Monday 30 July 2018

அவருடன் நேரடி பழக்கம் எதுவும் இல்லை

அது, 1989. துல்லியமாக நினைவில் இல்லை. சென்னை செய்திப்பிரிவில் பணியாற்றிவந்தேன். நாளிதழ்களில் ஒரு செய்தி ஒரு வாரமாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. ‘ஒரு பக்தர் வீட்டு லிங்கத்தில் பொங்கி வழியும் தண்ணீர்’ பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து செய்தியை வெளியிட்டு வந்தன. பெரும் பக்தர் கூட்டம். ஆட்சித் தலைவர், வருவாய்த்துறை அதிகாரிகள், உயர் போலீஸ் அதிகாரிகள் என, அதிகார மிக்க பக்தர் கூட்டம் வரிசையில் வர, சாமானியர்களை கேட்கவா வேண்டும். பெரும் போக்குவரத்து நெரிசல்.
பொதுவாக, இந்த நிகழ்வுகளை கட்டமைப்பவர்கள், உயர்அதிகாரிகளுடன், நிருபர்களையும் வளைத்துப் போடுவர்.
நான் பணியாற்றிய இதழில் அந்த செய்தி தொடர் வரவில்லை. அப்போது தாம்பரம் நிருபராக இருந்த அகஸ்டின், சிந்திக்கத் தெரிந்தவர். அவரை வளைக்கும் முயற்சி தோல்வியுறவே, தலைமை அலுவலகத்துடன், தொடர்பு கொண்டார் ஒருவர். அந்த தொலைபேசி அழைப்பை சந்தித்தவன் நான். விவரங்களை வாங்கிக் கொண்டேன். அதிகாரிகளை துணைக்கழைத்து மேற்கொள்காட்டி, கண்டிப்பாக செய்தி போட கேட்டுக் கொண்டார்.
சரி... லிங்கம் தண்ணீர் விடுவதை பார்த்தால், செய்தி எழுதுவதாக உறுதி சொன்னேன். ஒப்புக் கொண்டார்.
அவரது மன்றாட்டை, ஆசிரியர் பார்வைக்கு கொண்டு போனேன். விசாரித்து எழுத சொன்னார். அன்று இரவு, தாம்பரத்துக்கு சென்றேன். அகஸ்டினும் உடன் வந்தார். லிங்கத்தை பார்க்க போனோம்.
போனதும் புரிந்தது பிழைப்புக்கான பசப்பு. பிழைக்க வழியில்லாமலோ, தெரியாமலோ நடக்கும் அவச் செயல். தோண்டி துருவி விசாரித்தால் ஆனுதாபம்தான் மிஞ்சும். அவர்களின் புத்திசாலித்தனம் வியப்பை தரும்.
எங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.  லிங்கம் தண்ணீர் கொட்டும் கதையை விளக்கினர். என், மதநம்பிக்கை பற்றிய விசாரணையும் முடிந்தது. ஒரு சிறிய வீட்டின்  உள்ளறையில், லிங்கம் இருந்தது. அருகே போனதும், கண்ணாமூச்சு விளையாட்டு மாதிரி, ‘அதோ தாண்ணி... இதோ தண்ணி... வியர்க்கிறது பாருங்கள்...’ என்று, கும்பல் அரற்றி அடித்து விட்டுக் கொண்டே இருந்தது. பேசாமல் நின்றேன். நேரம் நகர்ந்தது. மீண்டும், ‘அதோ ஊற்று... இதோ ஊற்று...’ என்றனர்.
 ‘சரி... ஊறட்டும்... சென்னையில குடி தண்ணீர் பிரச்னையாவது தீருமே... அமைதியா இருங்க...’ என்றேன், சிரிக்காமல்.
இதற்கிடையில், ‘பூசை நடத்த வேண்டும்’ என்றனர். என் முன்னிலையில் நடத்த சொன்னேன். கதவை மூடி மறைவாகத்தான் பூசை என்றனர். நான் லேசாக சிரித்தேன். நிகழ்வின் முக்கியஸ்தர் என் அருகே வந்தார். காதில், ‘நாங்க குடும்பத்தோட கிணத்துல குதிச்சி தற்கொலை பண்ணிக்கப் போறோம்... ’ என்றார். நான் சிரித்த படி, ‘ கொஞ்சம் பொறுங்க... போட்டோ கிராபரை கூப்பிட்டுக்கிறேன்.  கிணத்துல பாயுறத படம் எடுக்க வேண்டாமா...’ என்றேன்.
நிகழ்வை திட்டமிட்டவர்களுக்கு வியர்க்க துவங்கியது. நான் வேளியேறினேன். அகஸ்டின் சிரித்துக் கொண்டு நின்றார். வெளியே கூடியிருந்த பக்தர்களிடம் விவரங்களை அவர் கறந்திருந்தார். தகவல்களை ஒருங்கிணைத்து, ஒரு செய்தி எழுதினோம். மறுநாள் காலை இதழில் வெளியானது. பக்தர் வரிசையில் நின்ற அதிகாரிகள் இப்போது, விலங்குடன் நின்றனர்.
எங்கள் செய்தி வெளியானதற்கு மறுநாள், முரசொலி இதழில், ஒரு பக்க கட்டுரை ஒன்று. அப்போதைய முதல்வர் கருணாநிதி எழுதியிருந்தார். அந்த கட்டுரை, எங்கள் செயலையும், நாங்கள் தயாரித்த செய்தியையும் மையமாக கொண்டிருந்தது. அவருடன் எனக்கு நேரடி பழக்கம் எதுவும் இல்லை.

No comments:

Post a Comment