தேர்தலில், உங்கள் தொகுதியில் களத்தில் நிற்கும் எல்லா வேட்பாளரையும் நிராகரிக்கும்
உரிமை உங்களுக்கு உண்டு.
இந்த உரிமையை நிலைநாட்டுவது குறித்த வழக்கு ஒன்பது வருடம் நிலுவையில் இருந்தது. வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் அடங்கிய அமர்வு, 51 பக்கத்தில்
தீர்ப்பு எழுதி
முடித்து வைத்தனர்.
முதலில். 49 ஓ என்பது என்ன என்பதை அறிந்து கொள்வோம். உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் தகுதியற்றவர்களாக நீங்கள் கருதினால், அவர்களை நிராகரிக்கும் வசதிதான் 49 ஓ.
இந்திய தேர்தலில் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை, 1961 ல் அமல்படுத்தப்பட்டது. ஒரு வேட்பாளருக்கு ஓட்டுப்போட தெரிந்த நமக்கு, எந்த விதிப்படி அவரை தெர்ந்தெடுக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்வதும் முக்கியம். தலை விதியே என, இயந்திரகதியில் ஓட்டுப்போடும் மானோபாவத்தால் தான்,
எந்த கட்சி ஆட்சிக்கு
வந்தால் என்ன என்ற நம்பிக்கை இன்மையை ஏற்படுத்துகிறது.
ஒரு தொகுதியில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களையும்
நிராகரித்து
ஓட்டுப் போடுவதற்கு, ‘49ஓ’ என்ற தேர்தல்விதி அனுமதிக்கிறது. நிராகரிக்க உரிமை இருக்கும் போது, ஒருவரை ஆதரிக்கவும் சட்ட விதி இருக்க வேண்டும் அல்லவா. அது தேர்தல் விதியில், ‘49 எல்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
பார்வையற்றோர் அல்லது உடல் நலமற்று ஓட்டுப்போட இயலாதவர்கள், உதவியாக ஒருவரை வைத்து ஓட்டுப்போட, ‘49 என்’ என்ற சட்ட விதி அனுமதிக்கிறது. அதாவது,
இது போன்றோர் ஓட்டை பதிவு செய்ய, 18 வயதுக்கு குறையாத ஒருவரை உதவிக்கு வைத்துக்கொள்ள முடியும்.
ஓட்டுப்போடும் ரகசியத்தை
காப்பாற்ற, ‘49 எம்’ என்ற விதி உள்ளது. அதாவது யாருக்கு ஓட்டுப்போட்டேன் என்பதை வௌிப்படுத்தாமல் இருப்பதற்கான தடை விதி. அவ்வளவே.
இந்த விதிகளை புரிந்து கொண்டால், ‘49ஓ’ என்ற விதியை பயன்படுத்தி, நெட்டாவுக்கு ஓட்டுப்போடுவதை வித்தியாசமான
அணுகுமுறையாக
பார்க்க மாட்டார்கள்.
வேட்பாளர்களை நிராகரிக்கும்
வாக்குரிமை சட்டப்படியாக
உள்ள விவரம் கடந்த, 2001 ல் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டித்தான் பரவலாக தெரியவந்தது. அதுவும், வேட்பாளர்கள் மீது அதிருப்தியில் இருந்த தன்னார்வலர்கள், சட்டத்தை ஆராய்ந்து, இப்படி ஓர் 'ஓ' சமாச்சாரம் இருப்பதை கண்டறிந்து சொன்னார்கள்.
கடந்த, 2004 நாடாளுமன்ற தேர்தலின்
போது அது உயிர்ப்பெற்றது. அப்போது,
’49 ஓ ‘ குறித்து விழிப்பு
ஏற்படுத்த பல அமைப்புகள் பிரசாரம் செய்தன. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களை மறுக்கும் உரிமைக்கான குறியீடு அந்த தேர்தலில் அமைக்கப்படவில்லை.
யாருக்கும் ஓட்டுப்போட விரும்பவில்லை என்றால், 49 ஓ என்ற விதியை பயன்படுத்த பிரத்யேகமாக வழங்கப்பட்ட, 17 ஏ என்ற படிவத்தை பூர்த்தி செய்து தேர்தல் அலுவலரிடம் ஓப்படைக்க வேண்டி இருந்தது. அது, ரகசியம் காக்கும் நடவடிக்கைக்கு மாறாக இருந்ததால் இதை பயன்படுத்துவதில் தயக்கம் இருந்தது.
இதனால், வெகுசில ஆர்வலர்கள் தவிர, வேட்பாளர்கள் மீதான அதிருப்தி ஓட்டை
பதிவு செய்வது குறைவாக இருந்தது.
சமூக ஆர்வலர்கள், இந்த பிரச்னையை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காகப் பதிவு செய்தனர். அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
மீண்டும், 2006 சட்டமன்ற தேர்தல் நடந்த போது, இந்த பிரச்னை பெரிதாக பேசப்பட்டது. வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையை ஓட்டாக பதிவு செய்ய, ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் தனி பொத்தான்
அமைக்க வழக்குப் போட்டனர்.
சுப்ரீம் கோர்ட், 2013 செப்டம்பர் 27 தேதி முக்கிய உத்தரவை பிறப்பித்தது. வேட்பாளர்களை பிடிக்கவில்லை
என்றால் நோட்டாவை (NOTA – None Of The Above) தேர்வு செய்ய வாக்காளர்களுக்கு வாய்ப்பளிக்க ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், நோட்டா பொத்தானை அமைக்க உத்தரவிட்டது.
ஓட்டுப்போடும் இயந்திரத்தில் பட்டியலின் கடைசியில்,
'X' என்ற குறி இட்ட ஓர் சின்னம்
இருக்கும். அந்த
பொத்தானை அழுத்தினால், அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் ஓட்டுப்பதிவாகும். வழக்கம் போல் மற்ற வேட்பாளருக்கு பதிவு செய்வது போல் பதியலாம். அதுதான், யாருக்கும் இல்லை என்பதற்கான ஓட்டு.
சரி. நோட்டாவில் அதிகம் ஓட்டுப்பதிவானால் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும். இந்த கேள்வி எழுவது இயல்புதான். இப்போதுள்ள அமைப்பில் ஒரு மாற்றமும் நடக்காது. ஒரு புள்ளி விவரம் மட்டும் கிடைக்கும். அதிகளவில் நோட்டாவில் ஓட்டுப் பதிவானாலும், அதற்கு அடுத்த நிலையில் எந்த வேட்பாளர்
அதிக ஓட்டு பெறுகிறாரோ அவர் வெற்றி பெற்றதாக, தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
வாக்காளர்களின் கருத்தையும்,
வேட்பாளர்களின் மதிப்பையும் அறிந்துக் கொள்ள மட்டுமே இது பயன்படும். .ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தால் அந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளரின் தரத்தை அறிந்துக்
கொள்ள உதவியாக இருக்கும். அவ்வளவுதான்.
இந்திய சட்டப்புத்தகத்தில்
கூறப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்தரத்தின் கீழ், வேட்பாளர்களை பிடிக்கவில்லை
எனில், வாக்காளர்கள் அதை வெளிபடுத்த அவர்களுக்கான ஓர் வாய்ப்பாகத்ான் நோட்டா செயல்படும்.
நோட்டா போன்ற விதிகள் கொலம்பியா, உக்ரைன்,
பிரேசில், பங்களாதேஷ், பின்லாந்த், ஸ்பெயின், ஸ்வீடன், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும்
கிரீஸ் போன்ற நாடுகளில்
தேர்தல் முறையில் அமலில் உள்ளது. அந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது என்பதைத் தவிர வேறு எதுவும் 49 ஓ வால் நடக்காது. ஆனால, 49 ஓ வுக்கு ஓ...ஓ... ஓ... போட்டால், அரசியல் ரீதியான மாற்றத்துக்கான கட்டாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
No comments:
Post a Comment