Thursday 14 March 2019

வசந்தராணியின் வனப்பு

என் பணி அலுவலகம், சென்னை, ஒயிட்ஸ் சாலையில் உள்ளது. இதன் இடது பின்புறம் டி.வி.எஸ்., பணியகமும், இடது முன்புறம் அமிதீஸ்ட் வளாகமும் உள்ளன. இந்த வளாகங்களின் மதில் ஓரம் ஓங்கி உயர்நந்துள்ளன பல மரங்கள்.
இளைப்பாறுதல்களில் இந்த மர நிழல்களும், அவை தரும் வான் காட்சியும் இனிமையாக நிறைக்கும். அவற்றை அடையாளம் காண ஆர்வம் நிறைந்திருந்த போதும், தகவல் தேட வாய்ப்பில்லாமல் இருந்தது.
மஞ்சாடி என்ற ஆனைக் குன்றிமணி மரம் ஒன்றுள்ளதை, கடந்த ஆண்டு அறிந்தேன்.
இன்று காலை, அலுவலகத்தில் நுழையும் முன், பூக்களால் குலுங்கி ஈர்த்தது, ஒரு மரம். தினமும் பார்க்கிறேன். நேற்றும் கூட பார்த்தேன். சில பூக்கள் மட்டுமே இருந்தன. இன்று, மரம் முழுக்க வெளிர் ஊ:தா நிறம் குலுங்குகிறது.
இந்த மரத்துக்கு, டிரம்பட் (Trumpet tree) என்று பெயர். அறிவியல் வகையில் Tabebuia Rosea என்று பெயர். தென் அமெரிக்கா, கரீபியன் பகுதியை தாயகமாக கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் வரை வளரக்கூடியது. இலையுதிர் காடுகளில், 25 மீட்டர் வரை வளரும். வறட்சியை தாங்கும். வசந்த காலத்தில் பூத்து, மனதை குலுங்க வைக்கும்.
Flickr ல், சவுந்தரபாண்டியன் என்பவர், இதன் பெயரை, ‘வசந்தராணி’ என்று குறித்துள்ளார். வேறு தமிழ் பெயர் அடையாளத்தை காண முடியவில்லை. இந்த மரத்தில், 99 ரகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பு உள்ளது. இந்த மாதம் முழுவதும், வெளிர் ஊதா வண்ண பூக்களில் நனையலாம்.

No comments:

Post a Comment