Saturday 11 August 2018

டூப்மாஸ்டரும் கருணாநிதியும்

அவர், குட்டையானவர். சைக்கிளில் அமர்ந்தால், பெடலை மிதிக்க கால் எட்டாது. நடக்கும் போது, ‘சடக்... புடக்...’ என, குதித்து செல்வது போல் தோன்றும்.  நேர்த்தியாக தலைமுடியை வாரி சிங்காரித்திருப்பார். பெயர் தவசி. இப்படி, கூப்பிட்டால் அவரை யாருக்கும் தெரியாது. ஒரு, நிரையசை  சொல்லை ,பெயரின் பின்னொட்டாக சேர்க்க வேண்டும். அது சாதி அடையாளம். அதனால் இங்கே தவிர்த்துள்ளேன்.
சிறுவனாக இருந்த போது, தவசியிடம் ஏகப்பட்ட கதைகள் கேட்டுள்ளேன். பின்னர், சென்னையில் தமிழ் சினிமாவுக்கு கதை சொல்வோரை பார்த்திருக்கிறேன். அவர்கள், தவசியிடம் மண்டியிட்டு பாடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
அவ்வளவு அற்புதம்... நேர்த்தி... காட்சிமயம்... வியப்பை வர்ணித்துக் கொண்டே போகலாம்.
திரு. கருணாநிதி, 70 களில் முதல்வராக இருந்த போதுதான், கதை புனையும் ஆற்றல் அவருக்கு வாய்த்தது. மாயா யதார்த்த வாதம் எல்லாம் அத்துபடி. அவர் கதைக்குள் தமிழ் மண்டியிடும்.
 அது, நெல்லுக்கு,  லெவி விதித்திருந்த காலம். ஏழை சிறு விவசாயிகளை, அதிகாரிகள் வதைப்பர். வன்கொடுமை செய்வர்.  வெளிச்சந்தையில், நெல் விற்க அனுமதிக்காமல், பிடித்து பறிப்பர். முறையாக எடை போடாமல் குறைந்த விலையில், கொள்ளையடிப்பர்.  விற்க மறுப்பவரை, பதுக்கல்காரன் என்று வழக்குப் போட்டு வதைப்பர். இழுத்து செல்வர்.
பத்தயத்துக்குள் நெல் போட முடியாது. பதுக்கல் என ஏகடியம் செய்வர். வீட்டுக்குள் புகுந்து சோதனை என்ற பெயரில் அடாவடி செய்வர். பெண்களை தரக்குறைவாக பேசுவர். அடாவடியில் நேரடியாக நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
ஒரு இடத்தில் இருந்து கூலி நெல்லைக் கூட கொண்டு வரமுடியாது. எங்கள் ஊர் விவசாய கூலிகள், நாஞ்சில் பகுதியில் உள்ள வடமேதி எனப்படும் கடுக்கரை, பூதப்பாண்டி போன்ற ஊர்களில் நெல் அடிப்புக்கு போவர். கிடைக்கும் கூலி நெல்லை, ஊருக்கு எடுத்து  வரமுடியமல் தவித்து அலைவர். பதுக்கல், கடத்தல் என, அதிகாரிகள் அடாவடி செய்து பிடுங்கிக் கொள்வர். பின், லஞ்சம் வாங்கி விடுவிப்பர். விவசாயிகள் கண்ணீரில் கரைந்த காலம் அது.
இன்றைய பொய், நாளைய வரலாறு என்று பொற்கால ஆட்சி புரிந்தவர்கள் பதிவில் இவை இடம் பெற வாய்ப்பு இல்லை. அரசின் கெடுபிடியின் ஊடாக பல நிகழ்வுகள் நடப்பது சமூக யதார்த்தம். அப்படியானது தான் தவசியின் கதையும்.
சரி... கதைக்கு வருகிறேன். அவரது அய்யா பனைத் தொழில் செய்வார். தவசிக்கும் அதைக் கற்றுக் கொடுத்தார். கள்ளமில்லாமல் பிழைக்க வேண்டுமே.
 குட்டையான தவசி, பெரிய பனைகளில் கைபோட்டு ஏறுவதில் சிரமப்பட்டார். உள்ளங்கை, நெஞ்சம் அதாவது மார்பு, கால் கரண்டை, உள் முட்டி போன்ற உறுப்புகள் காய்த்து வெடிப்பேறுவதை, சகிக்க முடியாமல் தவித்தார்.
சீவி சிங்காரிப்பதில் ஆர்வம் மிகுந்த தவசி, விடுபட முயன்றார். சிறு விவசாய பணிகள் செய்தார். கடுத்த வேலை செய்ய உடல் ஒத்துழைக்கவில்லை. எங்கு வேலைக்கு போனாலும் பேச்சு... நயமான பேசு்சு...
நெல் சாகுபடி செய்யும் சிறு விவசாயிகள், விலைக்கு அரிசி வாங்குவதை, கீழ்த்தர நடவடிக்கையாக பார்த்தனர். உணவு அரிசிக்காக, மாதத்தில், மூன்று முறை என, முறை வைத்து, புழுக்கிய நெல்லை அரைக்க எடுத்து செல்வர். அந்த அரிசியைத்தான் சாப்பிடுவர்.
லெவி அமலில் இருந்த நாட்களில், அரவை ஆலைக்கு எடுத்து செல்லும் நெல்லையும், அதிகாரிகள் புடுங்கிப் போய்விடுவர். இது, ‘வேலைக்கள்ளன்’ களுக்கு பிழைக்க வாய்ப்பாக அமைந்தது.
தவசிக்கும் இது வாய்ப்பாக, வாகாக அமைந்தது. அரைக்க கொண்டு செல்லும் நெல்லை, விற்று விட்டு அதிகாரிகள் பறித்து சென்றதாக, நாடகமாடுவார். அதற்காக, மிக நேர்த்தியாக ஒரு கதையைத் தயாரிப்பார்.
அந்த கதையில், அவர்தான் முக்கிய கதா பாத்திரம். எடுத்து சென்ற நெல்லை, மீட்க எடுத்த சிரமங்கள் கதை வர்ணனையாக கரையும். அது பெரும் பகுதியைப் பிடித்துக் கொள்ளும். ‘லே... பறிக்க வந்தவன் சீப்புல வந்தானா...  சக்கடா வண்டியிலா... மக்கா’ என்று, மடக்க முயல்வோரை  சுவாரசியமான சொல்லாடல்களால் திசை திருப்பி விடுவார். விவரணையுடன்  வர்ணிப்பார். திருப்பங்களை நேர்த்தியாக கோர்ப்பார். ஆனால், மறுநாளே குட்டு வெளுத்துவிடும். அவருக்கு, என் அப்பா, ‘டூப்மாஸ்டர்’ என்று பெயர் வைத்திருந்தார். அது பிரபலமாயிற்று.
உடல் உழைப்பை தாங்க இயலாமல் இரண்டு முறை, கால்போன போக்கில், தலைமறைவாகிவிட்டார். ஒருமுறை கோவையிலும், மற்றொரு முறை மதுரையிலும் இருந்து அழைத்து வந்தனர். அவர், புலி வேட்டையாட போனக் கதையை பின்னர் ஒருமுறை சொல்கிறேன். 

No comments:

Post a Comment