Saturday 4 April 2020

புரண்டு வளரும் கணுக்கொடி பிரண்டை

தொடராக அடுக்கியது போல் காணப்படும். பற்றுக் கொடி உதவியுடன் தொற்றி வளரும். சதைப் பற்றுள்ளது. மனித எலும்பு வளர்ச்சிக்கு உகந்தது.
பிரண்டை.
இது கொடி வகை தாவரம். வேலிகளில் படர்ந்திருக்கும். குறுங்காடுகளில் காணலாம். இப்போது, காய்கறிச் சந்தைகளில் நலம் காக்க, காத்துக் கிடக்கிறது. செங்கல்பட்டு ரயில்நிலைய சாலை, மாம்பலம் சந்தை, ஆதம்பாக்கம் பழமுதிர் சோலை என பல இடங்களிலும் காண்கிறேன்.
எலும்புக்கு வலிமை அளிப்பதால் ‘வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு. வஜ்ஜிரம்  என்றால் வைரம் என பொருள்.
நான்கு கோணங்களை உடைய சதுரப் பிரண்டை. அனைத்து இடங்களிலும் காணப்படும். ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை என, வகைகள் பல உண்டு. பசுமையாகக் காட்சி தரும்.
இதய வடிவ இலைகள்; சிவந்த நிற கொத்தாக பழங்களைக் கொண்டது.
‘சிஸ்ஸஸ் குவாட்ராங்குலாரிஸ்’  Cissus quadrangularis என்பது தாவரவியல் பெயர். ‘விடாஸியே’ Vitaceae என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.
கால்சியம், சைடோஸ்டீரால்  Sitosterol, இரிடாய்ட்ஸ்  Iridoids, குவர்சிடின்  Quercitin, கரோட்டின் Carotene போன்ற தாவர வேதிப்பொருட்கள்  நிறைந்தது.
பசிக்காமல் அவதிப்படுவோர் பிரண்டைத் துவையல் சாப்பிடலாம். இளம் தண்டிலிருக்கும் நாரை நீக்கி, வதக்கி உப்பு, புளி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, துவையலாக அரைக்கலாம். தேங்காயும் கலக்கலாம். செரிமானத் திறனை  அதிகரித்து, பசி உண்டாகும். இலைகளையும் பயன்படுத்தி துவையல் செய்யலாம்.
வயது முதிர்வால் தோன்றும் சுவையின்மைக்கு பிரண்டைத் துவையல் அரு மருந்து. குடலில் பூச்சிகளையும் அழிக்கும்.  பெண்களுக்கு மாதவிடாய்க் கால சோர்வை நீக்கும்.
உடலில் உண்டாகும் வீக்கங்களைப் போக்கும். எலும்பு முறிவுக்கு பின் உண்டாகும் வலி, வீக்கத்தை  குறைக்கும். முறிந்த எலும்புகள் ஒன்றிணைப்பதை துரிதப்படுத்தும்.
பிரண்டைத் தண்டுகளை நறுக்கி, மோரில் உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்து, வடகமாக்கி குளிர் காலத்தில் பயன்படுத்தலாம்.
இவை எல்லாம்,  மருத்துவர்களிடமும், புத்தகங்களிலும் படித்தது.
அனுபவ கதை:
மருந்துவாழ் மலையிலும், அது சார்ந்த குறுங்காட்டிலும் பிரண்டைக் கொடி அதிகம்.  ஈன்ற பசுவின், நச்சுக் கொடி விழ, பிரண்டை கொடியை கட்டும் என் கிராமத்தில் வழக்கமாக இருந்தது. விழுந்த நச்சுக் கொடியை, கள்ளிச் செடியிலும், புன்னை மரத்திலும் வைப்பர்.
தென்மேற்கு பருவ மழைக்கு பின்னான காலத்தில், பிரண்டை துளிர்க்கும். இளம் பிரண்டை துளிர்களை சேகரித்து வந்து சுவை மிக்க, ‘தீயல்’ செய்வார் என் அம்மா. குளிர்காலத்தில் அது இதம் தரும்.
என் இணையருக்கு, பிரண்டையில் தீயலுடன், துவையலும் செய்யத் தெரியும். சுவை அமோகமாக இருக்கும். எங்கள் மாடித்தோட்டத்தில், மூன்று வகை பிரண்டை செடிகள் உள்ளன. உருண்டை முகம், இரட்டை முகம், நான்முகம் என, பல முகங்களைக் கொண்டது. இன்றைய உணவில், வளர்மதியின் பிரண்டை துவையல் நலன் சேர்த்தது.





No comments:

Post a Comment