Monday 27 July 2020

உடல் கூறியல் வல்லுனர்

மனித உடற்கூறு பற்றி, மிகச் சரியாக ஆராய்ந்து எழுதிய மருத்துவ நிபுணர் ஆண்ட்ரூஸ் வெசாலியஸ். இவரது நினைவு சின்னம், ஐரோப்பிய நாடான இத்தாலி அருகே, அயோனியன் கடல் தீவு ஒன்றில் உள்ளது. 
கிரேக்க மருத்துவர் காலென் எழுதிய நுால் தான், உலகின் முதல் உடற்கூறு புத்தகமாக, 1,300 ஆண்டுகளாக போற்றப்பட்டது. அதில் கூறியிருந்த கருத்துக்களை பின்பற்றியே மருத்துவ ஆராய்ச்சிகள் நடந்தன. அதை தாண்டி, அந்த துறை வளரவில்லை.
இந்த சூழலில், உடற்கூறியல் பற்றிய ஆய்வில் புதிய தடம் பதித்தார் ஆண்ட்ரூஸ் வெசாலியஸ். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் வாழ்ந்த மருத்துவக் குடும்பத்தில், கி.பி., 1514ல் பிறந்தார். லத்தீன், கிரேக்க மொழிகளில் புலமைப் பெற்றார். மனித உடற்கூறு பற்றி ஆராய்வதில் நாட்டம் கொண்டார். ஆரம்பத்தில், சிறு உயிரினங்களின் உடல்களை ஆராய்வதில் ஆர்வம் காட்டி வந்தார்.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரிஸ் நகர மருத்துவக்கல்லுாரியில், 19ம் வயதில் சேர்ந்தார். நாய், பன்றி போன்றவற்றின் உடல்களை ஆராய்ந்தார். அவற்றின் உடற்கூறு, அறிஞர் காலெனின் கருத்துப்படி இல்லை. இதை எடுத்துக் கூறி விவாதித்தார்.
பன்றி, நாய் போன்றவற்றுக்கும், மனித உடலமைப்பிற்கும் வேறுபாடு உண்டு என, மறுத்தார் அவருக்கு உடற்கூறியல் கற்பித்த பேராசிரியர். இந்நிலையில், புதிதாக கற்க வாய்ப்பு ஏதும் இல்லை என, மனம் நொந்து சொந்த ஊருக்கு திரும்பினார் ஆண்ட்ரூஸ்.
ஒரு நாள் –
 நண்பருடன் உலாவச் சென்றார். வழியில், பயங்கரக் குற்றவாளி ஒருவனை, அந்த நாட்டு அரசர் உத்தரவுப்படி, மரத்தில் கட்டி தொங்க விட்டிருந்தனர். உயிர் பிரிந்து, எலும்புக்கூடு மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வந்து, உடற்கூறு பற்றி ஆராய துவங்கினார் ஆண்ட்ரூஸ். உண்மையில், காலென் கூறியபடி அது இல்லை என தெளிவு பெற்றார். 
ஆய்வில் கண்டறிந்த உண்மைகளை, புத்தகமாக எழுதினார்; அதுபற்றி மருத்துவ நிபுணர்களுடன் விவாதித்தார். யாரும், அவரது கருத்துக்களை ஏற்க முன்வரவில்லை. இந்தநிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில், 1543ல் மனித உடற்கூறு பற்றிய நுாலை வெளியிட்டார். அது, 700 பக்கங்களில், விளக்கப்படங்களுடன் அமைந்திருந்தது.
அந்த நுாலுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. அவரது மருத்துவ நண்பர்களே எதிரிகளாயினர். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆண்ட்ரூஸ், மனம் நொந்தார்; கண்டுபிடிப்புகளை தீயிட்டு கொளுத்தினர். இனி, ஆராய்ச்சியே வேண்டாம் என முழுக்கு போட்டார். ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு திரும்பி, மன்னரின் அரண்மனை மருத்துவராக பணியில் சேர்ந்தார். 
அப்போது, இத்தாலி, பாதுவா பல்கலைக் கழக பேராசிரியர் கேப்ரியஸ் பாலோபியஸ், ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். 
அதில், ஆண்ட்ரூஸ் கண்டுபிடித்த உடற்கூறு கொள்கை தான், துல்லியமானது என, பாராட்டி எழுதியிருந்தார். அவற்றில் சில கருத்துக்கள் மீது விளக்கம் கேட்டிருந்தார். 
எதிர்ப்பு குரல்களையே கேட்டு பழகிய ஆண்ட்ரூசிற்கு இது உற்சாகம் தந்தது. கேட்டிருந்த சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்க, இத்தாலி புறப்பட்டார். ஆனால், கேப்ரியல் திடீர் மரணம் அடைந்ததால் ஏமாற்றமடைந்தார்.
பல்கலையில், கேப்ரியல் பணி புரிந்த இடம் காலியாக இருந்தது. அந்தப் பதவியை ஏற்ற ஆண்ட்ரூஸ், மூன்றாண்டுகள் பணியாற்றினார். 
பின், மத்திய கிழக்கு பகுதியில் ஜெருசலம் நகருக்கு புனித யாத்திரையாக சென்றார். அந்த யாத்திரையை முடித்து திரும்பிய போது, அவர் பயணம் செய்த கப்பல், புயலில் சிக்கி கவிழ்ந்தது. இத்தாலி அருகே அயொனியன் கடல் அருகே ஒரு தீவு பகுதியில், பயணியர் உடல்கள் ஒதுங்கின. அந்த வழியாக சென்ற மற்றொரு கப்பல் இதை கண்டது.
ஒதுங்கிக் கிடந்த உடல்களை அங்கேயே அடக்கம் செய்தனர் கப்பால் மாலுமிகள். ஒரு உடலில் இருந்த சட்டைப் பையில், சில புத்தகங்கள் இருந்தன. அவற்றை ஆய்வு செய்தார் கப்பல் தலைவர். ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தில், ‘ஆண்ட்ரூஸ் வெசாலியஸ் அவர்களுக்கு, அன்புடன் கேப்ரியல் பாலோபியஸ்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
இதன் மூலம், அது, ஆண்ட்ரூஸ் வெசாலியஸ் உடல் என, அடையாளம் கணப்பட்டது.  உடலை அங்கேயே அடக்கம் செய்து, ‘ஆண்ட்ரூஸ் வெசாலியஸ் நினைவிடம்’ என, ஒரு கல்லில் பொறித்தனர். அவர் நினைவாக இன்றும் அந்த கல் அங்கு உள்ளது.
மனித உடற்கூறு பற்றி முறையான கண்டுபிடிப்பு நிகழ்த்தியவர் வெசாலியஸ். அவர், 53 ஆண்டுகள் தான் வாழ்ந்தார். அற்புத கண்டுபிடிப்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மருத்துவ உலகின் வளர்ச்சிக்கு வழிகாட்டியவரின் புகழ் என்றும் நிலைக்கும்!

No comments:

Post a Comment