Thursday 14 June 2018

காயம் வலியை ஏற்படுத்துவதுதானே தவிர...

கால்பந்து ஓர் அபூர்வ விளயைாட்டு. உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்டது. உடலும் மனமும் ஒரே சீராக செயல்பட்டால், லட்சியத்தை அடையலாம் என்பதை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த பயற்சி.
இந்த விளையாட்டு போட்டிகளில் பிரமாண்டங்களை நிகழ்த்திய பல வீரர்கள் உலக அளவில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளனர். வீரம், திறன், நெகிழ்வு, நிதானம் குழு செயல்பாடு ஆகியவற்றை ஒரே நேரத்தில் அனுபவமாக உணர்த்தி ரசிகர்களை பிரமிக்க வைப்பது இந்த விளையாட்டின் சிறப்பு அம்சம். உற்சாக ரசிப்பு அனுபவத்தையே, பயன் சார்ந்த லட்சியம் நோக்கி இழுத்து செல்லும் வகையிலான செயல்பாட்டை கொண்டது.
கால்பந்தாட்டத்தில் உலக கோப்பைக்கான,  போட்டிகள் சமீபத்தில் பிரேசில் நாட்டில் நடந்தன.
 இந்த போட்டித்தொடரில் பிரேசில் நாட்டின் இளம் வீரர்  நெய்மார் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மைதானத்தில் பட்டாம்பூச்சி போல் பறந்து பந்தை லாவகமாக நோக்கி, லட்சிய வளையத்துக்குள் அடிக்கும் திறனை வியக்காதவர்கள் இல்லை. அவரது மைதான அனுபவம் சொல்லும் பாடம் மிக எளிமையானது.
`பயம் வெற்றிக்கனியை பறிக்க உதவாது; அது உங்களை வீழ்த்திவிடும்' எனபதுதான் அந்த பாடம்.
கடந்த முறை பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டித்தொடரில் கால் இறுதிக்கு முன்னேறுவதற்கு முன், ஒரு பரபரப்பான காலைவேளையில், டி.சி.எம். செய்தி நிறுவன நிருபர், நெய்மாருடன் நடத்திய பேட்டியின் தமிழ் வடிவம் இது. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தவர் என் மகன் ராஜாநிகில்.
போட்டியின் தமிழ் வடிவம் இதோ...

நிருபர்: பந்தை கோல் வளையத்துக்குள் செலுத்துவதற்கு எடுக்கும் முயற்சியின் போது, ஏற்படும் சறுக்கல்கள், உங்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதில்லையா?

நெய்மார்: இல்லை. நான் அமைதியாகத்தான் பந்தை எதிர்கொண்டு, நகர்த்துகிறேன். பதட்டம் அடைவதில்லை. வெற்றிக்கனியை பறிக்க, பயம் ஒருபோதும் உதவாது; அது நம்மை வீழ்த்தி புதைத்துவிடும். விளையாடும் போது,  வலிமையான அணிகளை எதிர்கொள்கிறோம் என்பது மனதில் இருக்கும்; ஆனால் பயம் துளியும் இருக்காது. தொடர்ந்து வெல்ல வேணடும் என்ற உணர்வுதான் மேலிட்டு இருக்கும்.
நிருபர்:  ஆட்டத்தின்போது, கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமே?

நெய்மார்: நீங்கள் உங்கள் கனவில் உறுதியாக இருந்து, அதிலேயே வாழும் போது நெருக்கடி என்பது தெரியாது; லட்சியத்தை அடையும் வழி தான் தெரியும். நான் சிறு வயது முதலே, என்ன ஆக வேண்டும் என, கனவு கண்டு கொண்டிருந்தேனோ, அதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தேன். இன்று என் கனவு நனவாக கைகூடிவருகிறது. நான் என்ன நினைத்தேனோ அதுவாக மாறிவருகிறேன். அதை நோக்கி நகர்ந்து வருகிறேன்.

நிருபர்: வீரர்கள் தங்களுக்குள் முரண்பாடுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லதல்லவா?

நெய்மார்: உண்மைதான். நாம் இருக்கும் இடம்தான் நமக்கு சொர்க்கம். நாம் எந்த அணி சீருடையை அணிகிறோமோ அதை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். எவ்வளவோ திறமையான வீரர்கள் உள்ளனர். அனைவருக்கும் உலக கோப்பை தொடரில் ஆடும் வா்ய்ப்பு கிடைப்பதில்லை. ஏத்தனையோ பேர் இந்த வாய்ப்புக்காக ஏங்கிக் கிடக்கின்றனர் என்பதும் எனக்கு தெரியும். அ்ந்த வகையில், எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதை பெருமையாக கருதுகிறேன்.

நிருபர்: தங்க காலணியை வெல்லும் ஆசை  உங்களிடம் இல்லையா?

நெய்மார்: அப்படியெல்லாம் ஆசை இல்லை. நான் சிறந்த வீரன் என்றோ, அதிக கோல் அடித்தவன் என்ற பெயரைத் தட்டிச் செல்ல வேண்டும் என்றோ எதிர்பார்க்கவில்லை. நான் எதிர்பார்ப்பது என் அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான். அதுதான் என் கனவாக உள்ளது. நான் கோல் அடிப்பது மட்டும் அல்ல; என் அணியில் உள்ள வீரர்கள் கோல் அடிக்க உதவுவதும்தான் விளையாட்டு. இதை ஒவ்வொரு வீரனும் மனதில் வைத்தால், வெற்றிக்கனியை பறிப்பது சுலபம்.
நிருபர்: அனைத்து நாட்டிலும் உங்கள் அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனரே?
நெய்மார்: நாங்கள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தமான அணியாகத்தான் இருக்கிறோம். எங்கள் சக்தியை முழு அளவில் பயன்படுத்துகிறோம். பல நேரங்களில் போட்டிகளில் எதிர் அணியை எளிதாக எதிர் கொள்ள முடிவதில்லை.

நிருபர்: சிலிக்கு எதிரான உங்கள் ஆட்டத்தைப்பற்றி கூறுங்கள்?
நெய்மார்:நாங்கள் கடுமையாக போராடினோம் என்பதுதான் உண்மை. ஆட்டம் முடிந்த பின் என் கண்களில் வடிந்த நீர், மகிழ்ச்சி என்ற கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. அந்த அணியை வென்றால்தான், தொடரில் நாங்கள் முன்னேற முடியும் என்ற நிலையில் வெறியுடன் ஆடினோம்.


நிருபர்: ஆட்டத்தில் காயம் ஏற்படும் போது, தொடர்ந்து விளையாட முடியுமா என்ற  நம்பிக்கை சிதைவு ஏற்பட்டது உண்டா?

நெய்மார்: ஒரு ஆட்டத்தில் கால் தடுமாறி விழுந்து விட்டேன். சிறிய வலியாகத்தான் அதை உணர்ந்தேன். அதை கடந்து வர சிறிய ஓய்வு மட்டுமே தேவைப்பட்டது. காயம் என்பது வலியை ஏற்படுத்துவதுதானே தவிர, நம்பிக்கை சிதைவை ஏற்படுத்துவது அல்ல. அப்படித்தான் அதை எடுத்துக்கொண்டு ஆட்டத்தை  எதிர்கொள்ள வேண்டும்.

நிருபர்: உலக கோப்பையில் அனைத்து ஆட்டங்களையும் சொந்த மண்ணில் ஆடுவதில் ஏதாவது வித்தியாசம் கண்டீர்களா?
நெய்மார்: இது ஒருவகையில் எங்களுக்கு நன்மை என்றுதான் நினைக்கிறேன். உலகக் கோப்பையை நடத்தும் நாடாக எங்களுக்கு பெரும் நெருக்கடி உள்ளது. ஆனால், ரசிகர்களின் உற்சாகம் எங்களை வழிநடத்துகிறது.
நிருபர்: இது உங்கள் முதல் உலகக் கோப்பை ஆட்டம் அல்லவா?
நெய்மார்: போட்டி துவங்கும் முன்பே, என் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்துவிட்டன. பிரேசில் வீரர்களுக்கான சீருடையை அணியும் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
நிருபர்: லுாயிஸ் பெலிப் ஸ்கோரி போன்ற சிறந்த பயிற்சியாளர்களை வைத்துக்கொள்வதை முக்கியமாக கருதுகிறீர்களா?
நெய்மார்: அவரை பயிற்சியாளராக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமாக கருதுகிறேன். நாங்கள் அவரை மிகவும் மதித்து தினமும் தொழுகிறோம். அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், எப்போதும் மரியாதையை திருப்பித்தரும் பண்பு அவருடையது. அதை நாங்கள் காப்பாற்றுவோம்.

இந்த பேட்டி, கால்பந்தாட்ட வீரராக நெய்மாரின் உற்சாகத்தை மட்டும் அல்ல, கூட்டு செயல்பாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

தமிழில்: ராஜாநிகில்

No comments:

Post a Comment