Tuesday 5 June 2018

பார்வையாளர் அல்ல... மாணவன்

தமிழகத்தில் மனிதர்களை சந்திப்பது அபூவமான நிகழ்வாகி வருகிறது. ஒரு முன்மாதிரியை சந்திக்க வேண்டுமானால், நீண்ட முயற்சி எடுக்க வேண்டும். கடும்யைாக மெனக்கெட வேண்டும்.  அப்படியே சந்தித்தித்து விட்டாலும், பன்மயத்திலும் திட்டவட்டமாக பொருத்திவிட முடியாது. அங்காங்கே கோணல் மாணல்கள், அதிருப்திகள் தவிர்க்க முடியாது

அதிகாரத்துக்காக வளைவது, பணத்துக்காக கருத்தை மாற்றுவது, பதவிக்காக துதிபாடுவது, சுயமரியாதையை பேசிக் கொண்டே அதை மறந்து விடுவது,  புறம் பேசுவதற்காக சொற்களை இழுத்த இழுப்புக்கு பயன்படுத்துவது... 
இப்படி தமிழக வகை மாதிரிகள் பற்றி, சொல்லிக் கொண்டே போகலாம். 
அரசியல், அதிகார வர்க்கம், தொழில் நிறுவனங்கள் மட்டும் அல்ல. இப்போது கல்வித்துறை இதில் முன்னிலை வகிக்கிறது. கற்பனைக்கு எட்டாத இழிவையும் ஒரு நொடியில் கண்முன் கொண்டு நிறுத்தி விடுவர் கல்வியாளர்கள்.
இப்படிப்பட்ட சூழல்களை, என் தொழில்  பயணத்தில் நெருக்கமாக சந்தித்து வந்திருக்கிறேன். இந்த சூழலில்தான் சுயம் சார்ந்து தொடர்ச்சியாக இயங்கும் ஒருவரை சந்திக்க  நேர்ந்தது. அவர்தான் பேராசிரியர் ரவீந்திரன். சென்னை பல்கலைக் கழக இதழியல் துறை தலைவர். அவருடனான அனுபவம் இனிமையானது... நெகிழ்வானது.
 ஓரு விநோத அனுபவத்தை பகிர்கிறேன்.
சென்னை பல்கலையில் ஒரு டிசம்பர் மழைநாள். யாழ்ப்பாண பல்கலைக் கழக இதழியல் மாணவர்கள் நுட்ப பயிற்சிக்காக வந்திருந்தனர். பயிற்சியின் இறுதிநாள். மாணவர்கள் கற்ற வித்தைகளை காட்ட வெளி அரங்கும், பிரிவு உபசார நிகழ்வுக்கு உள் அரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக மணிக்கூண்டு அரங்கில் வெளி அரங்க நிகழ்வு மாலையில் துவங்கி, இரவு, 7:00 மணிக்குள் முடிக்கும் வகையில் நிரல் படுத்தப்பட்டிருந்தது. அதன் பின் பிரிவு உபசாரம் முன்னிரவில் நிரல் செய்யப்பட்டிருந்தது.
மாலையில் நிகழ்வுக்கு முன் மேகம் கலைந்து ஓடிக்கொண்டிருந்தது. லேசான துாறல் வருவதும், அது பல்கலைக்கழக புல்தலைகளை வருடி, வங்கக்கடலை நோக்கி பாய்ந்து கொண்டே இருந்தது. 
பயிற்சியின் கடைசி நாள் என்பதால், யாழ்ப்பாண மாணவர்கள் சென்னையை சுற்றிப்பார்க்க சென்றுவிட்டனர். அவர்களின் நிகழ்ச்சிக்காக நிரல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில், மணிக்கூண்டு அரங்குக்கு வரவில்லை.
 நேரம் கடந்து கொண்டிருந்தது. திட்டமிட்ட நிரல்ப்படி, நிகழ்ச்சிகள் முடியம் நேரத்தில்தான் யாழ் மாணவர்கள், அரங்குக்கு வந்து சேர்ந்தனர். 
பேராசிரியர் ரவீந்திரன் புன்னகையுடன் அரங்கில் காத்திருந்தார். மாணவர்களும் அவருடன் இருந்தனர். மாணவர்கள் முகங்களில் பல்வேறு சந்தேகங்கள் தெரிந்தன.
எந்த பரபரப்பும் இல்லை. மழை லேசாக துாறிக் கொண்டிருந்தது. நிகழ்வு நடக்குமா அதுவும் திட்டமிட்டபடி... அதாவது நிரல்ப்படி. சந்தேகம்தான்.
இப்போது யாழ் மாணவர்கள் மணிக்கூண்டு முற்றத்துக்கு வந்துவிட்டனர். திட்டமிட்டபடி நிகழ்வு துவங்கியது. பார்வையாளர் முன் வரிசையில் பேராசிரியர் ரவீந்திரன் குடும்பத்தினருடன். நீரலில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலைகளை வெளிப்படுத்தினர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். 
துாறலாக விழுந்த மழை துளிகளானது. அது விழிநீரில் தங்கி பார்வையை மறைத்தது. துளிகள் தடித்து வெள்ளிக் கோடுகளாக விழுந்தன. நீர் திவலைகள் சிதறி துடித்தன. அவை, மணிக்கூண்டு முற்றத்தில் விழுந்து தகித்தன.
 பார்வையாளர்கள்,  இருக்கைகளை விட்டு எழுந்து, சுற்றிலும் உள்ள திண்ணைகளில் புகுந்தனர். நிகழ்வை இந்துடன் முடித்து விடுவர்களா?. பார்வையாளர்கள் எதிர்பார்ப்பு இது.
எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை.
 பேராசரியர் ரவீந்திரன் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. மழைத்துளிகளை தடுக்க, மாணவர்கள் குடை வழங்கினர். அதை பிடித்தபடி, இருக்கையை விட்டு அசையாமல் ரசித்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். கொட்டும் மழையில் தடங்கல் இன்றி மாணவர்கள் ஆடினர், பாடினர், நடித்தனர். மகிழ்ந்தனர். 
கடும் மழை... கொட்டோ கொட்டென்று கொட்டியது. முற்றத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.  சூழலே மாறிவிட்டது. பேராசிரியர் எந்த சலனமும் இன்றி நிகழ்ச்சியை அவதானிப்பதிலேயே கவனமாக  இருந்தார். பெருமிதம் கொண்ட மாணவ, மாணவியர் நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தனர்.
 நள்ளிரவு 11:00 மணி வரை. தடங்கலை தாண்டி, நிரல்படுத்தப்பட்டிருந்த அனைத்து நிகழ்வுகளும் திட்டமிட்டபடி நடந்தது.
நிகழ்வு முடிந்து மாணவர்களுக்கு உணவு பரிமாறி, முறையான பிரிவு உபசார நிகழ்வும் நடந்தது. நள்ளிரவில் நிகழ்வு நிறைவு அடைந்தது. இது  நிகழ்வல்ல... பாடம்... இது பொது இடம் அல்ல... வகுப்பறை... நான் பார்வையாளர் அல்ல... மாணவன்.
 அனுபவ பாடங்களை அள்ளி வழங்கும்  பேராசிரியர் ரவீந்திரனின் ஒவ்வொரு சந்திப்பும் நெகிழ்வு நிறைந்தவை. வாழவும் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளவும்  அவரிடம்  நிறைய இருப்பதாக உணர்கிறேன். 
                                                                                                            


No comments:

Post a Comment