்வர்.
ஒரே பிரிவை சேர்ந்தர்கள் வசிக்கும் ஆலடிவிளை கிராமத்தில், காலசுவாமி, மன்னர் ராசா ஆகியோரை முதன்மை தெய்வமாக வழிபடும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இது போன்ற, ‘கஞ்சி வார்த்து  ஊற்றும்’ நடைமுறையைப் பின்பற்றுவர்.
கஞ்சி காய்ச்சுவதற்கு, ‘குட்டுவம்’ என்ற வெண்கல கலங்கள் பயன்படுத்தப்பட்டன. எங்கள் வீட்டில் இரண்டு குட்டுவங்கள் உண்டு. அவற்றைக் கேட்டு உத்திரத்துக்கு, ஒரு வாரத்துக்கு முன்பே, போட்டி போட்டு முன்பதிவு செய்ய வருவதை பார்த்திருக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்வரை கடைபிடித்த  நடைமுறை இது. கலாசாரமும், நம்பிக்கையும் எவ்வளவு வேகமாக மாறிவருகிறது. 
#மாறும்கலாசாரம்

No comments:

Post a Comment