Saturday 12 December 2020

மானுடத்தில் புதுமை கண்ட திரைக்கலைஞன்

 மானுடத்தில் புதுமை கண்ட திரைக்கலைஞன் 

‘என் கதைகள், உலகம் முழுவதும் வாழும் மனிதர்களின் பொதுமைப் பண்மை அடிப்படையாகக் கொண்டவை. பொருளற்ற சுயகர்வம் பிடித்த கொரியர்களுக்கு இது புரியாது. அவர்கள் உலகம் முழுதும் பயணம் செய்தால் மட்டுமே இதை புரிவர். மனிதர்களின் தனித்தன்மையை என் படத்திற்குள் கொண்டு வருகிறேன்...’ 

ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார் திரைப்பட இயக்குனர் கிம் கி டக். 

கிழக்காசிய நாடான கொரியாவை சேர்ந்தவர். உலக சினிமா ரசிகர்களை ஈர்த்தவர். இவரது, ‘ஸ்டாப்’ என்ற படம், கிழக்காசிய நாடான ஜப்பான் புகுஷிமா அணுமின் உலை விபத்து பயங்கரத்தை மையமாகக் கொண்டது. இந்தப் படத்தை, 241 பேர் மட்டுமே பார்த்தாக, கொரிய திரைப்படக் கமிஷன் தெரிவித்துள்ளது. இந்த படம், 8541 டாலர் செலவில் தயாரானது.

கொரியாவில் அணு உலை வெடிப்பு என்ற கற்பனையை அடிப்படையாகக் கொண்டு, மற்றொருவரால் எடுக்கப்பட்ட, ‘பண்டோரா’ என்ற படத்தை, 1.78 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இது, 8.5 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டது. 

கிம் கி டக் பதிவு செய்த காட்சிகள் தயக்கமற்றவை. யதார்த்தத்துக்கு நெருக்கமானவை.

கடந்த, 20 ஆண்டுகளில், 23 படங்களை இயக்கியுள்ளார். இவற்றில், ‘பியடா’ என்ற படம், வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா – 69ல், ‘தங்க சிங்கம்’ விருது வென்றது. மற்றொரு படம், ‘3- அயர்ன்’ வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா – 61ல் சிறந்த இயக்குனருக்கான, ‘வெள்ளி சிங்கம்’ விருது பெற்றது. 

கொரியா டைம்ஸ் இதழுக்கு, டிசம்பர் 14, 2016ல் கிம் கி டக் அளித்த பேட்டியிலிருந்து... 

கேள்வி: ஜப்பான் புகுஷிமா அணுஉலை விபத்து பற்றி படம் எடுக்க காரணம் என்ன?

கிம்: பூமியை பல இயற்கை பேரழிவுகள் அச்சுறுத்தி வருகின்றன. ஆனால், அணுஉலை வெடிப்பு பாதிப்பு முற்றிலும் வித்தியாசமானது. கதிர்வீச்சு கசிவு, அதன் பக்கவிளைவுகளை நேரடியாகவேப் பார்க்கிறோம். நாட்கள் செல்லச் செல்ல அதன் கோரம் அதிகமாகிறது. கொரியா, சீனா போன்ற நாடுகள் அணு மின் நிலைய எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. அமெரிக்கா போன்ற நாடுகள் அணு சக்தியைச் சார்ந்தே இயங்குகின்றன. இந்த செயலை நிறுத்த விரும்பினேன். அதன் அடிப்படையில் இந்த படத்தை எடுத்தேன். 

என் படம் உலகப் பார்வையாளர்களுக்கானது. எனவே கதை ஜப்பானில் நடைபெறுவது போல் எடுத்தேன். ஜப்பானியர்களையே பயன்படுத்தியுள்ளேன். 

கேள்வி: பேரழிவுகளை தனியாக படமாக்கும் போது கிடைக்கும் அனுபவம் என்ன?

கிம்: இதை பேரழிவுத் திரைப்படம் என்றால் சங்கடமாக உணர்கிறேன். முதலில் கணினியில் கிராபிக்ஸ் முறையில் சில காட்சிகளை உருவாக்கத் திட்டமிட்டேன். ஆனால், நான் நினைத்தபடி அது இல்லை. எனவே, ‘டிராமா’ அடிப்படையில் முடிவு செய்தேன். 

அணு உலை வெடிப்பு, கதிர்வீச்சு கசிவுகளால் பக்க விளைவு, தனிப்பட்ட இழப்பு, பொருளாதார இழப்பு மற்றும் தேசிய அளவிலான பாதிப்புகளைக் காட்டாமல், மனித மனங்களில் ஏற்படும் தடுமாற்றத்தை திரையில் காட்டவேண்டியிருந்தது. ஒருவேளை, கதையை இன்னும் ஆழமாக அணுகியிருக்க வேண்டும். இந்த அனுபவம் சற்று கடினமானது. 

கேள்வி: பார்வையாளர்கள் தந்த பின்னூட்டம் என்ன?

கிம்: ஜப்பானிய திரைப்பட விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அங்கே, ’ஸ்டாப்’ திரையிடப்பட்டது. உள்ளூர் ரசிகர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது. குறைந்த பட்ஜெட் திரைப்படம் என்பதை புரிந்திருந்தனர். வடிவத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றனர். 

கேள்வி: உங்கள் கதாபாத்திரங்கள் உளவியல் மீது கவனம் செலுத்த என்ன காரணம்?

கிம்: இருபது ஆண்டுகளுக்கும் மேலாக படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். அவற்றை திரும்பிப் பார்த்தால் எல்லாமே மனிதர்களின் கதைகள் என புரியும். அனைத்தும் செலவில்லாதவை. ஸ்பெஷல் எபெக்ட்ஸ் போன்ற தொழில் நுட்பங்களுக்கு பணம் செலவு செய்வதில்லை. இதனால், கதாபாத்திர செயல்பாட்டில் அதிகக் கவனம் செலுத்துகிறேன். என் படத்தைப் பார்த்தால், சொல்லவரும் செய்தியை உணர்வீர்கள். 

கேள்வி: உங்கள் படங்கள், உடலுறவு மற்றும் சங்கடம் தரும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து அவற்றைக் காட்சிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

கிம்: என் படங்களில் பொய் சொல்ல விரும்பவில்லை. மேம்படுத்திய எண்ணத்துடன் தான் புதிய படத்தை எடுக்கிறேன். ஒவ்வொரு முறையுமே, இது போன்ற காட்சிகளை சுதந்திரமாக வெளிப்படுத்த உரிமை இருப்பதாகவே நினைக்கிறேன். 

எந்த சிந்தனையுமே தராத பல திரைப்படங்கள் உள்ளன. என் படங்கள் அது போலானவை அல்ல. கதைக்குள், மக்கள் பொருந்திப் போவது அல்லது, பொருந்தி போக வைப்பது போன்ற திரைப்படத்தை என்னால் உருவாக்க முடியாது. என் சொந்த உலகம் தான் கதை மையமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் என் படத்திற்குள் வரும் ரசிகர், அதே கதையை வேறுவிதமாக உணர முடியும். 

கேள்வி:  திரைப்படம் உருவாக்கும் போது, எதை முக்கிய அம்சமாக உணர்கிறீர்கள்?

கிம்: நான், நானாக இருக்க வேண்டும். நேர்மையான திரைப்படத்தை உருவாக்க இது மிகவும் அவசியம். பார்வையாளரின் ரசனையை மனதில் வைத்தோ, உலக சினிமா சந்தையை மனதில் கொண்டோ, பிரபல நடிகர்களை எண்ணியோ செயல்பட்டால், உண்மையும், நேர்மையும் காணாமல் போய்விடும். நான் எடுக்கும் திரைப்படங்களில் என் இதயத்துடிப்பை மட்டுமே கேட்க விரும்புகிறேன். 

கடந்த, டிசம்பர் 11, 2020 ரஷ்யாவில் மறைந்தார் கிம். அவருக்கு புகழஞ்சலி.

நன்றி: Koriya times Issue dated December 14, 2016.

#kimkiduk

No comments:

Post a Comment