Saturday 4 August 2018

பிரசவம் ரோட்டிலா... வீட்டிலா...

அது, 1996 என்று நினைக்கிறேன்.  போலீஸ் செய்திகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்தேன். உயர்  அதிகாரிகளின் கோபப்பார்வைக்கு உள்ளாகியிருந்தேன்.  பலருக்கு தீரா பகைமை.
என், ‘தகவல் மூலம்’ எல்லாம், அதிகாரிகள் வீட்டு அடுப்படியும், காரோட்டிகளும் தான். வீட்டுப்பணிப்பெண்ணுக்கு, தோசை சுட கரண்டியை கையுடன் பிடித்து அனுபவப் பாடம் எடுப்பது, ஒரே மாதிரி உடை அணிந்த மப்டி பெண் போலீஸ் சூழ, மன்னர் வேடத்தில் தியேட்டரில் ராஜாங்கம் நடத்துவது, என பல தினுசான அதிகாரிகளை பார்த்திருக்கிறேன்.  தகவல்கள் அவ்வப்போது, என் பேஜர் கருவியில் ஏறும். அவை, டீகடை பெஞ்சில் பேசப்படும். பெரிய செய்தியாவதும் உண்டு.
அது ஏப்ரல் மாதம். கொடும் வெயில். ஒரு முற்பகலில், கோடம்பாக்கம் போலீஸ்நிலையத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணை கண்டேன். ஒரு போலீஸ்காரரிடம் விசாரித்தேன். ஆறுமாதமாக, நடையாய் நடப்பதாக சொன்னார். விவரம், விலாசம் பெற்று கொண்டேன்.
 அன்று, பணியை முடித்துக்கொண்டு, இரவு, 8:00 மணி அளவில் வடபழனி கங்கையம்மன் கோவில் தெரு சந்தில் உள்ள அந்த வீட்டுக்கு சென்றேன்.
அது ஒரு பீகாரி குடும்பம். தந்தை சண்டை போட்டுக் கொண்டிருந்தார். கர்ப்பிணியை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. தந்தையின் குரல் இயலாமையாக வெளிப்பட்டது. சூழலை ஒருவாறு ஊகித்தபின், அறிமுகப்படுத்திக் கொண்டேன். அந்த ஏழைத் தந்தை, இயலாமையின் வலியை வெளிப்படுத்தினார். மகளுக்காக நீண்ட நாட்கள் அலைந்தும், நீதியின் ஆரம்ப கதவைக் கூட, எட்ட முடியாத ஏக்கம் வெளிப்பட்டது. அப்போதைய பிரதமரின் உறவினர் என்று அவ்வப்போது சொல்லி ஆறுதல் பட்டுக் கொண்டார். நீதி கேட்டு, பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றையும் காட்டினார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டேன். கடிதங்கள், புகார்கள் என, நகல்கள் கேட்டு வாங்கினேன். கர்ப்பிணியிடம் நீண்ட பேட்டி ஒன்றை, மைக்ரோ நாடாவில் பதிவு செய்து விடை பெற்றேன். போலீசாரிடமும் சில விளக்கங்களை கேட்டு பெற்றேன்.
அதன் அடிப்படையில் ஒரு செய்தி தயாரித்தேன். பாலியல் பலாத்காரம் சார்ந்த தகவல் கொண்ட செய்தி. வழக்கமாக இது மாதிரி செய்திகளை, நிருபரின் பெயரில் வெளியிடுவதில்லை. எனக்கு உயர் நிலையில் இருந்தவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. என் பெயரில் வெளியிட்டுவிட்டார்.
செய்தி இதுதான்...
பிரபல தமிழ் நடிகர் ஒருவர். கதாநாயகன், வில்லன் என்று கதா பாத்திரங்களில் நடிப்பவர். தமிழ் தேசியம் எல்லாம் பேசுவார். அலுவலகத்தில் வேலை செய்ய வந்த பீகாரி பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அதிகார மிடுக்குடன் நடிகர் வலம் வந்ததால், புகார் பதியாமல், அலைக்கழித்தனர். விரட்டியடித்தனர். அவர் பிரசவம், ரோட்டிலா... வீட்டிலா... என்ற நிலையில்தான், என் செய்தி வெளிவந்தது.
போனில் ஏகப்பட்ட மிரட்டல். பணம் வாங்கிக் கொண்டு, எதிராக செய்தி போட்டதாக... பணம் கேட்டு மிரட்டியதாக... பேரம் பேசியதாக... நடிகர் புகழை கெடுப்பதாக...
பொதுவாக, இவை வரும் என, எதிர்பார்ப்பதுதான். எனவே, செய்தியின் உயிர்ப்பு வாடிப்போகாமல் இருக்க தொடர் தாக்குதல் நடத்துவதை தவிர வேறு வழி இருக்காது.  அதற்கும் தயாராக இருந்தேன். சம்பவத்தை நிரூபிக்கும் ஆவணங்களை தொடர் செய்தியாக்கினேன். துவக்கம் என்னிடம் என்றாலும், மற்ற இதழ் நிருபர்களும் அதன்பின் இணைந்தனர்.
 அப்போது, எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. என்னிடம் பேரம்படியாததால், சம்பந்தப்பட்ட பெண்ணை அணுகிய நடிகர், பேரத்தையும் மிரட்டலையும் துவங்கினார். பெண் நிலை தடுமாறினார். ஏற்கனவே திருமணமானவர் நடிகர். அந்த பெண்ணையும் திருமணம் செய்வதாக சொல்ல, தடுமாற்றம், பூகம்பமாகிவிட்டது.
ஆவணங்களை உளவுபிரிவு உயர் அதிகாரி ஒருவரிடம் கொடுத்துவிட்டேன். அதன் அடிப்படையில், விசாரணை நடத்திய அப்போதைய  தி.நகர் போலீ்ஸ் உதவி கமிஷனர் திரு. சந்திரசேகர் வழக்கு பதிய உத்தரவிட்டார். இவர், தி.மு.க., அமைச்சர் ஒருவரின் உறவினர்
நடிகர் பேரத்தால், இரண்டும் கெட்டானாகிவிட்டார், பெண். அந்த நேரத்தில் உதவிக்கு வந்தார், அறநிலையத்துறை அதிகாரி கவிதா. அவரது தீவிர முயற்சியால், பிரபல வழக்கறிஞர் பாதுகாப்பில் சில நாட்கள் பெண் இருந்தார். பின், மதிப்புக்குரிய ஜனநாயக மாதர் சங்கம், வழக்கு முடியும் வரை, அந்த பெண்ணை பராமரித்தது. அப்போதுதான், கவிதாவின் தீர்க்கத்தையும், அயராத முயற்சியையும் கண்டேன். அவர் மீது பெரும் மதிப்பு ஏற்பட்டது. அந்த மதிப்பு குலையாமல், குறையாமல் தொடர்கிறது.
சரி... வழக்குக்கு வருவோம். பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. அறிவியல் நிரூபணப்படி, வென்றார். நிவாரணம் கிடைத்தது. நடிகருக்கு தண்டனையும் கிடைத்தது. காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் தானே... நடிகரின் இரண்டாவது மனைவியாகிவிட்டார். தீவிர தமிழ் தேசியம் பேசும் நடிகர், விரைவில் புரட்சிகள் நடத்துவார். 

No comments:

Post a Comment