Tuesday 24 December 2019

அறைக்குள் வந்த இந்திர வானம்

மார்கழியில் அந்தியும், அதிகாலையும், மனம் மயங்க செய்பவை. அந்தி வானுடன், இந்திர ஜாலமும் சேர்ந்தால்...
கலை விமர்சகர், ஓவியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகம் கொண்ட சாகித்ய அகாடமி விருது பெற்ற, பிரபல எழுத்தாளர் நண்பர் இந்திரனை, 80களிலிருந்து அறிவேன்.  அவரது, ‘அறைக்குள் வந்த ஆப்ரிக்க வானம்’ கவிதை தொகுதியை அப்போதே வாசித்திருக்கிறேன். அவை நீங்காத படிமமாக மனதில் தங்கியுள்ளது.
சென்னைக்கு பெயர்ந்த பின், அவரை நேரில் அறிவேன். இலக்கிய வட்டம் வழி நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. மிகவும் எளிமையாக பழகும் மனம் கொண்டவர். தொழில் தொடர்பாக உரையாடிய தருணங்களும் உண்டு. அவை எல்லாம், வாழ்வில் முக்கியத்துவம் பெற்ற நாட்கள்.
சிறந்த உரையாடல் ஆளுமை. எது கேட்டாலும் விளக்கமாக பதில் சொல்வார். உலகளாவிய அறிவு மற்றும் ஆளுமைத் தொடர்பு கொண்டவர். அவரது பரந்த வாசிப்பு அனுபவம் எப்போதும் வியப்பூட்டும். உரையாடல்களில் அறிவு வளம் பெறும்.
கடந்த வாரம், தொடர்பு கொண்டு, என் வீட்டுக்கு வருவதாக கூறினார். மிகவும் மகிழ்ந்து வரவேற்றேன். குறிப்பிட்டபடி, ஞாயிறன்று மாலை, இணையருடன் வந்தார். உரையாடல் வழி விளக்கங்கள் பல தந்தார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவருடன் கழித்த பொழுது மிகவும் மகிழ்ச்சியானது. அறிவுப்பூர்வமானது.
மாலை மயங்கிய போது மாடித் தோட்டத்தில் உரையாடினோம். தோட்டத்தை பாராட்டினார். என் மகள் பாடிய, ‘யாருக்கு பொன்னம்பலம் கிருபை இருக்குதோ...’ என்ற கோபால கிருஷ்ண பாரதி எழுதிய கீர்த்தனையை, நுட்பமாக ரசித்தார்.
அறைக்குள் வந்த இந்திர வானம், அன்பு மழை பொழிந்தருளியது.