Friday 3 April 2020

பறக்கும் அனுபவம்

சில மாதங்களாக, ‘மெட்ரோ’ ரயிலில் அலுவலகம் சென்று வந்தேன். பொருளாதாரத்தில் மத்திய, உயர் மத்திய தர பிரிவினர் தான் இந்த சேவையை சென்னையில் பயன்படுத்துகின்றனர். ஏழை எளியவர்கள் வேடிக்கை பார்க்க மட்டுமே...
என்றாவது ஒருநாள் பயணிப்பர்.
மெட்ரோ ரயில் அனுபவம் சற்று வித்தியாசமானது. என் பயணம், சென்னை  பரங்கிமலை ராணுவ அகாடமி எதிரில் உள்ள நங்கநல்லுார் சாலை மெட்ரோ நிலையத்தில் துவங்கும். முதலில் சில நாட்கள், ஆலந்துார் நிலையத்தை பயன்படுத்தினேன். அங்கிருந்த வெறுமையால் மாறினேன்.
நங்கநல்லுார் நிலையம் இதமானது. வாகனத்தை நிறுத்தி  நகர்ந்தாலே,  மரங்கள் அடர்ந்த  வனத்தில் பயணிப்பது மாதிரி இருக்கும். நிலையத்தின் ஒருபுறம், புனித பீட்டர் பள்ளியும், மறுபுறம், இந்திய ராணுவ அதிகாரிகள் குடியிருப்பும் உள்ளன. இரண்டுமே மரங்களால் அடர்ந்தவை. ரம்மியம் தருபவை. நிலைய படிக்கட்டில் ஏற மரங்களின் ரம்மியம் மாறியபடி கண்ணை தழுவும். மரங்களடர்ந்த மலையில் நகர்வது போல் தோன்றும்.
நடைமேடையில், காகங்களும், மைனாக்களும் மனம் கொள்ளும். புறாக்கள் பறந்து திரியும். திரும்பும் அந்தி வேளையில்  படிக்கட்டில் இறங்கும் போது, கரும்பருந்துகளும், வவ்வால்களும் வரவேற்கும். விமான நிலைய திசையிலிருந்து, பெரிய பழந்தின்னி வவ்வால்கள் பறப்பது ஆச்சரியம் தரும்.
பீட்டர் பள்ளி வளாகத்தில், சிறுவர்கள் வில் அம்பு எய்ய பழகுவர். அதை அன்னையர் பூரிப்புடன் பார்த்திருப்பர்.
பணி நெருக்கடியால் ஏற்படும் மன இறுக்கத்தை, இந்த நகர்தலால் நெகிழ்த்திக் கொள்வேன். டிசம்பர், ஜனவரியில் பனி தங்கிய மர முகடுகள் மயக்கின. வசந்த ராணி மரத்தின் துணை இனங்கள் பல அங்கு உள்ளன. அவை வெளிர் ஊதா நிறத்தில் விடாமல் பூத்து  மகிழ்வித்தன.
சுணக்கம் இன்றி வரும் ரயில்கள், நிலையத்தில், ஐந்து நிமிடங்களுக்கு மேல் தங்க விட்டதில்லை. தங்கும் நிமிடங்கள் இனிமையானவை. நிலையத்தின் இடது புறம் உள்ள, பரங்கிமலை வரை  பார்வை படரும். மனம் மகிழும்.
மெட்ரோ பயணம், கிட்டத்தட்ட விமானத்தில் பயணிப்பது போன்றது தான். பாதுகாப்பு தணிக்கை, அறிவிப்புகள், திறந்து மூடும் கதவுகள், குளிர் சூழல், பயணக் காட்சிகள்  அந்த எண்ணத்தை தரும்.
 சின்னமலை வரை, அரை வானில் அசைந்து வரும் மெட்ரோ. அடையாறு ஆற்றை கடந்து, சைதாப்பேட்டையில் பூமிக்குள் புதையும். ஆயிரம் விளக்கு வரை, 30 மீட்டர் ஆழ பொந்தில் பயணம். நிலையம் தவிர, இடையில் நின்றால், கலக்கம் வரும்.
 அந்த அனுபவம்  வித்தியாச மனநிலையை உருவாக்கும். கிட்டத்தட்ட, நான்கு மாதங்கள் பயணித்திருப்பேன். தினமும் அனுபவத்தில் மாற்றம் இல்லை.
தமிழகத்தில், உயர்தர சேவையை வழங்குவதில் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு முதலிடம் தரலாம். பயிற்சி பெற்ற பணியாளர்கள். முகம் சுளிக்காத சேவை, முறையான வழிகாட்டல், சரியான தொடர்பு மொழி என சொல்லிக் கொண்டே போகலாம்.
பண பேரத்துக்கு வழியில்லை. எல்லா சேவைகளுக்கும் கட்டணம், மின்னணு பரிவர்த்தனையில் நடப்பதால், வார்த்தை தடிப்புக்கு வழியில்லை.
தற்காலிக தனிப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது பொருந்தாது.  பயண சீட்டு வாங்கும் போது சில்லறை தகராறுகள் ஏற்பட்டு, வார்த்தை தடித்துள்ளதை பலமுறை கவனித்துள்ளேன். பயிற்சி பெற்ற ஊழியர்களும் எரிந்து விழுவதை கண்டிருக்கிறேன்.
வாகன நிறுத்த இடங்களில், வாடிக்கையாளர்களை காக்க வைத்து, அரட்டை, அலைபேசி தடவல் என கவனப்பிசகுடன் செயல்படும் ஊழியர்களை கண்டிருக்கிறேன். மிகவும் கராராக பணிபுரிவோரும் உண்டு. அவர்களுக்கு எப்போதும் நன்றி சொல்ல தவறியதில்லை.
ஆயிரம்விளக்கில் இறங்கினால், சாலையோரத்தை வசிப்பிடமாக கொண்ட குடும்பங்களை கடந்து, சில மீட்டர் துாரத்தில் ஒயிட்ஸ் சாலைக்கு வரவேண்டும்.
இப்படியான அனுபவம், கடந்த வாரம் சற்றே சிதைந்து வேறொரு திசையில் மாறியது. இன்று முற்றிலும் மாறான திசையில்...

No comments:

Post a Comment