Saturday 9 June 2018

விழிநீர் சோர நின்றேன்


‘ஆடும் பருவத்திலேயே எனை ஆட்கொண்ட பெரியார்,’ என்ற 72 பக்க தன் வரலாற்று புத்தகத்தை, 65 நிமிடங்களில் வாசித்து முடிந்தேன். கடைசி பக்கங்கள், பெரியார் துணைவி மணி அம்மையாரின் மறைவு சித்திரத்தை காட்டுகிறது. மணி அம்மையார் உடல் முன், ‘விழிநீர் சோர நின்றேன்,’ என்று பதிவு செய்துள்ளார் புத்தக ஆசிரியர் மா.கோபாலன்.
பெரியார் குடும்பத்துடன் இருந்த  பிணைப்பை வெளிப்படுத்த, இதை விட உருக்கமான மொழி, வேறு இல்லை என்றே தோன்றியது.
 தன், 14 வயதில் பெரியாரை சந்தித்த, மா.கோபாலன், அவருடன் பிணைந்த வாழ்க்கை அனுபவத்தை, பதிவு செய்துள்ளார். பெரியாரை மட்டுமே சுற்றி சுழலவில்லை பதிவு. திராவிடர் கழக வளர்ச்சி, சென்னை நகர மாற்றம், அரசு ஊழியர் செயல்பாடு போன்றவற்றை ஊறி வடிந்து பதிவாக்கியுள்ளார்.
குஞ்சிதம் அம்மையார் பற்றிய பதிவு நெகிழவைக்கிறது. எளிமை, கொள்கை பிடிப்பு, சகிப்பு, உறுதி போன்றவை, எப்படி ஒரு வாழ்க்கையை கட்டமைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அவரது வாழ்க்கை, சமூகத்துக்கு உணர்த்திய பாடம், தமிழ் சமூகத்தின் வாழ்க்கை நெறியாக மாறவில்லை என்றே தோன்றுகிறது. இந்த பாடத்தை கற்றிருந்தால், தமிழர்களின் வாழ்க்கை, விரிவையும் ஆழத்தையும் தேடி, பயணப்பட்டிருக்க வேண்டும்.
நுõலாசிரியர், அரசு அதிகாரியாக பணியாற்றியவர். பெரியாரின் அன்றாட செயல்பாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தவர். பிணைப்பு கொண்டிருந்தாலேயே, கோபாலன், தன் சுய கருத்தை அழித்துக் கொண்டவராக தெரியவில்லை. நடந்தவற்றை இயல்பாக்கி, தன் எண்ணப்போக்கையும் பதிவு செய்துள்ளார்.

புத்தகத்தில் இருந்து...
புற்று நோயால் பாதிக்கப்பட்டு, தாங்க முடியாத வலியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த போதும் கூட, குஞ்சிதம் அம்மையார், ‘இங்கர்சால் போன்ற மேலைநாட்டு பகுத்தறவு வாதிகள்,  கடவுள் நம்பிக்கையோடு இறந்ததாக கூறினார்கள். என்னைப்பற்றியும் அவ்வாறே கூறிவிடுவார்கள். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவள். கடவுள் நம்பிக்கை இல்லாதவளாகவே இறக்கிறேன். இதை பதிவு செய்து கொள்ளுங்கள்,” என்றார்.
அப்போது, அகில இந்திய பகுத்தறிவாளர் சங்க தலைவராக இருந்தவர் எஸ். இராமநாதன். ராசாசி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். குஞ்சிதம் அம்மையாரின் இறுதி வாக்குமூலத்தை அவர்தான் பதிவு செய்தார். அதற்கு இரண்டு பேரின் சாட்சி கையெழுத்தும் வாங்கப்பட்டது.
குஞ்சிதம் அம்மையார், நெற்றியில் பொட்டு கூட வைத்துக் கொள்ள மாட்டார். பொட்டு வைத்துக்கொள்வது ஒரு மதத்தார் பழக்கம்; அந்த மதத்தின் சின்னம்.
திருமணங்களில் தாலியை ஒரு தட்டில் தேங்காயுடன் வைத்து, வந்திருக்கும் பெரியவர்களிடம் வாழ்த்தித் தருமாறு கேட்டுக் கொள்வார்கள். பெண்கள் உட்கார்ந்திருக்கும் பகுதிக்கு வரும் போது, குஞ்சிதம் அம்மையாரிடம் தாலியைக் காட்ட மாட்டார்கள். அவர் நெற்றியில் பொட்டு இல்லாததால், அவரை கைம்பெண் என்றும் விதவை என்றும் கருதி, அடுத்து உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் சென்று வாழ்த்து பெறுவார்கள். அதை குஞ்சிதம் அம்மையார் அவமானமாக கருதியதே இல்லை.
‘திருமண வீடுகளில் இவ்வாறுதான் நடக்கும். நான், அதை பொருட்படுத்துவதே இல்லை’ என, சிரித்துக்கெண்டே அவர் சொல்வார்.                                                      பக்கம்: 36-37
என் வாசிப்பும்... அனுபவமும்...
வாசிக்கும் அனுபவத்தை, 80 களில் இருந்து பெற்று வருகிறேன். வாசிக்கும் போது, தகவலுடன் , அதை படைத்தவர் பற்றிய மதிப்பீடும், எண்ண ஓரத்தில் அனுபவமாக பதிவாகிறது. இந்த புத்தக பதிவு, நெகிழ்வை ஏற்படுத்துகிறது. புத்தக ஆசிரியர் மா. கோபாலன், கடந்த ஆண்டு மறைந்தார். அவரை பற்றி, சில உரையாடல்களின் ஊடே அறிந்திருக்கிறேன். அவரது கையெழுத்து பிரதியை பார்க்கவும் ஒரு நேரம் வாய்த்தது. இந்த பதிவு பிரதியை அல்ல. அப்போது அவர் உயிருடன் இருந்தார். போதிய கவனம் இன்மையால், அவரை சந்திக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். இந்த புத்தகத்தை வாசித்தபின், அவரை சந்திக்கும் வாய்ப்பை தவறவிட்ட குற்ற உணர்வு ஏற்படுகிறது.
படைப்புகளை வாசித்துவிட்டு, படைத்தவர்கள் மீது ஏற்படும் மதிப்பீடு அடிப்படையில், அவர்களை சந்திக்கும் விரும்பம் ஏற்படுகிறது. சந்திக்கும் போது, மதிப்பீடுகள் மறுபரிசீலனைக்கு உள்ளாவதும் உண்டு.
 வாசிப்பின் அடிப்படையில் சந்திக்க விரும்பியவர்கள் வரிசை கே. டேனியல்,  நந்தி, அதின் பந்தோபாத்யாய, வைக்கம் முகமது பஷீர் என்று நீண்டு போகிறது. வாசித்தபோது ஏற்பட்ட அதே நெகிழ்ச்சி, சந்தித்த போதும் மாறாமல் இருந்ததில் எம்.எ. நுக்மான், சுந்தரராமசாமி, ராமாமிர்தம், ஏசுதாசன், ஹெப்சிபா, பவா செல்லத்துரை, கோணங்கி, நாராயணன், மாலதி, ஞானி என, வரிசை நீழ்கிறது. யாழ்ப்பாணத்தில் நந்தி வீட்டை பார்த்த போது, நெகிழ்வும் சோகமும் கலந்து கண்ணீரை கரைத்தேன்.

No comments:

Post a Comment