Thursday 12 July 2018

நொடிக்கு நொடி உயிர்பெறும் கோடுகள்

சென்னை, அண்ணாசாலை செய்திப்பிரிவில் பணியில் சேர்ந்த போது, வியப்புடன் பார்த்திருக்கிறேன். மாலையில்தான் வருவார். வரைவார். வியப்பை தருவார். வெள்ளை தாளில் கருப்பு மையால் உயிர் ஊட்டுவார். அந்த வியப்பு தமிழகத்தில் மறுநாள் பரவும். அந்த பொந்து பேனாவுக்கு தனித்துவம் உண்டு. அது சுழல்வது தனி அடையாளம். சுழற்சியின் நுட்பம் புலப்படாது. கோடுகள் போல் தோன்றும். நொடிப்பொழுதில் உயிர் பெறும். ரசிக்கும் பாமரத்தனம் மிக்கவை. சுய சிந்தனையை துண்டுபவை. மெல்லிய நகைச்சுவை ஊடாடுபவை.
சமூக நடத்தைகளை உள்வாங்கி, மிக நுட்பமாக வெளிப்படுத்துவார். இந்திய கார்டூன் உலகின் நாயகன். அவரது கோடுகளுக்கு இணை ஏதும் இல்லை. நீண்ட செய்தியை, சில கோடுகளில்... பெரும் பெகளத்தை, மெல்லிய வரிகளில் வெளிப்படுத்தி வியக்க வைப்பார்.
கடந்த, 2010 ல் ஓய்வு பெற்றார். கிட்டத்தட்ட, 22 ஆண்டுகள் பழக்கம். கடைசி சில ஆண்டுகளில், எங்கள் பணி மேஜைகள் அருகருகே அமைந்தன. பேசுவதற்கும், உலாவுவதற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அவரது உரையாடலின் ஊடே, எளிய நகைச்சுவை படரும்.
பணியில் சேரும் முன்பே, அவரது கார்டூன்கள் எனக்கு பழக்கம். அவை உயிர் பெறுவதை, சொந்த ஊரில் காட்சியாக பார்த்திருக்கிறேன். அவரது உணர்வு, பாமரன் செயலில் வெளிப்பட்டது.
ஓய்வுக்கு பின், சில முறை அவரை சந்தித்துள்ளேன். அரசின் ஓய்வூதியம் பெறுவதற்கான முயற்சிகள் அவை. பெரிய அளவில் கைகூட வில்லை.
பின்னர், சொந்த ஊரான கேரள மாநிலம், கோட்டயம் சென்றுவிட்டார். அங்கும் வரைந்தார்... வரைகிறார்... வரைவார்... நீண்ட நாட்களுக்கு பின், சென்னை வந்தார். ஒரு மாலை சந்திப்பு. ஒரு சிறு மழையின் நடுவே நீண்ட உரையாடல். அன்பின் வெளிப்படுத்தல். விடைபெறும் போது சொன்னார்...
‘அமுதன்... ஆயில் பெயிண்டிங் வரைய படிச்சிட்டு இருக்கேன். வாரத்துக்கு நாலு வகுப்பு. புதிய துறை...   ஆர்வமா இருக்கு...’
கார்டூனிஸ்ட்  E.P. பீட்டர்

No comments:

Post a Comment