Tuesday 9 April 2019

பாசடி மலர் வண்ண அந்திவானம்

சென்னை, ஒயிட்ஸ் சாலையில் என் பணி அலுவலக பின்புறம் டி.வி.எஸ்., அலுவலக வளாகம் உள்ளது. அங்கு, பல வகை மரங்கள் உள்ளன. அவை, எங்கள் வளாகத்துக்குள்ளும் தலை நீட்டும். சில வான் காட்சி தரும்.  இவற்றில் சில மரங்களைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.
இங்கு, வசந்தத்தை வனப்பாக்கும், பாசடி மரங்கள் இரண்டு உள்ளன.  ஆங்கிலத்தில், African Tulip tree, Fountain tree என்கின்றனர். மலையாளத்தில், ஆப்ரிக்க பூமராம்.
தாவரவியல் பெயர்: Spathodea Campanulata. ஆப்ரிக்காவை தாயகமாக கொண்டது. அங்கோலா, எத்தோப்பியா, கானா, கென்யா  நாடுகளில் அதிகம். வெப்ப மண்டல வறண்ட காடுகளில், 25 மீட்டர் வரை வளரும்.
கொத்து இலை தாவரம். கொத்தில், 15 மற்றும் 17 என, ஒற்றைப்படையில்  இலைகள் இருக்கும். சிவப்பில் சற்று மஞ்சள் துாக்கலான வண்ணத்தில் பூக்கள். அதிகாலை சூரியனை நினைவு படுத்தும்.
மஞ்சளில் சற்று சிவப்பு துாக்கலான வண்ண ரகமும் உண்டு. இது, அந்தி மாலையை நினைவூட்டும் வகையில் வெளிர் மஞ்சளாக பூக்கும். மொட்டுக்கள் கொத்தாக முயங்கும். தனியாக மலர்ந்து கவரும். நுதன வடிவில் சிறிய குப்பி போல், பூ இருக்கும். அழகிய வேல் வடிவத்தில் அதாவது வாழை மொட்டு போல் விதைப்பை இருக்கும்.
ஆப்ரிக்க சிறுவர்களுக்கு, சிறந்த விளயைாட்டு பொருள். அடர்த்தியான நிழல் தரும். மரப் பலகை மிருதுவாக உள்ளதால், பொந்துகள் அதிகம் விழும். பறவைகள் வசிக்க ஏதுவானது.
தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ளன. சென்னையில், உயர் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதிகளில், அதிகம் காணலாம்.  பூங்காக்களிலும் அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது. இப்போது பூத்து குலுங்குகிறது.
உதிர்ந்த மலர் ஒன்று, என் அலுவலக வளாகத்தில் கடந்தவாரம் கிடைத்தது. என், கணினி முன்  வைத்திருக்கிறேன். உலர்ந்த பின்னும் கவர்ச்சியை தருகிறது. மனதுக்கு நெருக்கமாக உள்ளது.
ஆசியா கண்டத்துக்கு வந்த வரலாறு தெரியவில்லை. மரத்தின் பயன்  விவரமும் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment