Friday 12 June 2020

இயற்கை நோக்கிய நகர்தல்


துணி சலைவையில், Bio Enzyme என்ற உயிர் நொதி கரைசலை இன்று பயன்படுத்த துவங்கினோம்.
நந்தவனம் தோட்டம் திருமிகு சரோஜா குமார் அவர்களின் முகநுால் பக்கத்தில் கற்ற தொழில் நுட்பம் இது.
கடந்த, 2018 ஆகஸ்ட் 18ல், ‘பயோ என்சைம்’ கரைசல் பற்றி,  முகநுால் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருந்தார் சரோஜா குமார். அதில், செய்முறை, உபயோகித்த அனுபவம் பற்றி தெளிவாக்கியிருந்தார். அதை, வாசித்து கடந்திருந்தேன்.
இயற்கையை விரும்புவோருக்கு, இது போன்ற அனுபவ பகிர்வுகள், நம்பிக்கை ஊட்டும்.  
செங்கல்பட்டு, தமிழ்நிலம் தமிழ்பண்ணையில், சரோஜா அவர்களை சந்தித்த போது, சொல் போல் செயலிலும் மேன்மையாளராக அறிந்தேன். தமிழகத்தில் மிக அரிதான, எளிமையில் புதுமை,  நவீன சிந்தனை, தெளிந்த லட்சியம் எல்லாம் அவரிடம் கண்டேன்.  
சலவைக்கு அவர்  பயன்படுத்தி வரும், பயோ என்சைம் கரைசல் தொழி்ல் நுட்பத்தை, கடந்த மே 18ம் தேதி கேட்டுப் பெற்றேன். இணையர் வளர்மதி, அதை பயன்படுத்தி, உயிர் நொதி கரைசலை தயாரித்துள்ளார்.
எங்கள் அனுபவத்தில் தயாரிப்பு விபரம்:
தேவையான பொருட்கள்:
நாட்டு சர்க்கரை  – 100 கிராம்
எலுமிச்சை பழம்  – 1
தண்ணீர்  – 500 மில்லி.
ஞெகிழி குப்பி  – 1 லிட்டர் கொள்ளளவு.
செய்முறை:
தண்ணீரில், நாட்டு சர்க்கரை மற்றும் அரைத்த எலுமிச்சையை சேர்த்தோம். நன்கு கரைத்து, நெகிழி குப்பியில் அடைத்து நிழலில் பாதுகாத்தோம். தினமும், ஒருமுறை குப்பி திறந்து, வாயு வெளியேறியதும் மூடினோம். எழு நாட்கள் இது போன்று செய்து வந்தோம்.
எட்டாவது நாள் கரைசல் தயார்.
தொழில் நுட்பத்தை தந்து உதவிய திருமிகு சரோஜா அவர்களுக்கு நன்றி சமர்ப்பிக்கும் விதமாக, நந்தவன கரைசல் என்றே அழைக்கிறோம்.
முதலில், பருத்தியால் ஆன முகக்கவசத்தை, இந்த கரைசலில் அலசி, வெயிலில் உலர்த்தி பயன்படுத்த துவங்கினோம். நறுமணத்துடன் மிளிர்ந்தது. தொடர்ந்து, உள்ளாடைகள் சலவைக்கு பயன்படுத்தினோம். அது விரும்பத்தக்கதாக இருந்தது. மகிழ்ச்சி தந்தது.
இன்று காலை, பொது பயன்பாட்டுக்கு கொண்டுவந்தோம். இயந்திர துவைப்பானில், நீர் நிரம்பி,  அழுக்கு துணிகளுடன், 100 மி.லி., கரைசலை கலந்து, 30 நிமிடங்கள் ஊறிய பின், துவைக்க விட்டோம். வழக்கம் போல் துவைத்தது. அழுக்கை நீக்க, ரசாயனத்துக்கு பதிலான, இயற்கை கரைசல். அவ்வளவு தான் வேறுபாடு.
சலவைக்கு, ஒரே அலசல் போதும் என்று பரிந்துரைந்திருந்தார் சரோஜா. தானியங்கி இயந்திர கட்டளை நிரலை மாற்ற முடியாததால் அதற்கு வழியில்லை. வழக்கம் போல் துவைத்து பிழிந்தது இயந்திரம்.
பிழிந்த துணிகள், நறு மணத்துடன் மிளிர்கின்றன. தொழில் நுட்பத்தை செயலாக்கியதில் இணையருக்கு மிகுந்த மகிழ்ச்சி. எளிய, செலவு குறைந்த, இயற்கைக்கு நெருக்கமாக மற்றொரு நகர்தல்.
      

No comments:

Post a Comment