Tuesday 5 June 2018

இருக்கிறது; இல்லாமலும் இருக்கிறது...


மருதுார் கோபாலமேனன் ராமச்சந்திரன் நடித்த சினிமாவைப்பார்த்து ஒருவர் மதுப்பழக்கத்தை வெறுக்க முடியுமா? அவரின் நிழல் ஆட்டத்தை புரிந்து புகைப்பதை பகைக்க முடியுமா? முடியும் என்பதை அனுபவமாக எடுத்து சொல்கிறது ஒரு தன் வரலாற்று புத்தகம். அது, பேராசிரயர் மு. ராமசாமியுடையது.
தமிழர் வாழ்வில் திரைப்படம் புகுந்து ஆட்டம் போட்டதன் விளைவு பெரும் கதையாக தொடர்கிறது. அதன் ஒரு பகுதியை,  கால ஓட்டத்தை புறக்கணிக்காமல்  நிகழ்வை உயர்த்துடிப்புடன் பதிவு செய்துள்ளது திரை வளர்த்த நான்... நான் வளர்த்த திரை எனராசிரியர் மு. இராசுவாமி அனுபவங்களை பதிவு செய்ததுள்ளார்.  பதிவுகள் என்ற முதல் இயலில் ஒவ்வொரு வரியும் உண்மை சார்ந்து  உள்ளத்தில் உறைந்து உதைத்துக் கொண்டே இருக்கிறது. சார்ந்த அனுபவத்துடனோ, இந்த புத்தகத்தில் பதிவு செய்யவில்லை. அந்தந்த வயதில், அப்போது இருந்த புறவயத்துடனும் அது சார்ந்த  உள்ளடக்கங்களை  உண்மை சார்ந்து அணுகி, பதிவு செய்து, அனுபவ  வௌியை உருவாக்கியுள்ளது.
 தமிழ் சினிமாவின் செயல்பாடு, சாதாரண ரசிகனின் அனுபவ வௌியில் ஏற்படுத்திய மாற்றங்களை  தடயங்களாக பதிவு செய்துள்ளது. புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் உயர்ந்த விழுமியத்தை தருகிறது. இந்த அனுபவ உலகில் போலிகளே இல்லை அல்லது காணமுடியவில்லை; பாசங்கை பார்க்க முடியவில்லை; கர்வத்தை கண்டுபிடிக்க முடியவில்லை; வெட்கமும்  கூச்சமும் கூட, வேண்டாதவையாக வெளியில் நிற்கின்றன. 
அனுபவங்களில் விவரிப்புகள் இல்லை. அது காலத்துடன் சங்கமித்து கருக் கொள்கிறது.  எல்லாம் இருக்கிறது; இல்லாமலும் இருக்கிறது என்ற அளவில்  எல்லையற்ற உண்மையை  பதிவு செய்துள்ளது. இங்கே  வண்ணப்பூச்சிகள் இடம் மாறி வந்து சிறகடிக்கவில்லை. தோப்பு துரவு பசுமையை நிகழ்த்த வில்லை. எல்லாம் அதனதன் வௌியில்  பார்வைக்கு எளிதாக நிற்கின்றன. 
சினிமா தியேட்டர் வாசலில் நிகழும் மூன்று சீட்டு சூதாட்டம் தரும் அனுபவம் சார்ந்து, அகமனம் எடுக்கு்ம் சபதம் மனிதனின் அகவெளியில் நிரம்பியிருக்கும் உண்மை. இதுபோன்று வாழ்வின் நேர்மையை வௌிப்படுத்தும் தளங்கள்  ஏராளமாக கிடக்கின்றன.
நிழல் அசைவில் அறம் கற்று, அதை வாழ்க்கையில் செயலாக்கும் அற்புதம் இந்த புத்தகத்தில் நிகழ்ந்திருக்கிறது. சினிமாவை பார்த்து உள்வாங்கிய அறத்தை, சினிமாவுக்குள் சென்றபோது அழிக்க முயலும் இடத்தில், இயல்பாகி போன செயல்பாட்டை, பின்பற்றி நிற்பதில் உள்ள உறுதி  உன்னதமாக மலர்கிறது.
சினிமா கலை, தனிமனித வாழ்க்கை, சமூக செயல்பாட்டு தளத்தில் ஏற்படும் மாற்றம், வரலாற்றுப்போக்கு என்று இந்த புத்தகத்துக்குள் புதைந்து கிடப்பவை ஏராளம். ஒன்றை ஒன்று சார்நது அவை எப்படி உருவாகின்றன என்பதை இந்த நுால்  இயல்பாக  பேசுகிறது. இவற்றுக்கு எல்லாம் அச்சாக  தாங்கி பிடித்துள்ள தத்துவம் இறுதியில் வௌிப்படுகிறது, உண்மையின் சாயல் எப்படி இருக்கும் என்பதை இந்த அனுபவங்களின் வெளியில் இருந்து அறிய முடிகிறது. வாசிக்கும் போது நெகிழ்வும் வியப்பும் மாறி மாறி மனதில் தவழ்ந்து, உறங்கிக் கிடக்கும் உப்புகரைசலை வௌியேற்றுகிறது. 
தமிழ் மொழியில் இயல்பான வாசிப்புக்கு ஏற்ற சிறந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. நுட்பமான அனுபவத்தை தரும்.
பேராசிரியர் மு. ராமசாமியின் புத்தகம் குறித்த அறிமுகம்



No comments:

Post a Comment