Friday 15 June 2018

நீந்தும் நீர்காகங்கள்

சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டம், சசீந்திரம் போக வேண்டிய வேலை இருந்தது. சிறு துாறலுக்கு  ஒதுங்கி நின்ற போது  தாணுமாலையன் கோவில் தெப்பக் குளத்தில்,  நீர் காகங்களைக் கண்டேன். அவசர பணியின் போதும்,  நிதானமாக நோக்க மனம் லயித்தது. விலகி செல்ல மனம் வரவில்லை. தோதாக, துாறல் சிறு மழையானது வேறு...
கவனித்த போது, காதல் வயப்பட்டு, நீரில் ஆடிய நீர் காகங்கள் தனி அழகாய் தெரிந்து ஈர்த்தன.  அதை வர்ணிக்க சொற்கள் இல்லை.
இரண்டு மாதங்களுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில், முதலியார்குப்பம் பகுதியில் படகு சவாரி சென்ற போது, ஒரு மரத்தில், நீர் காகங்கள் காய்ந்து கொண்டிருந்ததை பார்த்தேன். அருகில் சென்று நோக்க முடியவில்லை.
சுசீந்திரம், பழையாற்றில் மீனை தின்றுவிட்டு, உட்பாறைகளில் இறகை காயவைத்துக் கொண்டிருக்கும் நீர்காகங்களை, பஸ் பயணங்களில்   கண்டிருக்கிறேன். அவை போடும் எச்சம், வெள்ளை நிறத்தில் பாறைகளில் படிந்திருக்கும். கறுப்பு நிறத்தில் அதன் மேல் அமர்ந்திருக்கும்.
இப்போதுதான், இயல்பை உற்று நோக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நீர் நிலைகளில் தலையை மட்டும் வெளியே நீட்டி நீந்திக் கொண்டிருக்கும். அவ்வப்போது, நீருக்குள் அமிழ்ந்து எதிர்படும் மீனைப் பிடிக்கும்.
 உடலை  நீருள் வைத்து நீந்தும் போது, பாம்பு  நீந்துவது போல் தோன்றும்.
நீரில் மீனைப் பிடித்த உடன், கழுத்தை வெளியே நீட்டி, மீன் தலை, முதலில்  வாயக்குள் செல்லும்படி தூக்கிப் போட்டு பிடித்து விழுங்கும். இந்த காட்சி அபூர்வமானது.
இதன் சிறகுகளில் எண்ணைப் பசை இல்லாதலால் தண்ணீர் சுலபமாக ஒட்டும். வயிறு முட்ட மீன் தின்ற பின் பறக்க வேண்டுமே? சிறகுகள் நனைந்திருந்தால் பறக்க முடியுமா...  சிரமத்துடன் மெல்லப் பறந்து,  அருகில் கல்லின் மீதோ, கிளையிலோ அமர்ந்து,  சிறகுகளை விரித்து உலர வைத்துக் கொள்ளும். உலர்ந்த பின் பறந்து செல்லும். அவை, சிறகை விரித்து காற்றில் அல்லாடும் அழகே தனி...

No comments:

Post a Comment