Monday 27 July 2020

இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனை

ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், பக்கிங்ஹாம் அரண்மனை மிகவும் புகழ்பெற்றது. இங்கு, பிரிட்டிஷ் அரச குடும்பம் வசித்து வருகிறது.  தற்போது, ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சியாளராக உள்ளார். 
 இங்கிலாந்து மகாராணியாக விக்டோரியா, 1837ல் அரியணை ஏறியதும் இந்த அரண்மனை, மன்னர் குடும்ப வசிப்பிடமாக மாற்றப்பட்டது. இவர், 63 ஆண்டுகள் ஆட்சி செய்தார்; இரவது சிலை, அரண்மனை முதன்மை வாயில் அருகே நிறுவப்பட்டுள்ளது. 
பக்கிங்ஹாம் அரண்மனை, 39 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. 77ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் கட்டடங்கள் உள்ளன. கட்டடங்களில், 7468 வாசல் கதவுகளும், 760 ஜன்னல்களும் உள்ளன. ராயல் கலெக்ஷன் டிரஸ்ட் வளாகத்தை நிர்வகிக்கிறது.
அரண்மனையில்...
விசாலமான, 19 விருந்து கூடங்கள்
படுக்கை வசதியுடன் கூடிய, 52 அறைகள்
பணியாளர்களுக்கு, 188 அறைகள்
அலுவலக பணிக்காக, 92 கூடங்கள் உள்ளன.  
இவற்றில், ஆறு கூடங்களை மட்டும் பயன்படுத்துகிறார் ராணி எலிசபெத். அவற்றில், ‘எம்பையர் கூடம்’ என்பதும் ஒன்று. இது, முக்கிய விருந்தினர்களை சந்திக்கும் இடம். இங்கு, இங்கிலாந்து பிரதமர், அரசு அதிகாரிகள் மற்றும் உலகத் தலைவர்களை சந்தித்து பேசுவார். ராணியின் பிரத்யேக வளாக பகுதியில் நுழைய சிலருக்கு மட்டுமே அனுமதி உண்டு.
ஆண்டுதோறும், ஜூலை மாத இறுதியில், ஸ்காட்லாந்தில் உள்ள, பால்மோரால் அரண்மனைக்கு, ஒய்வெடுக்க செல்வார் ராணி. செப்டம்பர் வரை அங்கு தங்கியிருப்பார். இந்த கால கட்டத்தில், பக்கிங்ஹாம் அரண்மனையில், 19 கூடங்கள், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும்.
அரண்மனை முன், ‘தி சேஞ்ஜிங் ஆப் கார்ட்ஸ்’ என்ற நிகழ்ச்சி நடக்கும். இது, பாதுகாவலர்கள், பணி மாறும் வண்ணமயமான நிகழ்ச்சி. இசையுடன், காவலர் அணிவகுப்பு பிரமாண்டமாக நடக்கும். சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் நிகழ்வு இது.
அரண்மனை முற்றத்துக்கு அடியில், டைபர்ன் என்ற ஆறு பாய்கிறது. பின்புறம், மிகப்பெரிய தோட்டமும், குதிரைகள் பராமரிக்கும் லாயமும் அமைந்துள்ளன. 
தோட்டத்தில், ‘கார்டன் பார்ட்டி’ என்ற முக்கிய விருந்து, ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும். இதில், 8000 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வர். பங்கேற்போருக்கு, ராணி மற்றும் அரச குடும்பத்துடன் பேச வாய்ப்பு கிடைக்கும். உயர்தரமான ராயல் விருந்தும் அளிக்கப்படும்.
இரண்டாம் உலகப்போரின் போது, ஐரோப்பிய நாடான ஜெர்மனி, ஒன்பது முறை, இந்த அரண்மனை மீது குண்டு வீசியது. இதில், அரச குடும்ப வழிபாட்டுக்காக அமைக்கப்பட்ட தேவாலயம் சேதம் அடைந்தது. 
பக்கிங்ஹாம் அரண்மனையின் மதிப்பு, 5 பில்லியன் டாலர். 1 பில்லியன் என்பது, 7468 ஆயிரம் கோடி ரூபாய். கூட்டி, பெருக்கி, இந்த சொத்தின் இந்திய பண மதிப்பை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 
கொரோனா தொற்று காரணமாக, அரண்மனையில், தற்போது விருந்து உட்பட முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர் அனுமதியும், ஆண்டு இறுதிவரை இல்லை.
வரலாறும் வாழ்வும்!
பக்கிங்ஹாம் அரண்மனை அமைந்துள்ள இடம் முற்காலத்தில், ‘மேனர் ஆப் எபரி’ என்ற விவசாயப் பண்ணையாக இருந்தது. டைபர்ன் நதியால் வளம் பெற்றது. இப்போதும், அரண்மனை முற்றத்தின் அடியில் பாய்ந்து ஓடுகிறது நதி
இங்கிலாந்து பணக்காரரான பிரபு ஒருவர், 1703ல் ஒரு இல்லத்தை இங்கு கட்டினார். கட்டடக்கலை நிபுணர் வில்லியம் வின்டே அதை வடிவமைத்திருந்தார் 
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜ், இதை, 1761ல் வாங்கினார். ராணி சார்லோட் வசிக்க, தனிப்பட்ட மாளிகையாக பரிசளித்தார்
கட்டடம், 1762ல் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது 
மன்னர் நான்காம் ஜார்ஜ், 1820ல் அரியணை ஏறியவுடன், இதை, அரண்மனையாக மாற்ற எண்ணி, கட்டடக்கலை நிபுணர் ஜான் நாஷினை நியமித்தார். அவர் ஆலோசனைப்படி சில மாற்றங்கள் செய்யப்பட்டன. முகப்பு தோற்றம், பிரெஞ்சு கட்டடக்கலை மரபு சார்ந்து அமைக்கப்பட்டது. சீரமைப்பு செலவு அதிகமானதால் கோபம் கொண்டார் மன்னர். ஊதாரித்தனம் செய்வதாக, 1829ல் ஜான் நாஷின் பணி பறிக்கப்பட்டது
நான்காம் ஜார்ஜ் மறைவுக்கு பின், கட்டடக்கலை நிபுணர் எட்வர்ட் பிலோர் ஆலோசனைப்படி, அரண்மனைக் கட்டி முடிக்கப்பட்டது. இதை, இங்கிலாந்து பார்லிமெண்ட் விடுதியாக மாற்றவும், மன்னர் குடும்பம் விரும்பியது
அரண்மனையில் மின்சார வசதி, 1883ல் ஏற்படுத்தப்பட்டது. தற்போது, 40 ஆயிரம் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.
ராணி எலிசபெத்!
பங்கிங்ஹாம் அரண்மனையில் அதிக காலம் கோலோச்சுபவர் என்ற புகழை, தற்போதைய ராணி இரண்டாம் எலிசபெத் பெற்றுள்ளார்.
இவர், ஏப்.,21, 1926ல் பிறந்தார். அன்று வழக்கப்படியும், ஜூன் இரண்டாவது சனிக்கிழமை, அதிகாரப் பூர்வமாகவும் இவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. 
பத்து வயதில் குதிரை ஏற்றம் கற்றார். இந்த கலையில் தீவிர ஈடுபாடு கொண்டு, இங்கிலாந்து குதிரைப்படையில் பணியாற்றினார். பந்தயங்களிலும் ஆர்வம் காட்டுவார். இப்போது அவரது வயது, 94. இந்த வயதிலும், அரண்மனை வளாகத்தில் குதிரை சவாரி செய்வதாக புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
இவர், 1952ல் அரியணை ஏறியதிலிருந்து, இங்கிலாந்தில், 15க்கும் மேற்பட்ட பிரதமர்களுடன் பணியாற்றியுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் நீண்ட காலம் ஆட்சி புரிபவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 
வட அமெரிக்க நாடான கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் நிரந்தர அதிபராகவும் பொறுப்பு வகிக்கிறார். இந்தியா உட்பட, 54 நாடுகளை உள்ளடக்கிய காமென்வெல்த் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார். கடந்த, 1961, 1984, 1997ம் ஆண்டுகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம், இங்கிலாந்து மக்கள் வரிப்பணித்தில் தான், நடந்து வந்தது. இந்த நடைமுறையை, 2012ல் தடைசெய்தார். இந்த உத்தரவு வரலாற்றில் எலிசபெத்தை முக்கியத்துவம் பெற வைத்துள்ளது.
 இவருக்கு, 88 பில்லியன் டாலர் சொத்து உள்ளதாக, போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment