Thursday 14 March 2019

வளர்ச்சியின் பொறி... ஒரு இசையாக


சற்று தாமதமாகிவிட்டது. கூட்டம் நடக்கும் பகுதியை கண்டுபிடித்து சேர்ந்து கொண்டேன். ஒருங்கிணைப்பாளர் அனுாப்குமார் பேசிக் கொண்டிருந்தார். முகநுால் போட்டோ அடையாளத்தைக் கெண்டு அனுமானித்துக் கொண்டேன். அவர் உட்பட அங்கு கூடியிருந்த யாரையும் முன் பின் தெரியாது. பெயர் அடையாளமும் தெரியாது.
ஆங்கிலத்தில் துவங்கி, தமிழுடன் இயல்பாக விளக்கிக் கொண்டிருந்தார். இடையிடையே, இனிய மலையாளம்.
அது, சென்னை, மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா. முகநுாலில், இயல்பு விவசாயம் பற்றி தகவல் பரிமாறிக் கொள்ளும் ‘சென்னை ஆர்கானிக் டெரஸ் கார்டன்’ (Chennai organic terrace gardeners) உறுப்பினர்களின் சந்திப்பு நிகழ்ச்சி.
மாடியில் காய்கனி, மலர் செடிகள் வளர்ப்பது பற்றி எளிய உரையாடல் நிகழ்ச்சி அது. செடிகள் வளரும் விதம், சூழலுடன் அவற்றுக்கு உள்ள உறவு, இயற்கையை பேண வேண்டிய அவசியம் போன்றவற்றை மிக எளிமையாகவும், தெளிவாகவும் விளக்கினார், அனுாப். அவரது, அனுபவமும், ஆர்வமும், நிபுணத்துவமும் உரையில் வெளிப்பட்டது. அதில் உள்ளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.
இடைஇடைய சிறிய கேள்விகள். அவற்றுக்கு எளிய தீர்வு தரும் விளக்கங்கள். கூட்டத்தை யாரும் முறைப்படுத்தவில்லை. மிக முறையாக கச்சிதமாக நடந்தது. இனிய உரையாடல்கள் ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தன.
தோட்டம் அமைப்பதில், துவக்க நிலையாளர்கள், பெரும் அனுபவம் நிறைந்தவர்கள் என, இரண்டு நிலையிலும் இருந்தவர்கள் உண்டு. அனைவருக்கும் ஒரு பொதுவான நிறைவுப் புள்ளி இருந்தது. அது தான், நலம் மிக்க வாழ்க்கைக்கான தேடல். உணவு உற்பத்தி சார்ந்த நுாண் அறிவைத் தேடியக் கூட்டம்.
சமூக வளர்ச்சியின், மிக முக்கிய செயல்பாடாக இதைக் கருதுகிறேன். இது போன்ற இயல்பூக்க அடிப்படையில், பொருட்செலவு இன்றி, காலவிரயம் இன்றி, அறிவுத்தேடல் நடக்கும் போது, சமநிலையான சமூகம் வளரும்.
இதில் பங்கேற்ற, 49 பேரில், 28 பேர் பெண்கள். கூட்ட இறுதியில், விதைகளும், செடிகளும் பறிமாறிக் கொள்ளப்பட்டன. ஆர்வமுடன், விதைகளையும் செடிகளையும் காட்சிக்கு வைத்து அன்புடன் பகிர்ந்து கொண்டனர்.
ஒவ்வொரு உறுப்பினரும் மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் நடந்து கொண்டனர். கிட்டத்தட்ட, இரண்டு மணி நேரம்... இனிய கலைஞர் லோபமுத்ரா மித்ரா பாடும், ‘ஹரீத் மாஜ்ஹரி...’ இசையை ரசிப்பது போல் காலம் கனிவாக நகர்ந்தது.

No comments:

Post a Comment