Thursday 11 October 2018

தங்க அரளியும் தலைக்கனமும்

இந்தமுறை, புன்னார்குளம் வழியை தேர்வு செய்தேன். வழக்கமாக செல்லும் பொற்றையடி வழியை துறந்தேன். இரண்டு வழியிலும் ஆலடிவிளையை அடைய நடை பயண துாரம் கிட்டத்தட்ட, 1 கி.மீ., தான் வித்தியாசம்.
அதிகாலையே ரயில்நிலையத்துக்கு, வந்துவிட்டார் எழுத்தாளர் கென்னடி. அவரது வாகனத்தில், மயிலாடியை நெருங்கும் போது, ரிங்கல்தெளபே பள்ளயை ஒரு போட்டோ எடுக்கும் ஆசை ஏற்பட்டது.
முகப்பை படம் எடுத்துக் கொண்டிருந்த போது, என்.எஸ்.எஸ்., முகாமிலிருந்த ஆசிரியர் வந்து கேள்வி கேட்டு கதவை திறந்துவிட்டார்.
ஆறு ஆண்டுகள் தவறாமல், இந்த வளாகத்தில் திரிந்துள்ளேன். காலம் எல்லாவற்றையும் சிதைத்திருந்தது. அடையாளங்கள் அழிந்திருந்தன. பல மங்கியிருந்தன. முகப்பு, வளாக புல்தரை, தோட்டங்கள்,  உருவாக்கிய சிறுகுன்றுகள், நட்ட மரங்கள், வழியை ஒழுங்கு செய்து, வீச்சு அரிவாளுக்கு கட்டுப்பட்டு நின்ற தங்க அரளிகள் எல்லாம் முற்றாக அழிந்திருந்தன.
பனங்கை தாங்கிய ஒட்டுக்கட்டடம் சிதைந்து விரிசல் விழுந்து மழையில் கரைந்து நின்றது. பழ மரங்கள், நிழல் மரங்கள் எதுவும் இன்றி காட்சி மாறிவிட்டது. மனதில் தங்கியுள்ள நிழல் அந்த வளாகத்தில் இல்லை. பதற்றப் பட ஒன்றுமில்லை.
ஒருமுறை வளாகத்தை சுற்றி வந்தேன். வாசல்கள் இடம் மாறியிருந்தன. அப்போதைய தலைமை ஆசிரியர் ஒய். ரெஜினால்டு டேவிஸ் அறை அருகே வந்தோம்.
எங்களுக்கு வழிவிட்ட ஆசிரியர் நெகிழ்வாக இருந்தார். எளிமையாக உரையாட முடிந்தது. ஒய். ரெஜினால்டு டேவிஸ் என்ற ஒய்.ஆர்.டி., பற்றி அறிந்திருந்தார்.
மண் கூஜாவை துாக்கியபடி, ஒய்.ஆர். டி., கையலம்பும் பகுதியில் அலங்கார செடிகளைக் காணவில்லை. கட்டாந்தரையாகி வெறுமை வடிவமாக கிடந்தது.
ஒய்.ஆர்.டி., காலமாகிவிட்டதாக சொன்னார் அந்த ஆசிரியர்.
பேச்சு அவரது நேர்மை, உழைப்பு, காலந்தவறாமை என, திரும்பியது. இந்த பண்புகளே, பொது சமூகத்தை விட்டு அவரை விலக்கியதாக குறிப்பிட்டார். சரியான கணிப்பாக பட்டது.
மனம் அந்த பக்கம் விலகி நின்று பார்த்தது. பெருங்கருணை, நேர்மை போன்ற அறங்கள், சில நேரம் அகந்தையாக கட்டமைத்துக் கொள்வதை புரிந்து கொள்ள முடிந்தது. சற்று நேரம் மவுனமாக கட்டந்தரையை பார்த்துக் கொண்டிருந்தேன்.
சமயம் பரப்ப வந்த ஐரோப்பியர்களின் மனநிலையாக அதை கணிக்க முற்பட்டேன்.
ஆப்ரிக்கா கண்டத்தில், சமயம் பரப்ப போன ஐரோப்பியர்களின் அன்பை, நெகிழ்வை, நேர்மையை, அறத்தை, செயலை  தத்துவரீதியாக, நுட்பமாக அணுகியதால், சிதைவுகள் (Things fall apart by Chinua Achebe) என்ற மிகப் பிரமாண்ட காவியம் உலகுக்கு தந்தார் சீ்ன்வா ஆசிபி. ஒரு புராதன சமூகத்தை, சமயம் பரப்ப வந்தவர்கள் அழித்த அவலத்தை அது விளக்கியது.
சமயம் பரப்புதலின் சூழ்ச்சியை வெளிப்படுத்தியது அந்த நுால். உலகின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக சிலாகிக்கப்படுகிறது.  ஆனால், இங்கு அந்த வாய்ப்பு ஏற்படவில்லை. கண்ணீருடன் கூடிய மன்றாட்டாக தங்கி விட்டது. பாவிகள், மீண்டும் மீண்டும் இந்திய சமூகத்தில் பிறந்து கொண்டிருக்கின்றனர். சாத்தானை நோக்கி, ஐரோப்பிய பாதிரிகள் எய்த அம்புகள், இப்போது நம் சகோதரர்கள் கையில். பாவிகள் பிறந்து கொண்டே இருக்கின்றனர். சாத்தான்களை நோக்கி அம்புகளை எய்து கொண்டே, அன்பையும், கருணையையும் கற்றுத் தருகிறார்கள்.
ஐரோப்பிய ஆண்டவரின் அன்பையும், நெகிழ்ச்சியையும் பெற, சொந்த மண் மண்டியிட்டு, அடிமையாக கிடக்கிறது. இந்த அவலம் இன்னும் உறைக்கவில்லை. எல்லாவற்றையும் இழந்தும் ‘பாவம்’ செய்து கொண்டே இருக்க வேண்டிய நிலை. எழுத்தறிவுக்கு விலையாக பாவமூட்டை முதுகில் ஏற்றப்பட்டது. எந்த சிந்தனை, இந்த பாவமூட்டையை இறக்கி வைக்குமோ... தெரியவில்லை.

No comments:

Post a Comment