Tuesday 16 April 2019

முள் அரசும் உயிர் அம்பும்

சென்னை, பழைய மாமல்லபுரம் சாலை, ராஜீவ்காந்தி சாலை என அழைக்கப்படுகிறது. அடையாறு மத்திய கைலாசில் துவங்குகிறது. சென்னை வந்த போது, இங்கெல்லம் முறையான சாலை வசதி கிடையாது. ஏதாவது செய்தி என்றால் தகவல் திரட்ட சிரமப்படுவோம். இரவில் கேட்கவே வேண்டாம்.
இப்போது, கடும் நெரிசல். கவனம் சிதறினால் அவ்வளவுதான். இந்த சாலையில் இந்திராநகர் ரயில்நிலையம் எதிரே, ரோஜா முத்தையா நுாலகத்துக்கு பிரிகிற உதவிச்சாலை நடுவே ஒரு மரம் உள்ளது. அதன் அடையாளத்தைக் கேட்டிருந்தார், ஜீனத் நிஷா.
அலுவலக வழியில், காலை அந்த மரத்தை பார்த்தேன்.
ரோஜாமுத்தையா நுாலகம், ஆசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம், சாமிநாதன் பவுண்டேஷன் என, அந்த வழியில் பலமுறை போயிருக்கிறேன். கவனம் பிசகியது ஆச்சரியமாக இருந்தது.
அடிமரம், கிளை  என, முழுக்க முட்கள் நிறைந்துள்ளது. அவை, சிறிய யானைத் தந்தம் போல் வளைந்துள்ளன. பூனை நகம் போல் என்றும் சொல்லலாம். முட்களின் நடுவிலும், அணில்கள் ஓடித்திரிந்தன. அருகே தர்மாம்பாள் மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் வேப்பம் பூவை மேய்ந்துவிட்டு, குதித்து சாடி, முள்மர மேனியில் ஓடித்திரிகின்றன.
முள் நிறைந்த அடிமரமும் கிளைகளும், யானை கறுப்பு நிறத்தில் உள்ளன. இதய வடிவில், குறுவால் கட்டிப் பச்சை இலைகள். அரசு இலைகள் போல் உள்ளன. இதழ்களற்ற பூக்கள், அடர் மங்கலான சிவப்பு வண்ணத்தில், சிறிய லிங்கமாய் எழுந்து நிற்கின்றன. பெண் பூக்கள், புல்லிகள் குவிந்து, சிறிய பூசணி போல் உள்ளன.
இதன் தமிழ் பெயர், முள் அரச மரம். ஆங்கிலத்தில், Sandbox tree, Passumwood, Jabillo, Monkey dinner ball, Monkey's pistol, Monkey no climb என, அழைக்கின்றனர். தென் அமெரிக்கா அமேசான் காட்டைத் தாயகமாக கொண்டது. தாவரவியல் பெயர்: Hura Crepitans. மித வெப்ப மண்டல பகுதிகளில், 70 மீட்டர் வரை வளரும். அமேசான் காடுகளில், 100 மீட்டர் வரை வளர்ந்துள்ளதாக, தாவரவியல் அறிஞர் ஹக்ஸ்லே பதிவு செய்துள்ளார்.
மரத்தில் ஊறும் பால் பட்டால், பார்வை இழப்பு ஏற்படும். விஷ முனை கொண்ட அம்பு தயாரிக்கவும், மண்ணில் துளையிடவும் மரத்தையும், பாலையும் பயன்படுத்துகின்றனர்.
 மிகவும் எச்சரிக்கையுடன் அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் வளர்க்க ஆப்ரிக்காவில் தடை உள்ளது.
பழம் புளிப்பு சுவையுள்ளது. உண்டால், வாந்தி, வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
சிதறல் மூலம் விதை பரவுகிறது. உலர்ந்த விதை, வெடிக்கும் போது பயங்கர சத்தம் வரும். மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் விதை சிதறுவதாக, தாவரவியல் அறிஞர்கள் மதிப்பிட்டுள்ளனர். சிதறும் போது, அருகிருந்தால் காயம் பட வாய்ப்பு உண்டு. 100 மீட்டருக்கு அப்பால் கூட, விதைகள் சிதற வாய்ப்பு உண்டு. ஒரு பழத்தில், 16 விதைகள் வரை இருக்கும். விதை, வளரும் ஏழாம் நாள் மதி வடிவில் இருக்கும்.
விதை, மரத்துண்டில் ஆபரணம் உருவாக்கி அணிகின்றனர் லத்தீன் அமெரிக்கர்கள். முறையான வழிகாட்டுதல் இன்றி அணிந்தால், தோல் பாதிப்பு ஏற்படும்.
அணுக சற்று கடினமாக தெரிந்தாலும், மருத்துவ பயன் அதிகம். மனித குலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழுநோய் உட்பட பலவற்றை தீர்க்கும் மருந்து இந்த மரத்தில் உள்ளது. ‘இந்திய மருத்துவ தாவரங்கள்’ என்ற பேரகராதியில், சி.பி.காரே, முள்ளரசன் என்ற தமிழ் பெயரை, பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment