Thursday 21 March 2019

அடைக்கலம் வரும் குருவிகள்

அது, இந்திய –சீன போர் முடிந்திருந்த காலம். இந்தியாவின் தென்முனையில் உள்ள எங்கள் கிராமத்திலும், போர் பீதி நிறைந்திருந்தது. பகலில், விமானச் சத்தம் கேட்டால் ஒருவகை பதட்டம் நிலவும். இரவில் என்றால், விளக்கை அணைக்கை சொல்லி பதட்டமாக சமிஞ்சை செய்வர். குரலற்ற சொற்களை காற்றி்ல் ஏற்றுவர்.
அனேகமாய், அது 1965 ம் ஆண்டு என  நினைக்கிறேன். எங்கள் கிராமத்துக்கு மின்சாரம் வரவில்லை. புன்னைக்காய் எண்ணெய் விளக்குகள் தான் அதிகம். தெரு விளக்குகளுக்கு மண்ணெண்ணெய். எங்கள் வீட்டு மாடியில் சீட்டுக்குருவிகள் கூடு கட்டியிருந்தன. அவற்றை நாங்கள் அடைக்கலான்குருவி என்போம். மனதில் எப்போதும் அடைக்கலமாக இருக்கும்.
அந்த குருவிகளை சலனப்படுத்த என் பெற்றோர் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அவை, எங்களுடன் வாழ்ந்தன. மாடியில் உலரும்  புழுக்கிய நெல், அறுவடையாகி களத்தில் விழும் நெல், மாட்டு சாணத்தில் நெளியும் புழுக்களை உண்டன. மாடிக்கும், களத்துக்கும், தொழுவத்துக்கும் மாறி மாறி பறந்து கிறங்கடித்தன.
கிட்டத்தட்ட, 60 குருவிகள் வரை இருக்கலாம். முகத்தில் கரியை பூசியது போல் ஆண்குருவிகள் அழகு காட்டும். மாடி எறவாணம் முழுக்க அவற்றின் கூடுகள் தான். ‘சிட் சிட்’ என, குழாங்கற்களை உரசுவது போல் அவை அன்பைப் பரிமாறிக் கொள்ளும்.
ஒருநாள், ஒரு குஞ்சு கூட்டிலிருந்து நழுவி, மாடியில் விழுந்து கிடந்தது. அதை அப்பாவிடம் காட்டினோம். வரிசை கட்டி கூடுகள் இருந்ததால், அடையாளம் காண முடியவில்லை. கூட்டில் நழுவியது மீண்டும்  அங்கு சேர வாய்ப்பில்லை என, அப்பா சொன்னார்.
அடைக்கலான் குருவிகளின் மகிழ்ச்சியை, காதலை, கோபத்தை நான் நன்கு அறிவேன். அதன்பின், 91 வரை தொடர்ந்தும், இடைவெளிகளிலும் அவற்றை கவனித்துள்ளேன். எண்ணிக்கையில் ஏற்ற இறக்கம் இருந்ததில்லை. சீராகவே வாழ்ந்தன.
93 ல், அப்பா மரணத்துக்குப்பின்,  விவசாய உற்பத்தி,  குறைய ஆரம்பித்தது. தொழுவத்தில் மாட்டின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்தது. இரை கிடைப்பதில், சிட்டுகளுக்கு பிரச்னை ஏற்பட்டது. அவையும் படிப்படியாக குறைந்தன. உற்பத்தி சார்ந்த பகுதிகள் நோக்கி அவை நகர்ந்திருக்கலாம். ஆனால், மனதின் விளிம்பில் அவற்றின் சிறகசைப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
சென்னை, மவுண்ட் ரயில்நிலையம் அருகே, உடற்பயிற்சிக்காக, இரண்டரை ஆண்டுகளாக அதிகாலையில் சென்றுவருகிறேன். பயிற்சி மைய ஜன்னலை திறந்தால் சுற்றிலும், மூன்று மொபைல் டவர்கள் தெரியும். மையத்தை ஒட்டிய ஒரு வீடு மிகவும் பழமையானது. அங்கு, ஆறு மாடுகள் உள்ளன. அவை உலவுவதற்கு கொஞ்சம் பரப்பு காலியாக உள்ளது. அதில் சிறு புதரும், சில மரங்களும் உள்ளன.
அந்த வளாகத்துக்கு, தினமும் இரண்டு உண்ணி கொக்குகள் வரும். மாடுகளிடம் அவற்றுக்கு இரை கிடைக்கிறது. புதரில் சிட்டுக்குருவிகள் உண்டு. கிட்டத்தட்ட, 30 குருவிகள் இருக்கலாம். அவற்றுக்கு மாட்டுச் சாணத்தில் புழுக்கள் கிடைக்கின்றன. தினமும் பார்க்கிறேன். எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்கள் இல்லை.
பயிற்சி நாட்களில், சில நிமிடங்களாவது இவற்றை பார்க்கும் அனுபவம் பெறுவேன். அப்போது, அணில்களுக்கு பயந்தது போல், பரபரப்பாக பறந்து கலகலக்கும் சிட்டுகளை கவனிக்க தவறுவதில்லை. அந்த காட்சி விரிந்து மொபைல் கோபுரங்களையும் விலகவிடுவதில்லை.      

No comments:

Post a Comment