Monday 25 June 2018

யாழ் புராணம் வாசிச்சிருக்கீங்களா...

பண்டைய இசைக் கருவிகளில் சிறப்பு வாய்ந்தது யாழ்.  நரம்புகளால் கட்டப்பட்டது என்பது இதன் பொருள். இசை உருவாக்கும் கருவிகளை, தோல்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர்.
அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் போன்ற இலக்கியங்களில் யாழ் மீட்டுவது, பல்வகை யாழ் தொடர்பான குறிப்புகள் உள்ளன.
சிலப்பதிகாரத்தில் யாழ் வகைகள், யாழ் பாகங்கள் பற்றியும், யாழ் நரம்புகளை சுருதி கூட்டி இசைப்பதற்கான இலக்கணமும் விரிவாக உள்ளது.
இசையில் தேர்ந்த கந்தர்வதத்தைக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றி, சீவக சிந்தாமணி பாடல்களில் உள்ளது. யாழுடன் சேர்ந்து பாட இலக்கணமும்  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமுறையாசிரியர்கள், பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவி என  குறிக்கின்றனர்.
ஈழத்தவரான சுவாமி விபுலாநந்தர், 1947 ல் யாழ் நூல் என்ற  இசைத் தமிழ் நூலில் யாழைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து தொகுத்துள்ளார். 9 ம் நூற்றாண்டில் கல்லாடம் என்னும் நூல் யாழ் வகைகளைப் பற்றிக் கூறுகிறது.
வில் யாழ்  – 21 நரம்புகளை உடையது
பேரி யாழ் – 21 நரம்புகளை உடையது
மகர யாழ் – 17 முதல் 19 நரம்புகளை உடையது
சகோட யாழ் –16 நரம்புகளை உடையது
கீசக யாழ் – 100 நரம்புகளை உடையது
செங்கோட்டி யாழ் (7 நரம்புகளை உடையது)
சீறி யாழ் –7 நரம்புகளை உடையது
நாரதயாழ்  –1000 நரம்புகளை உடையது,
ஆதிகால பெரியாழ் – 100 நரம்புகளை உடையது
 தும்புருயாழ், மருத்துவயாழ் (தேவ யாழ்), ஆதியாழ்  ஆகியவை 1000 நரம்புகளை உடையது. கிளி யாழ், வல்லகியாழ், குறிஞ்சி யாழ், பாலை யாழ், மருத யாழ், முல்லை யாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.
சாத்தான் குளம் அ.ராகவன் என்பவர் தனது நூலில் 24 வகை யாழ்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.
கோவை தமிழ் செம்மொழி மாநாட்டில் நடைபெற்ற கண்காட்சியில் 700 ஆண்டுகள் பழைமையான சில யாழ்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
அவை: செங்கோட்டு யாழ், எருது யாழ், மயில் யாழ், மயூரி யாழ்

No comments:

Post a Comment