Wednesday, 23 July 2025

நிவானும் நிவீஷூம் பின்னே நானும்

 அவசர பணியாக டில்லி சென்று, ஜூன் 27, 2025 அன்று முன்னிரவில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தேன்.

விமானத்தில் வழியோர இருக்கை. மூன்று வரிசை இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த இளைஞர், விதம் விதமாக தற்படம் எடுத்து கொண்டிருந்தார். புதிதாக பயணம் செய்பவர் போல் தெரிந்தது. முழங்கையில் கோட்டை சாய்த்திருந்தது பழைய தமிழ் சினிமா கதாநாயகனை நினைவு படுத்தியது.
மைய இருக்கை காலியாக இருந்தது. முன் வரிசையிலும் அதே நிலை...
கடைசி நேரத்தில் இரு சிறுவர்கள் வந்தனர். என் அருகே ஜன்னலோர இளைஞரை தட்டிப்பார்த்தான் இளையவன். எடுபடாததால் நடுவில் அமர்ந்தான். முன் நடு இருக்கையில் அமர்ந்தான் மூத்தவன் நிவான்.
விமானம் புறப்பட்டதும், ‘பாபா...’ என, பின்புறம் தந்தையை தேடி நகர முயன்றான் நிவீஷ். பணிப்பெண்ணின் மென்மையான அதட்டலில் மீண்டும் அமர்ந்தான்.
விமானம் மேலெழுந்து சமநிலையில் பறக்க துவங்கியது. அவ்வப்போது, நீல விளக்கை ஏற்றி பணிப்பெண்களுக்கு வேலை ஏவிக்கொண்டிருந்தனர். தட்டாமல் சேவை கிடைத்தது. அடிக்கடி விமானத்தில் பயணிப்போர் என சிறுவர்களின் நடத்தையால் தெரிந்தது.
தின்பண்ட வண்டியை உருட்டிய பணிப்பெண்களிடம், ‘பசிக்கிறது. நான் ஆர்டர் செய்யலாமா...’ என கேட்டான் நிவீஷ்.
சிரித்தபடி, ‘சற்று பொறு...’ என அமைதியாக்கினர் பெண்.
முறைப்படுத்தாத உலக வரைபடம் ஒன்றை, இருக்கை இடைவெளி வழியாக தம்பியிடம் தந்தான் நிவான்.
கைநழுவி அது என் காலடியில் விழுந்தது. எடுத்து கொடுத்தேன். சற்று ஆழமாக என்னை பார்த்து சிரித்தான்.
எனக்கு உணவு பொதி வந்தது.
‘பகிர்ந்து கொள்கிறாயா...’
இளையவனிடம் கேட்டேன்.
சற்று தயங்கியபின், ‘என்ன இருக்கு...’ என்றான்.
‘பிரித்தால் தானே தெரியும்...’
பொதியை கையில் கொடுத்தேன்.
தாங்கியை விரித்து பொதியை வைத்து பிரித்தான்.
தேவையானதை மட்டும் எடுத்து கொண்டான்.
அண்ணனுக்கும் கொடுத்து சாப்பிட்டான்.
பின், விளையாட்டு துவங்கியது.
முறைப்படுத்தி அலகிடப்படாத உலக வரைபடம் ஒன்றில் இருவரும் மாறி மாறி குறியிட்ட படி இருந்தனர்.
அதில் ஏவுகணைகள் வரைந்து சண்டையை துவங்கினர்.
‘ஸ்பெயினை நான் பிடித்து விட்டேன்...’
‘அதை விட்டு தர மாட்டேன்... வளங்கள் நிறைந்தது...’
‘துருக்கியை வேணா நீ எடுத்துக்கோ...’
இப்படி உலக நாடுகளை பந்தாடிக்கொண்டிருந்தனர் இருவரும்.
சண்டை முற்றியது. உலக வரைபட காகிதம் கிழியும் நிலையை அடைந்தது.
பொது அறிவை வளர்க்க, விளையாட்டு வழியாக சிறுவர்கள் செயல்படுவதாக எண்ணிய எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது.
மென்மையாக, ‘நீங்க... நாடு பிடிக்க விரும்புறீங்களா... அமைதியா வாழப்போறீங்களா...’ என்று கேட்டேன்.
‘நாடுதான் வேணும்...’
நிவீஷ் சொன்னான்.
அந்த எண்ணப்போக்கை மாற்றும் வல்லமை யாரிடம் இருக்கு...
பின், எங்கள் பேச்சின் திசை மாறியது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் பிரபல சட்ட சேவை வழங்கும் நிறுவனம் நடத்தும் குடும்பத்தை சேர்ந்தோர். சென்னை வழியாக திருப்பதி செல்வதை அறிந்து கொண்டேன்.
அடுத்து பள்ளி, படிப்பு பற்றி உரையாடல் நீண்டது.
அகமதாபாத் நகரில் பிரபல பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறான் நிவீஷ். நிவான், 5ம் வகுப்பு.
வகுப்பில் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழி கற்பதாக கூறினர். காகிதத்தில் பெயரை மூன்று மொழிகளிலும் எழுத சொன்னேன். இரண்டு மொழிகளில் எழுதினான் நிவீஷ். தாய்மொழியான குஜராத்தியில் எழுத வரவில்லை.
அண்ணன் வாங்கி அதை எழுதி தாந்தான். உடன் இருவர் பெயரையும் தமிழில் எழுதி தந்தேன்.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது விமானம்.
இறங்க தயாரான போது அருகில் வந்தார் அவர்களின் அம்மா. என்னை அறிமுகப்படுத்தினான் நீவிஷ். மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினார் அந்த வழக்கறிஞர். வன்முறையற்ற அடிச்சுவடு பதிக்கும் இலக்கியம், விளையாட்டு உருவாக்கும் வழிமுறையை யோசித்தபடி நான் நடந்தேன். 

Tuesday, 6 August 2024

உலகின் முதல் விதை

 உலகிலேயே மிகப்பெரிய விதை உடைய தாவரம், கடல் தேங்காய். இது, இரட்டைத்தேங்காய், கடல்பனை, மாலத்தீவுத் தேங்காய் எனவும் அழைக்கப்படுகிறது. 

பெரிய வகை தேங்காய் போல இருக்கும். உட்புறம் பனை விதையில் உள்ளது போல் பிளவுடன் காணப்படும். இந்திய பெருங்கடலில், செஷசல்ஸ் மற்றும் மாலத்தீவுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் கோல்கட்டா தாவரவியல் பூங்காவில் ஒரு மரம் பராமரிக்கப்படுகிறது.

பனைமரம் போல இதில் ஆண், பெண் பாகுபாடு உண்டு. ஆண் மரத்தில், ஆறு அடி நீளத்தில் பூ மலரும். பெண் மரம் முளைத்து, 100 ஆண்டுகளுக்கு பின் பூக்கத் துவங்கும்.

 வாழ்நாளில், 100க்கும் குறைந்த விதைகளையே உற்பத்தி செய்யும். மரத்தில் பூ மலர்ந்து கனிய, 10 ஆண்டுகள் ஆகும். விதையின் வெளிப்புற நார் அடர்த்தியுடன் வலுவாக இருக்கும். கனிப்பகுதி கெட்டியான ஓட்டுக்குள் இருக்கும். முதலில் நுங்கு போல் காணப்படும். முற்றியதும் தேங்காய் போல சுவைக்கும். 

முற்றிய கனி உதிர்ந்த பின், கடல் நீரில் அமிழ்ந்து கிடக்கும். நீண்ட நாட்களுக்கு பின், மிதந்து கரையில் ஒதுங்கும். கடல் நீரோட்டத்தின் வழியாக விதை பரவும். விதை முளைக்கத் துவங்கி முதல் இலை தோன்ற மூன்று ஆண்டுகள் வரை ஆகும். 

இந்த மரம், 35 மீட்டர்  உயரம் வரை வளரும். சுற்றளவு, 12 அடி இருக்கும். இலைகள் விசிறி வடிவில் பனை ஓலை போல் இருக்கும். ஒரு இலை, 10 மீட்டர் உயரமும், 4.5 மீட்டர் அகலமும் இருக்கும். விதை, 1 அடி உயரமும், 3 அடி சுற்றளவும் கொண்டிருக்கும். ஒரு விதையின் எடை, 23 கிலோ வரை இருக்கும்.

எடை அதிகம் என்பதால், நீரினுள் விழுந்தவுடன் மிதப்பதில்லை.  அமிழ்ந்து, கடலின் அடிப்பகுதிக்கு போய் விடும். சில நாட்களுக்கு பின், எடை குறையும் போது, நீர்மட்டத்தில் மிதக்கும். 

இதை முதலில் பார்த்த விஞ்ஞானிகள், நீருக்கடியில் வளரும் தாவரத்தின் விதை என்றே நம்பினர். எனவே, பிரெஞ்சு மொழி சொல்லான, ‘கோகோ டி மீர்’ என்ற பெயரில் அழைத்தனர். அதன் பொருள் கடல் தேங்காய் என்பதாகும். பண்டை காலத்தில் துறவிகள், இந்த விதையை குடைந்து திருவோடு போல் உருவாக்கி, பாத்திரமாக பயன்படுத்தியுள்ளனர். 

மிகை வணக்க சுட்டுப் பெயர்

பள்ளியில் குழந்தையை விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர் இரு பெண்கள். வயது சார்ந்த சுட்டுப் பெயர் அழைப்பு, புண்படுத்தியதை புலம்பிக் கொண்டிருந்தார் ஒருவர். பெரும் வேதனையை வெளிப்படுத்தியது அந்த உரையாடல்.

வயது, மனதை பக்குவப்படுத்துவதற்கு பதிலாக, பாடாய் படுத்துவதை புரிந்து கொள்ள முடிந்தது. அதுவும், 40 வயதைக் கடந்தவர்களுக்கு, வயது சார்ந்த சுட்டு விமர்சனம் பெரும் வலி. உணர்வை சிதைத்து தள்ளாட வைக்கிறது.

இது பற்றி தனிப்புத்தகமே எழுதலாம்.

பெண்களை உறவு முறையில் சுட்ட... அம்மா, பாட்டி, அக்கா, தங்கை, அண்ணி, மதினி, அத்தை, மாமி, சித்தி, பெரியம்மா போன்ற சொற்கள் உண்டு. இவை, வயது சார்ந்தது அல்ல; உறவு சார்ந்தது. சில வயதையும் சுட்டிக் காட்டும். 

ஆண்களை சுட்ட அப்பா, தாத்தா, அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, அத்தான், மாமா போன்ற சுட்டுப் பெயர்கள் உண்டு. பொது உறவை குறிக்கிறது தந்தை, தாய், மகன், மகள், சிறுவன், சிறுமி, முதியவர், மூதாட்டி, நண்பர், தோழர், தோழி, வாலிபர், இளைஞர் போன்ற சொற்கள். 

உறவு, பணி, கல்வி, தொழில், வாணிக அடிப்படையில் ஆசிரியர், பொறியாளர், துப்புரவாளர், கூலியாள், மருத்துவர், வியாபாரி, பக்தர், எழுத்தர், மாணவர், மாணவி போன்ற சொற்கள் உள்ளன. இவற்றுக்கு, வயது சார்ந்த பிரச்னை இல்லை. வயது சார்ந்து பொதுச்சுட்டு, கேட்பவர் உணர்வில், சூடோ, குளிர்ச்சியோ ஏற்படுத்துகிறது; அது, எழுச்சியையோ, தளர்ச்சியையோ, சண்டையையோ, இனிய உறவையோ ஏற்படுத்துவதும் உண்டு. 

தமிழகத்தில், இது சார்ந்த சச்சரவுகள் அதிகம். வார்த்தை தடித்து வழக்குகளாகி, சமூக அமைதியைக் கெடுப்பதும் உண்டு.

30 வயது, தாண்டாத பெண்ணை, அம்மா என்றால் சீற்றம் அடைய நேரிடும். 

‘என்னப் பாத்தா, அம்மா மாதிரியா இருக்கு...’ என்ற தீக்‌குரலை, கேட்க வேண்டிய அபாயம் ஏற்படலாம்.

சமாளிக்க இளமை கலந்த பைந்தமிழ் சொற்களைத் தேட வேண்டியிருக்கும்.

வயதில்... தோற்றத்தில்... முதுமையை விரும்புவோர் இவ்வுலகில் அதிகம் இல்லை.

முதுமையைக் குறிக்கும் சொற்களில் உணர்வு இருக்கிறது; விருப்பு, வெறுப்பும் இருக்கிறது. 

இவற்றை பயன்படுத்துவதில் தந்திரங்களும், உபாயங்களும் உண்டு; ஆதாயமும், இழப்பும் இருக்கும். 

தமிழக அரசியலில், மிகை வணக்க பெயர் சுட்டு சொற்களுக்கு தனித்த முக்கியத்துவம் உண்டு. 

புரட்சித்தலைவர், கலைஞர், புரட்சித்தலைவி, கேப்டன், மருத்துவர் அய்யா, சின்னய்யா, புரட்சிப்புயல், வைகைப்புயல், தன்மான சிங்கம், இதயதெய்வம்... என சொல்லிக் கொண்டே போகலாம். கட்சிக் கூட்டங்களில் தாராளமாக மிகைச் சொல் பரிமாறப்படும். புரட்சிதலைவி, முன்பு, புரட்சிசெல்வியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா உலகில், இது போன்ற சொல் பயன்பாடுகளுக்கு பஞ்சமில்லை. பட்டியலிட்டால் பக்கம் கொள்ளாது.

ரவுகளிடமும் இந்த மிகை வணக்க சுட்டு பெயர்களின் புழக்கம் அதிகம். கொக்கி குமார், பங்க் குமார், காட்டான் சுப்ரமணியன், முட்டை ரவி, மாலைக்கண் செல்வம், பாக்சர் வடிவேலு, கேட் ராஜேந்திரன், வெள்ளை ரவி, மார்க்கெட் சிவா, ஜிம்பாடி கபிலன், பாபா சுரேஷ், சகுனி கார்த்திக்...

பணம் படைத்தவரை, ‘ஐயா’ என்று அழைப்பதில் ஆதாயம் உண்டு. இங்கு, வயது முதன்மை பெறுவதில்லை. மதிப்பீடு முன்னிலை பெறுகிறது. ஆங்கிலத்தில், ‘சார்’ என்ற சொல்லில் வயது மங்கி, ஆதாயமும், மதிப்பும் முன்னிலை பெறுகிறது.

மதிப்புக்குரிய மூத்தவரை, ‘ஐயா’ என்று அழைக்கும் வழக்கம், தமிழக குடும்பங்களில் நிறைந்து இருந்தது. அப்பா என்ற சொல்லுக்கு, பதிலியாக கூட அது பயன்பட்டது. இப்போது, அதில் அரசியல் சாயம் படிந்துவிட்டது.

என் நிறுவனத் தலைவர், ‘௪௦ வயது நிரம்பியவரை, இளைஞர் என்றோ, வாலிபர் என்றோ அழைக்க முடியுமா?’ எனக் கேட்டார். அதற்கு விடையும் விளக்கமும் உண்டு.

இந்திய பிரதமராக இருந்த ராஜீவ், ௪௦ வயதுக்கு மேல் தன்னை, இளைஞர் என்று அழைத்துக் கொண்டது உண்டு; தொண்டர்களை அழைக்க வற்புறுத்தியதும் உண்டு. தமிழக முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின், ௪௦ வயதைக் கடந்த பின்னும், தி.மு.க.,வில் இளைஞர் அணி செயலராக பொறுப்பு வகித்தது உண்டு.

அரசியலில், அதிகார மையங்களில் இது போன்ற சொற்களை பயன்படுத்த விதி விலக்கு உள்ளது; அதிகாரங்களை பயன்படுத்தி அவர்கள் இளைஞராகவே இருப்பர். மிகை வணக்கச் சுட்டுப்பெயர் சொற்களால், முதுமை அவர்களை நெருங்குவதில்லை. தொண்டர்கள், ‘இளமை’ யை தக்க வைக்க கோஷம் பேடுவர். 

ஆனால், ௪௦ வயது நிரம்பிய சாமானியரை, பொது சமூகத்தில், ‘வாலிபனே... இளைஞனே...’ என்று அழைக்க முடியுமா... அது, பொது சமூக உணர்வுக்கு சவால் விட்டது போல் ஆகிவிடாதா... கல்லடியும், சொல்லடியும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

தமிழ் இலக்கண மரபுப்படி பெண்ணுக்கு...

பேதை, பொதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற சுட்டுப் பெயர்கள் உள்ளன. 

இவற்றில், மங்கை மட்டுமே வழக்கத்தில் உள்ளது. மற்றவற்றை உச்சரித்தால், மடமை என பழி வரும்.

ஆணுக்கு...

பாலன், மீளி, மறவோன், திறவோன், விடலை, காளை, முதுமகன் என்ற சொற்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில், பாலன் என்ற ஒரே சொல்தான் இன்று வழக்கத்தில் உள்ளது. காளையும், விடலையும் அரசியல் களத்தில் மிகைச் சுட்டு சொல்லாக பயன்படுகிறது; சில, ஜாதிவட்டாரத்தில் புழங்குகின்றன. இந்த சொற்கள், வயது, தோற்ற அடிப்படையில் பிறந்தவை. வாழ்க்கையின் மதிப்பீடுகள் மாறிவருவதால் வழக்கழிகின்றன.

சிசு, குறுநடை, பள்ளி முன் பருவம், பள்ளி பின் பருவம், குமார பருவம், வளரிளம் பெண், வாலிபன், முதியவன் என்ற வயது சார்ந்த சொற்கள் கல்வித் துறையில் குழுவுக்குறியாக பயன்படுகிறது.  

தற்போது, குழந்தை, சிறுவன், சிறுமி, இளம்பெண், பெண், வாலிபன், இளைஞர், முதியவர், மூதாட்டி, அழகி போன்ற சொற்கள் சமூகத்தில் உலாவுகின்றன. இவற்றை குறிக்கும் வயது கணிப்பில் தெளிவு இல்லை.

இளைஞன், இளம்பெண், ௧௬ வயதில் துவங்குகிறதா? 

அப்படி என்றால், சிறுவன், சிறுமி எந்த வயதில் நிறையும்.

இந்தியாவில், ௧௮ முதல், ௨௧ வயதுக்கு மேற்பட்டவருக்குத்தான், தனித்த சட்ட உரிமை கிடைக்கிறது. வங்கிக் கணக்கை இயக்க,  ஓட்டுனர் உரிமம் பெற, தொழில் துவங்க, அரசு, தனியார் பணியில் சேர, சுயமாக முடிவு எடுக்க என்று அனைத்து நிலையிலும், வயது சார்ந்தே, உரிமை நிலைநாட்டப்படுகிறது. 

இந்த நிலையில், பருவ வயது, எங்கே  துவங்கி முடிகிறது என்ற கேள்வி எழுகிறது.

சட்டத்துக்கு சில தேவையில்லாவிட்டாலும், சமூகத்தில், அது பெரும் வலியாக உள்ளது.

வாலிப பருவம் முடிந்து, நடுத்தர வயது பருவம் எப்போது துவங்குகிறது. அதன் பொதுச் சுட்டுப் பெயர் என்ன... 

நடுத்தரப்பருவம் முடிந்து, முதுமைப்பருவம் எப்போது துவங்குகிறது. இவற்றுக்கு, விடை தேடவேண்டிய கட்டாயம் செய்தி சொல்பவர்களுக்கு உள்ளது.

கிழவர், கிழவி என்ற முதுமை சுட்டு கேலியாக சமூகத்தில் நிறைந்து கிடக்கிறது. 

முதுமையின் முடிவு பற்றிய கவலை தேவையற்றது. 

இனி, பருவக் கணக்குக்கு வருவோம். 

உலக சுகாதார நிறுவன, ௨௦௧௩ம் ஆண்டு ஆய்வு அறிக்கை, இந்தியரின் சராசரி ஆயுள், ௭௦ வயது என்கிறது. இதில் ஆணுக்கு, ௬௭; பெண்ணுக்கு, ௭௩ என, கணித்துள்ளது. இதை பொதுநிலையாக கருதி, வாழ்க்கை பருவத்தை பிரித்து, பொதுவான சுட்டுச் சொற்களை மனித பருவங்களுக்கு பயன்படுத்த முடியுமா என்று சிந்திக்கலாம். அனுபவத்தால் அளந்து பார்க்கலாம்...

* ஐந்து வயது வரை, குழந்தைப் பருவம்

* ஆறு முதல், ௧௭ வரை, சிறுவர், சிறுமி

* ௧௮ முதல், ௩௫ வரை, வாலிபர், இளம் பெண்

* ௩௬ முதல், ௬௦ வரை நடுத்தர வயது. இதற்கு சொல் இல்லை.

* ௬௦க்கு மேல் முதியவர், மூதாட்டி. 

இவை பொருந்தி வருமா?

ஐரோப்பிய நாடு ஒன்றில் வேலை பார்க்கும் பெண் சொன்னது முற்றிலும் வேறுபட்டிருந்தது. அங்கு ௮௦ வயதுள்ள பெண்ணை முதன் முதலில் சந்தித்த அனுபவத்தை கூறினார். ‘ஐரோப்பா சென்றபோது முதலில் திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்டது போல் உணர்ந்தேன். ஒரு பெண்கள் விடுதியில் சேர்ந்தேன். அங்கு, ௮௦ வயதில் இருந்தவரை, ‘ஆன்டி’ என்று அன்புடன் விழித்தேன். கொதித்து எழுந்து சீறியவர், ‘என்னை பார்த்தால் ஆண்டி போல் தெரிகிறதா...’ என துவங்கி, ஆங்கில வசவுகளால் விளாசி விட்டார். மிரண்டு போய் சமாதானப்படுத்த, சொற்களை இரண்டு நாட்களாக தேட வேண்டியதாயிற்று...’ என சிரித்தார்.

மேற்குலக நாடுகளில் வயது சார்ந்த சுட்டு சொற்களையோ மிகைச் சொல் வணக்கங்களையோ, யாரும் பொதுவெளியில் பயன்படுத்துவதில்லை. எல்லாம் பெயர் மயம்தான். வயது சார்ந்த சுட்டுப் பெயரால் ஏற்படும் வலிகளை நீக்க வழிதான் என்ன? 

Thursday, 13 June 2024

வளர்ச்சி தடையை தகர்க்கும் இதழ்கள்

விடுதலைக்கு பின், இந்தியாவில் வளர்ச்சித் திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டாலும், செயல்படுத்துவதில், சமச்சீரான நடைமுறை கடை பிடிக்கப்படவில்லை. விடுதலைப் போராட்டம் முடிந்து, 60 ஆண்டுகளுக்குப் பின்னும், அடிப்படை வளர்ச்சி எட்டிப்பார்க்காத பகுதிகள்  ஏராளம்.  குறிப்பாக, ஆதிவாசிகளின் வசிப்பிடங்கள், விவசாய உற்பத்தியை நம்பிய கிராமங்கள், நகர ஏழைகள் வசிக்கும் குடிசைப்பகுதிகள் என, அடுக்கிக் கெண்டே போகலாம்.

ஐக்கிய நாடுகள் சபை, 2005 ம் ஆண்டு, 177 நாடுகளின் மானுட வளர்ச்சியை, தரவரிசைப் படுத்தி, அறிக்கையாக வெளியிட்டது. அதில், மக்களின் வாழ்க்கைத் தரம், அந்த நாட்டின் சமூக, பொருளாதார பின்னணியில் ஆராய்ந்து பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியலில், இந்தியா, 166 ம் இடத்தில் இருந்தது. தொடர்ந்து, மானுட வளர்ச்சி அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டு வருகிறது. 2018 ம் ஆண்டு  அறிக்கையில், 131 வது இடத்துக்கு இந்தியா நகர்ந்துள்ளது.

 

இந்திய வளர்ச்சிப் பயணம், தொய்வும் தடங்கலும் நிறைந்துள்ளதை இந்த தர வரிசை பட்டியல் நிரூபிக்கிறது. அதிகாரத்தின் உயர்மட்டத்தில் திட்டம் தீட்டி. அறிவி்க்கப்படுகிறது. அது, வட்டார அளவில் முறையாக நிறைவேற வேண்டும்.  

இந்திய விடுதலைப் போரில், பத்திரிகைகளும் ஒருங்கிணைந்து, போராட்டத்தை முன் நகர்த்தின.  போராட்டங்களுக்கு சாதகமாக, மக்கள் கருத்தை உருவாக்கின. இது ஒரு வகையான கண்காணித்து உணர்த்தும் நடவடிக்கை.

 கண்காணிப்பதும், சுட்டிக்காட்டுவதும், தொடர்பியல் நடைமுறையில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஒரு திட்டத்தை  அமலாக்கம் செய்யும் போது, அதன் செயல்பாட்டை கண்காணித்து அதில் உள்ள விலகல் அம்சங்களை சுட்டிக்காட்டும் போது,  அது வளர்ச்சித் தொடர்பியல் என்ற பணியாக மாறும். அதை வளர்ச்சியில் ஒரு பாணியாக மாற்றினால்,  கருத்தியலாக  வளரும்.

 இந்த கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு, செய்தியின் செயல்பாட்டை சமுதாய வளர்ச்சி திட்டங்களுடன் இணைத்து முறைப்படுத்தலாம். அது, இன்றியமையாதததும் முக்கியமான தேவையுமாக மாறும். முறையான, கூர்மையான விமர்சனம், வளர்ச்சியை சரியான இலக்கில் நகர்த்தும்.  புதிய திட்டங்களை உருவாக்க வழிகாட்டியாக அமையும்.

***

வளர்ச்சி திட்டம்

அரசுத் திட்டம் என்பது, மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அல்லது அதற்கான சூழலை உருவாக்குவதற்கான முன் ஏற்பாடு. இந்தியா போன்ற வளரும் மூன்றாம் உலக நாடுகளில், மக்களுக்கு அன்றாட நெருக்கடிகள் அதிகம். 

இந்த நெருக்கடி பற்றி அதிகார மையங்கள் அறிந்து வைத்திருப்பதில்லை. அல்லது அதிகார மையங்களின் சாய்வால், அது முரண் வடிவாக மாற்றப்பட்டிருக்கும். அல்லது கண்டு கொள்ளாமல் விடப்பட்டிருக்கும். திட்டங்களை செயல்படுத்தும் போது, அது, மேலும் முரண்பாடுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். 

திட்டத்தை குறிப்பிட்ட இலக்கில் செயல்பட அனுமதிக்காது. அரசு இயந்திரம் இயல்பாக செயல்படுவதற்கு பதிலாக, முரண் போராட்டத்தில் இயைந்து நிற்கும்.  இறுதியில், முரண் போராட்டம் திட்டத்தின் திசையை மாற்றும். திட்டம் இயல்பிழந்து, முகம் அழிந்து, தொந்தரவாக துறுத்திக் கொண்டிருக்கும். மக்கள் அந்த வேதனையை அனுபவமாக பெற்று, வலியில் முனகுவர். அந்த திட்டத்தை செயல்படுத்தவதற்கான முயற்சியும், உழைப்பும் வீணாகும். வளர்ச்சிக்கு பதிலாக, வீக்கம்தான் மிஞ்சும்.

இது போன்ற நிலையில், வளர்ச்சி தொடர்பான நெருக்கடிகளை, முரண் பேராட்ட முகத்தை வெளிப்படுத்த, எளிய நடைமுறை வேண்டும். இது பற்றி, சமூக ஆர்வலர்களால் பல தளங்களிலும் உரையாடல், விவாதங்கள் நடந்து வருகின்றன.  அந்த உரையாடல், அரசு அமைப்பில் மிகவும் பின்தங்கியே உள்ளது.

 சமுதாய அடிமட்ட யதார்த்த நிலை, அதில் நிலவும் சிக்கல், சிடுக்கு, வம்பு போன்றவை அதிகார மையங்களின் கண்களுக்கு  தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். தெளிவு, மாற்றத்தை பரிசீலிக்கும்,  அதற்கு ஏற்ப திட்ட அமலில் மாற்றங்கள் நடக்கும். 

அந்த மாற்றங்களை உள்வாங்கும், திட்டங்கள் தான், வளர்ச்சியை பூர்த்தி செய்யும். புதிய திட்ட வடிவங்களை முன்னேற்கும். அப்படிப்பட்ட  சூழலில் அரசு அமைப்புகள் இல்லை. அதனால், சுட்டிக்காட்டவும், கண்காணிக்கவம், உணர்த்தவும் அரசுக்கு இணையாக ஒரு அமைப்பு உருவாக வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது.

***

மக்கள் பங்கேற்பு

ஜனநாயக அரசுகளில், மக்கள் பங்கேற்பு என்பது  மையப்படுத்தப்பட்ட கருத்து. ஆனால்,  மக்கள் கருத்தை, பங்கேற்பை ஏற்பதில் மிகவும் பின்தங்கிய நிலையில்தான், அரசு இயந்திரமும், அதற்கு இணையான நீதி பரிபாலன அமைப்பும்  உள்ளது.

 ஜனநாயகத்தை தாங்கும், துாண்களில் ஒன்றாக இதழ்களை மதிப்பிட்டுள்ளனர். சமுதாயத்தில் நிலவும் சிக்கல்களை, விமர்சனத்துடன் வெளிப்படுத்தி விவாதிப்பதால் தான் , இந்த தகுதியை  இதழ்கள் பெறுகின்றன.  

உள்ளூர்  மொழி  இதழ்கள், வட்டார ரீதியாக மக்களுடன் நெருங்கியுள்ளன. இந்த இணைவை முதன்மைப்படுத்தி, மக்கள் பிரச்னைகளை இதழ்கள் அணுகும் விதம் பற்றி, முழுமையான ஆய்வு எதுவும் நடந்ததாக தெரியவில்லை.  அது போன்ற ஆய்வுகளை நடத்தினால் தான், வளர்ச்சித் தொடர்பியல் என்ற, கருத்தாக்கச் சட்டகத்துக்குள், இதழ்களை நிறுத்தி பரிசோதிக்க முடியும். 

வளர்ச்சிக்கும், இதழ்களுக்கும் உள்ள தொடர்பை  தெளிவாக அளந்து அறிய முடியும். அப்படி அளந்தறிவதுதான், வளர்ச்சி தொடர்பியல் கருவியாக, இதழ்கள் பயன்படுமா என்பதை கணிக்க முடியும். அப்படி ஓர் கணிப்பை உருவாக்கும் முயற்சியாகத்தான், இந்த ஆய்வு அறிக்கையை உருவாக்கியுள்ளேன்.

இதில், மக்கள், இதழ்கள், அரசு இயந்திரம் என்பவற்றை முக்கோண சட்டகத்தில் நிறுத்தி பார்கக முயன்றுள்ளேன். பெரும் அடர்த்தியும், வலிமையும் உள்ள மக்கள் சமுதாயம் என்ற புள்ளி, திறட்சி அடையாததால், முக்கோண சட்டகம் சாய்ந்து நொருங்கி விழுவதை காணமுடிகிறது.

***

தொர்பியல் மாற்றம்

இரண்டாம் உலகப்போருக்குப்பின், தகவல் தொடர்பு முறைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தொடர்பியல் நடைமுறை விரிந்து பரந்து விட்டது. அது கட்டுப்படுத்த முடியாதபடி, அசுரத்தனமாக விரிந்து, உண்மையை சுட்டுவதற்கு பதிலாக, குழப்பத்தை உருவாக்கும் நிலையில் உள்ளது. 

இந்தியா போன்ற பல மொழிகள், வட்டார கலாசாரம், பன்முக சமூகங்கள் கொண்ட நாடுகளில், வளர்ச்சி செயல்பாட்டில் தடுமாற்றமும், தடங்கலும் தவிர்க்க முடியாதவை. மொழி நாளிதழ்கள், வட்டாரம் சார்ந்து ஊடாடுபவை.  

வட்டார அளவில், இதழ்கள் வெளியிடும் செய்திகள், அந்தந்த பகுதியில், நம்பகத்தன்மையை உருவாக்குகின்றன. இதன்மூலம் செல்வாக்கு பெறுகின்றன. இந்த பிணைப்பை , வளர்ச்சியில் சுட்டல் உறவாக  இணைக்க முயற்சிக்கலாம். 

தமிழ்நாட்டில், தினமலர், தினத்தந்தி, தினகரன், தினமணி, தி இந்து தமிழ் என, பல நாளிதழ்கள், தமிழ் மொழியில் பல நகரங்களில் அச்சாகின்றன.  ஒவ்வொரு அச்சு மையத்திலும், பல பதிப்புகள் வெளிவருகின்றன. 

வட்டாரம் சார்ந்து பல நுாறு செய்திகள், தினமும் பிரசுரமாகின்றன. இந்த செய்திகளை, குறிப்பிட்ட கால இடைவெளியில்,  ஒருங்கிணைத்து உற்று நோக்கினால், அவற்றின் பொதுப் பண்பை வரையறை செய்யலாம்.

சென்னை நகரத்தில் அச்சாகும், தினமலர் நாளிதழ், காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்துக்கு தனி பதிப்பை வெளியிடுகிறது. இந்த பதிப்பில், 2005 ஜனவரி 1 முதல், டிசம்பர் 31 வரை, பிரசுரமான வட்டார செய்திகளை வகைப்பிரித்து, உள்ளடக்கத்தை அலசியபோது, பல உள் இயக்கங்களையும், முரண்களையும், விமர்சன இயக்கத்தையும் காண முடிந்தது. 

 சமுதாயத்தில் நேர்வினை சார்ந்தோ, முரண்வினை சார்ந்தோ, ஒரு வகை உந்துதலை அந்த செய்திகள் ஏற்படுத்தியிருந்ததை விளங்க முடிந்தது. வளர்ச்சியை ஊக்குவிக்கும் காரணிகள் அவற்றில் இருப்பதை  அறியமுடிந்தது.  

நாளிதழ் செய்திகளில், மக்கள் பிரச்னைகள் கவனம் பெறுவதால் தீர்வுகளுக்கு சாத்தியம்  உண்டு. உள்ளூர் வளர்ச்சியில் துாண்டும் கருவியாக, வட்டார செய்திகளை பயன்படுத்தலாம்.

ஒரு செய்தி உள்ளடக்கத்தில் புலப்படாமல் இயங்கும் பொருள் பற்றிய புரிதலை, ஒழுங்கு படுத்தினால், தகவலின் சாரம், ஒரு சமூகத்தின்  குரலாக வெளிப்படும்.  இது போன்ற செய்திகளின் உள்ளடக்கத்தைக் குறியீடு செய்து வகைப்படுத்தி, மாதிரி அலகுகளை ஒப்பிட்ட ஆய்வாளர் பெர்னார்டு பெரல்சன், ஒருவகை முடிவை அடைந்தார். 

உள்ளடக்கத்தை  பகுப்பாய்வதில்,  இரண்டு வகைமைகள் உள்ளன.  செய்தியின் பருப்பொருள் அளவு மற்றும் எண்ணிக்கையை கணக்கிடுவது, அளவிடும் முறை எனப்படும்.  தமிழகத்தில், புரட்சித்தலைவி, புரட்சித்தலைவர், கலைஞர், தளபதி, உலகநாயகன், சூப்பர் ஸ்டார் போன்ற அடை சொற்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. 

இந்த சொற்கள் நிகழ்த்தும் மாற்றம், பொருள்புலப்பாடு பற்றி கொஞ்சம்  சிந்தித்துப் பார்க்கலாம். ஒன்றை புனிதப்படுத்தவோ, கடவுள் தன்மையாக கட்டமைக்கவோ, இந்த சொற்கள் உதவுகின்றன. வேறு எந்த வகையிலும் இந்த சொற்கள், சமுதாயத்துக்கு பயன்படாது என்பது கண்கூடு. 

இது போன்ற கோஷங்கள் ஒரு தனிமனிதரை உயர்த்திப்பிடித்து, விமர்சன நோக்கை குறைக்கும். முகஸ்துதி பெருகி, பொது கருத்தியல் தளத்தில், விமர்சனம் என்பதை அறமற்ற செயல்பாடாக மாற்றும். இதை, சமுதாய வளர்ச்சியில் மிகப் பெரிய பின்னடைவு தொடர்பியல் என்றுதான் கொள்ள வேண்டும். 

ஒரு செய்தி சொற்றொடர் தொகுப்பு வெளிப்படுத்தும் நேரடி தகவல், மதிப்பீடு, நம்பகத்தன்மை, ஆதாரம் ஆகியவை,  தரனிடும் முறையில்தான் கிடைக்கிறது. ஒரு பொது அறத்தை பேண முனைகிறது.  அந்த அடிப்படையில் தான், செய்தி உள்ளடக்கங்களை  பகுப்பாய்வு செய்துள்ளேன்.

இந்திய விடுதலைப் போரில், ‘வெள்ளையனே வெளியேறு’ என, காந்தி முன்வைத்த கோஷம், நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலையை, எழுச்சியை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. 

அது, சொற்களின் அளவிலானது அல்ல; உள்ளடக்க பொருண்மை தாக்க உணர்வு அடிப்படையிலானது. குறைந்த சொற்களின் தொனி, தொடர்பியல் வெற்றியாக அமைந்தது. கருத்து, கூர்மையாக பாய்ந்து, மையத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முயன்றது. அல்லது நகர்த்தியது.

உண்மை நிகழ்வுக்கும், மக்கள் நம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்த, தொடர்பியல் அறிஞர் வால்டர் லிப்மென், இரண்டுக்கும் இடைவெளி அதிகம் உள்ளதாக கூறியுள்ளார். ‘உண்மையில், என்ன நடக்கிறது என்பதை புரிந்து, மக்கள் செயல்படுவதில்லை; இதழ்கள், கூறுவதை யொட்டித்தான் செயல்பாட்டை முடிவு செய்கின்றனர்’ என்று கண்டறிந்துள்ளார்.

***

அணுகுண்டு தொடர்பியல்

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் மீது, அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அதற்கு, 60 ஆண்டுகளுக்குப்பின், அந்த குண்டு வீச்சு,  அதன் பாதிப்புகள் பற்றி வெளியான செய்திகளை தொகுத்து, ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வாளர்கள் யாஷீசுசிரீயோ, கேரல் ரின்னர்ட் ஆகியோர் நிகழ்த்தினர்.  

உலகில், 12 நாடுகளில் வெளிவரும் பிரபல நாளேடுகள், 2005 ஆகஸ்ட்  8 ம் தேதி முதல், 12 ம் தேதி வரை, அணுகுண்டு வீசிய நினைவு தினத்தை ஒட்டி, வெளியிட்ட செய்திகளை தொகுத்து, தகவலை ஆய்வு செய்தனர்.  முடிவுகள், நான்கு வகையாக  அமைந்திருந்தன.

குண்டு வெடிப்பு...

* போரை நிறுத்த வழி 

* அது கொடூரச் செயல்

* போரை நிறுத்த வழி ஆனாலும், கொடூரம்

* ஜப்பானுக்கு தண்டனை

நாட்டுக்கு நாடு, ஒரே நிகழ்வு குறித்து வெளியான செய்தி உள்ளடக்கங்களில் ஏற்பட்டிருந்த மாறுதலைக் காட்டியது.

 இங்கிலாந்து, ஜெர்மனி, தாய்லாந்து, அரேபியா, பிரான்ஸ் ஆகிய நாட்டு இதழ்களில்  வெளியான, அணுகுண்டு வெடிப்பு பற்றிய, செய்தி உள்ளடக்கங்கள், ‘கொடூரச் செயல்’ என்பதை மையக் கருத்தாக,  தொகுத்திருந்தன. 

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்  நாட்டு இதழ் செய்திகள், ‘போரை நிறுத்த வழி, ஆயினும் கொடூரச் செயல்’ என்று குறிப்பிட்டிருந்தன. 

சீனா, கொரியா நாட்டு இதழ் செய்திகள், ‘ஜப்பானுக்கு கொடுக்க வேண்டிய தண்டனை’ என, சாடியிருந்தன.

ஒரே நிகழ்வை, நாடுகள், வெவ்வேறுவகையாக, அதாவது, நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பொருள் தரும் வகையில், அந்தந்த நாட்டு இதழ்கள் செய்தி  வெளியிட்டிருந்தன. 

நாடுகள், கட்டமைத்துக் கொண்ட அதிகாரப் பண்புக்கு ஏற்ப, அந்தந்த நாட்டு இதழ்கள் செயல்படும் என்பததை, இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

***

வளர்ச்சி தொடர்பு ஆய்வுகள்

இந்தியாவில் வளர்ச்சி தொடர்பு ஆய்வுகள் சுதந்திரத்துக்குப்பின் வேகமெடுத்தன.  அமெரிக்கா தகவல் தொடர்பு வல்லுனர் வில்பர் ஸ்க்ராம் தலைமையிலான குழு, 1964 ல், இந்திய அரசின் தொடர்பு பணிகள் பற்றி ஆய்வு செய்தது. அது, வளர்ச்சித் தொடர்பின் முக்கியத்துவம் பற்றி, அரசுக்கு ஆலோசனை கூறியது. இதையடுத்து, டில்லியில் உயர் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்திய தொலைக்காட்சி கல்வி ஒளிபரப்பு குறித்து, 1975 -76 ம் ஆண்டில், 2,400 கிராமங்களை ஒருங்கிணைத்து,  ஆய்வு நடத்தப்பட்டது. அது, சாதாரண மக்களிடம், தகவல் தொடர்பு ஏற்படுத்தும் தாக்கங்களை, மாற்றங்களை பட்டியலிட்டது.  

அச்சு ஊடகங்கள், தனியார் நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவை, வியாபாரத் தன்மை நிறைந்தவை. அச்சு ஊடகத்தில் வளர்ச்சி செய்திகள் பற்றி ஜே.வி. விளநிலம், 1973 ல் ஓர் ஆய்வு செய்துள்ளார். இந்திய இதழ்களில் வளர்ச்சி செய்திகள் பற்றி, 1986 ல் ஆய்வு செய்த கியூக், ‘குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி செய்திகளை இதழ்கள் வெளியிடவில்லை’ என்று தெரிவித்துள்ளார். 

இதே தலைப்பில், 2000 ல் ஆய்வு மேற்கொண்ட, டி.வி.ஆர்.மூர்த்தி, வளர்ச்சி செய்திகள், மிகக் குறைவாக வெளியாகியுள்ளதாக மதிப்பிட்டுள்ளார். அரசியல் மற்றும் குற்றச் செய்திகளையே இதழ்கள் அதிகம் வெளியிடுவதாக மதிப்பிட்டுள்ளார்.  

‘முரண் சார்ந்து சிக்கல் இயங்குகிறது. இதை அலசும் போது, பிரச்னையின் முகம் வெளிப்பட வாய்ப்பு உண்டு. பிரச்னையில் இருந்து விடுபடுதால் தான், வளர்ச்சி. வளர்ச்சிக்கான பொருள், மாற்றத்துக்குள் மறைந்திருக்கும் உண்மை. வளர்ச்சி என்பது, உடன்பாடு அல்லது எதிர்மறையான தொடர் செயல்பாடுகளைக் கொண்ட மாற்றம்...’ என்றார், அவதார் எஸ் தேசி 

‘ஒரு தேவை நிறைவேறும் போது, மற்றொரு குறைபாடும் வருகிறது. வளர்ச்சி என்ற வரையறையே  பிரச்னைகளில் இருந்து விடுபடுதலின் தொடர்ச்சிதான். ஏற்றத்தாழ்வு என்பது, வளர்ச்சி நடவடிக்கையுடன் இணைந்த தவிர்க்க முடியாத செயல்’ என்று, இந்திய வட்டார வளர்ச்சி பற்றி ஆராய்ந்த, பேராசிரியர் ஷிர்ச்மேன் வரையறுத்துள்ளார். 

***

வளர்ச்சி வேறுபாடு

மக்களை நேரடியாகவோ, மறைமுகமாவோ பாதிப்பவை, மக்கள் பிரச்னையாகிறது. இது, வட்டார அளவில் வேறுபடலாம். இசைந்தும் இருக்கலாம்.  வட்டார தன்மையில் வேறுபட்டாலும், சர்வதேச வளர்ச்சி அளவுகோல் படி,  நேரடி தன்மையில் தான் நிலை கொள்ளும்.

 ஐக்கிய நாடுகள் சபை, உறுப்பு நாடுகள் வளர்ச்சியை செயல்படுத்த, எட்டு விதிகளை உருவாக்கியது. அதை, மில்லினியம் வளர்ச்சி பிரகடனம் –2000 என்று அறிவித்தது. 

இந்த விதிகள் அடிப்படையில், வளரும் நாடுகள், திட்டங்களை வகுத்து, முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான், ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கம். இப்போது, 17 விதிகளாக  பிரித்து, செயல்படுத்த பரிந்துரைத்துள்ளது. இதை, நிலைத்த நீடித்த வளர்ச்சி விதிகள் என உலக அளவில் வரையறை செய்துள்ளது. வளரும் நாடுகள் இந்த விதிகளை கடை பிடிக்க, ஒப்பந்தமும் செய்துள்ளது.

ஐ.நா., வளர்ச்சி விதி சுருக்கம்:

* பசி, வறுமையை ஒழித்தல்

* தரமிக்க கல்வியை உறுதி செய்தல்

* பாலின சமத்துவம், பெண்களை திறன் படுத்துதல்

* குழந்தை இறப்பு விகிதம் குறைத்தல்

* மன நலம் காத்தல்

* கொடூர நோய்கள் ஒழித்தல்

* மாசற்ற சூழல் உருவாக்குதல்

* சுகாதாரம் உறுதி செய்தல்

இந்த விதிகள், வட்டாரத் தன்மையுடன் இயங்கும் போது, பல முகங்களை காட்டும். இந்த விதிகளை மையப்படுத்தி, திட்டங்களை செயல்படுத்தும் போது ஏற்படும் தடங்கல்களை, மக்கள் பிரச்னையாக வரையறுக்கலாம்.

இந்தியா போன்ற வட்டாரத்தன்மை நிறைந்த நாடுகளில் சமுதாய சிக்கல்கள், வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற தடையாக உள்ளன. இந்த தடைகளை வெளிப்படுத்தி அலசினால்தான், சிக்கலை தீர்க்க முடியும்.  

முன்நிபந்தனை இன்றி, பிரச்னையின் தன்மையை, அதன் வேரைக் கண்டுபிடித்து விமர்சிப்பதன் மூலம், ஒரு செய்தி, வளர்ச்சியில் நேரடியாக பங்கேற்கும். இதழ்கள், வளர்ச்சிக்காக செயல்படுவதை, இதன் மூலம், உறுதி செய்யலாம். 

Saturday, 12 December 2020

மானுடத்தில் புதுமை கண்ட திரைக்கலைஞன்

 மானுடத்தில் புதுமை கண்ட திரைக்கலைஞன் 

‘என் கதைகள், உலகம் முழுவதும் வாழும் மனிதர்களின் பொதுமைப் பண்மை அடிப்படையாகக் கொண்டவை. பொருளற்ற சுயகர்வம் பிடித்த கொரியர்களுக்கு இது புரியாது. அவர்கள் உலகம் முழுதும் பயணம் செய்தால் மட்டுமே இதை புரிவர். மனிதர்களின் தனித்தன்மையை என் படத்திற்குள் கொண்டு வருகிறேன்...’ 

ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார் திரைப்பட இயக்குனர் கிம் கி டக். 

கிழக்காசிய நாடான கொரியாவை சேர்ந்தவர். உலக சினிமா ரசிகர்களை ஈர்த்தவர். இவரது, ‘ஸ்டாப்’ என்ற படம், கிழக்காசிய நாடான ஜப்பான் புகுஷிமா அணுமின் உலை விபத்து பயங்கரத்தை மையமாகக் கொண்டது. இந்தப் படத்தை, 241 பேர் மட்டுமே பார்த்தாக, கொரிய திரைப்படக் கமிஷன் தெரிவித்துள்ளது. இந்த படம், 8541 டாலர் செலவில் தயாரானது.

கொரியாவில் அணு உலை வெடிப்பு என்ற கற்பனையை அடிப்படையாகக் கொண்டு, மற்றொருவரால் எடுக்கப்பட்ட, ‘பண்டோரா’ என்ற படத்தை, 1.78 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இது, 8.5 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டது. 

கிம் கி டக் பதிவு செய்த காட்சிகள் தயக்கமற்றவை. யதார்த்தத்துக்கு நெருக்கமானவை.

கடந்த, 20 ஆண்டுகளில், 23 படங்களை இயக்கியுள்ளார். இவற்றில், ‘பியடா’ என்ற படம், வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா – 69ல், ‘தங்க சிங்கம்’ விருது வென்றது. மற்றொரு படம், ‘3- அயர்ன்’ வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா – 61ல் சிறந்த இயக்குனருக்கான, ‘வெள்ளி சிங்கம்’ விருது பெற்றது. 

கொரியா டைம்ஸ் இதழுக்கு, டிசம்பர் 14, 2016ல் கிம் கி டக் அளித்த பேட்டியிலிருந்து... 

கேள்வி: ஜப்பான் புகுஷிமா அணுஉலை விபத்து பற்றி படம் எடுக்க காரணம் என்ன?

கிம்: பூமியை பல இயற்கை பேரழிவுகள் அச்சுறுத்தி வருகின்றன. ஆனால், அணுஉலை வெடிப்பு பாதிப்பு முற்றிலும் வித்தியாசமானது. கதிர்வீச்சு கசிவு, அதன் பக்கவிளைவுகளை நேரடியாகவேப் பார்க்கிறோம். நாட்கள் செல்லச் செல்ல அதன் கோரம் அதிகமாகிறது. கொரியா, சீனா போன்ற நாடுகள் அணு மின் நிலைய எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. அமெரிக்கா போன்ற நாடுகள் அணு சக்தியைச் சார்ந்தே இயங்குகின்றன. இந்த செயலை நிறுத்த விரும்பினேன். அதன் அடிப்படையில் இந்த படத்தை எடுத்தேன். 

என் படம் உலகப் பார்வையாளர்களுக்கானது. எனவே கதை ஜப்பானில் நடைபெறுவது போல் எடுத்தேன். ஜப்பானியர்களையே பயன்படுத்தியுள்ளேன். 

கேள்வி: பேரழிவுகளை தனியாக படமாக்கும் போது கிடைக்கும் அனுபவம் என்ன?

கிம்: இதை பேரழிவுத் திரைப்படம் என்றால் சங்கடமாக உணர்கிறேன். முதலில் கணினியில் கிராபிக்ஸ் முறையில் சில காட்சிகளை உருவாக்கத் திட்டமிட்டேன். ஆனால், நான் நினைத்தபடி அது இல்லை. எனவே, ‘டிராமா’ அடிப்படையில் முடிவு செய்தேன். 

அணு உலை வெடிப்பு, கதிர்வீச்சு கசிவுகளால் பக்க விளைவு, தனிப்பட்ட இழப்பு, பொருளாதார இழப்பு மற்றும் தேசிய அளவிலான பாதிப்புகளைக் காட்டாமல், மனித மனங்களில் ஏற்படும் தடுமாற்றத்தை திரையில் காட்டவேண்டியிருந்தது. ஒருவேளை, கதையை இன்னும் ஆழமாக அணுகியிருக்க வேண்டும். இந்த அனுபவம் சற்று கடினமானது. 

கேள்வி: பார்வையாளர்கள் தந்த பின்னூட்டம் என்ன?

கிம்: ஜப்பானிய திரைப்பட விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அங்கே, ’ஸ்டாப்’ திரையிடப்பட்டது. உள்ளூர் ரசிகர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது. குறைந்த பட்ஜெட் திரைப்படம் என்பதை புரிந்திருந்தனர். வடிவத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றனர். 

கேள்வி: உங்கள் கதாபாத்திரங்கள் உளவியல் மீது கவனம் செலுத்த என்ன காரணம்?

கிம்: இருபது ஆண்டுகளுக்கும் மேலாக படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். அவற்றை திரும்பிப் பார்த்தால் எல்லாமே மனிதர்களின் கதைகள் என புரியும். அனைத்தும் செலவில்லாதவை. ஸ்பெஷல் எபெக்ட்ஸ் போன்ற தொழில் நுட்பங்களுக்கு பணம் செலவு செய்வதில்லை. இதனால், கதாபாத்திர செயல்பாட்டில் அதிகக் கவனம் செலுத்துகிறேன். என் படத்தைப் பார்த்தால், சொல்லவரும் செய்தியை உணர்வீர்கள். 

கேள்வி: உங்கள் படங்கள், உடலுறவு மற்றும் சங்கடம் தரும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து அவற்றைக் காட்சிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

கிம்: என் படங்களில் பொய் சொல்ல விரும்பவில்லை. மேம்படுத்திய எண்ணத்துடன் தான் புதிய படத்தை எடுக்கிறேன். ஒவ்வொரு முறையுமே, இது போன்ற காட்சிகளை சுதந்திரமாக வெளிப்படுத்த உரிமை இருப்பதாகவே நினைக்கிறேன். 

எந்த சிந்தனையுமே தராத பல திரைப்படங்கள் உள்ளன. என் படங்கள் அது போலானவை அல்ல. கதைக்குள், மக்கள் பொருந்திப் போவது அல்லது, பொருந்தி போக வைப்பது போன்ற திரைப்படத்தை என்னால் உருவாக்க முடியாது. என் சொந்த உலகம் தான் கதை மையமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் என் படத்திற்குள் வரும் ரசிகர், அதே கதையை வேறுவிதமாக உணர முடியும். 

கேள்வி:  திரைப்படம் உருவாக்கும் போது, எதை முக்கிய அம்சமாக உணர்கிறீர்கள்?

கிம்: நான், நானாக இருக்க வேண்டும். நேர்மையான திரைப்படத்தை உருவாக்க இது மிகவும் அவசியம். பார்வையாளரின் ரசனையை மனதில் வைத்தோ, உலக சினிமா சந்தையை மனதில் கொண்டோ, பிரபல நடிகர்களை எண்ணியோ செயல்பட்டால், உண்மையும், நேர்மையும் காணாமல் போய்விடும். நான் எடுக்கும் திரைப்படங்களில் என் இதயத்துடிப்பை மட்டுமே கேட்க விரும்புகிறேன். 

கடந்த, டிசம்பர் 11, 2020 ரஷ்யாவில் மறைந்தார் கிம். அவருக்கு புகழஞ்சலி.

நன்றி: Koriya times Issue dated December 14, 2016.

#kimkiduk

Monday, 27 July 2020

இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனை

ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், பக்கிங்ஹாம் அரண்மனை மிகவும் புகழ்பெற்றது. இங்கு, பிரிட்டிஷ் அரச குடும்பம் வசித்து வருகிறது.  தற்போது, ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சியாளராக உள்ளார். 
 இங்கிலாந்து மகாராணியாக விக்டோரியா, 1837ல் அரியணை ஏறியதும் இந்த அரண்மனை, மன்னர் குடும்ப வசிப்பிடமாக மாற்றப்பட்டது. இவர், 63 ஆண்டுகள் ஆட்சி செய்தார்; இரவது சிலை, அரண்மனை முதன்மை வாயில் அருகே நிறுவப்பட்டுள்ளது. 
பக்கிங்ஹாம் அரண்மனை, 39 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. 77ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் கட்டடங்கள் உள்ளன. கட்டடங்களில், 7468 வாசல் கதவுகளும், 760 ஜன்னல்களும் உள்ளன. ராயல் கலெக்ஷன் டிரஸ்ட் வளாகத்தை நிர்வகிக்கிறது.
அரண்மனையில்...
விசாலமான, 19 விருந்து கூடங்கள்
படுக்கை வசதியுடன் கூடிய, 52 அறைகள்
பணியாளர்களுக்கு, 188 அறைகள்
அலுவலக பணிக்காக, 92 கூடங்கள் உள்ளன.  
இவற்றில், ஆறு கூடங்களை மட்டும் பயன்படுத்துகிறார் ராணி எலிசபெத். அவற்றில், ‘எம்பையர் கூடம்’ என்பதும் ஒன்று. இது, முக்கிய விருந்தினர்களை சந்திக்கும் இடம். இங்கு, இங்கிலாந்து பிரதமர், அரசு அதிகாரிகள் மற்றும் உலகத் தலைவர்களை சந்தித்து பேசுவார். ராணியின் பிரத்யேக வளாக பகுதியில் நுழைய சிலருக்கு மட்டுமே அனுமதி உண்டு.
ஆண்டுதோறும், ஜூலை மாத இறுதியில், ஸ்காட்லாந்தில் உள்ள, பால்மோரால் அரண்மனைக்கு, ஒய்வெடுக்க செல்வார் ராணி. செப்டம்பர் வரை அங்கு தங்கியிருப்பார். இந்த கால கட்டத்தில், பக்கிங்ஹாம் அரண்மனையில், 19 கூடங்கள், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும்.
அரண்மனை முன், ‘தி சேஞ்ஜிங் ஆப் கார்ட்ஸ்’ என்ற நிகழ்ச்சி நடக்கும். இது, பாதுகாவலர்கள், பணி மாறும் வண்ணமயமான நிகழ்ச்சி. இசையுடன், காவலர் அணிவகுப்பு பிரமாண்டமாக நடக்கும். சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் நிகழ்வு இது.
அரண்மனை முற்றத்துக்கு அடியில், டைபர்ன் என்ற ஆறு பாய்கிறது. பின்புறம், மிகப்பெரிய தோட்டமும், குதிரைகள் பராமரிக்கும் லாயமும் அமைந்துள்ளன. 
தோட்டத்தில், ‘கார்டன் பார்ட்டி’ என்ற முக்கிய விருந்து, ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும். இதில், 8000 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வர். பங்கேற்போருக்கு, ராணி மற்றும் அரச குடும்பத்துடன் பேச வாய்ப்பு கிடைக்கும். உயர்தரமான ராயல் விருந்தும் அளிக்கப்படும்.
இரண்டாம் உலகப்போரின் போது, ஐரோப்பிய நாடான ஜெர்மனி, ஒன்பது முறை, இந்த அரண்மனை மீது குண்டு வீசியது. இதில், அரச குடும்ப வழிபாட்டுக்காக அமைக்கப்பட்ட தேவாலயம் சேதம் அடைந்தது. 
பக்கிங்ஹாம் அரண்மனையின் மதிப்பு, 5 பில்லியன் டாலர். 1 பில்லியன் என்பது, 7468 ஆயிரம் கோடி ரூபாய். கூட்டி, பெருக்கி, இந்த சொத்தின் இந்திய பண மதிப்பை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 
கொரோனா தொற்று காரணமாக, அரண்மனையில், தற்போது விருந்து உட்பட முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர் அனுமதியும், ஆண்டு இறுதிவரை இல்லை.
வரலாறும் வாழ்வும்!
பக்கிங்ஹாம் அரண்மனை அமைந்துள்ள இடம் முற்காலத்தில், ‘மேனர் ஆப் எபரி’ என்ற விவசாயப் பண்ணையாக இருந்தது. டைபர்ன் நதியால் வளம் பெற்றது. இப்போதும், அரண்மனை முற்றத்தின் அடியில் பாய்ந்து ஓடுகிறது நதி
இங்கிலாந்து பணக்காரரான பிரபு ஒருவர், 1703ல் ஒரு இல்லத்தை இங்கு கட்டினார். கட்டடக்கலை நிபுணர் வில்லியம் வின்டே அதை வடிவமைத்திருந்தார் 
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜ், இதை, 1761ல் வாங்கினார். ராணி சார்லோட் வசிக்க, தனிப்பட்ட மாளிகையாக பரிசளித்தார்
கட்டடம், 1762ல் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது 
மன்னர் நான்காம் ஜார்ஜ், 1820ல் அரியணை ஏறியவுடன், இதை, அரண்மனையாக மாற்ற எண்ணி, கட்டடக்கலை நிபுணர் ஜான் நாஷினை நியமித்தார். அவர் ஆலோசனைப்படி சில மாற்றங்கள் செய்யப்பட்டன. முகப்பு தோற்றம், பிரெஞ்சு கட்டடக்கலை மரபு சார்ந்து அமைக்கப்பட்டது. சீரமைப்பு செலவு அதிகமானதால் கோபம் கொண்டார் மன்னர். ஊதாரித்தனம் செய்வதாக, 1829ல் ஜான் நாஷின் பணி பறிக்கப்பட்டது
நான்காம் ஜார்ஜ் மறைவுக்கு பின், கட்டடக்கலை நிபுணர் எட்வர்ட் பிலோர் ஆலோசனைப்படி, அரண்மனைக் கட்டி முடிக்கப்பட்டது. இதை, இங்கிலாந்து பார்லிமெண்ட் விடுதியாக மாற்றவும், மன்னர் குடும்பம் விரும்பியது
அரண்மனையில் மின்சார வசதி, 1883ல் ஏற்படுத்தப்பட்டது. தற்போது, 40 ஆயிரம் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.
ராணி எலிசபெத்!
பங்கிங்ஹாம் அரண்மனையில் அதிக காலம் கோலோச்சுபவர் என்ற புகழை, தற்போதைய ராணி இரண்டாம் எலிசபெத் பெற்றுள்ளார்.
இவர், ஏப்.,21, 1926ல் பிறந்தார். அன்று வழக்கப்படியும், ஜூன் இரண்டாவது சனிக்கிழமை, அதிகாரப் பூர்வமாகவும் இவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. 
பத்து வயதில் குதிரை ஏற்றம் கற்றார். இந்த கலையில் தீவிர ஈடுபாடு கொண்டு, இங்கிலாந்து குதிரைப்படையில் பணியாற்றினார். பந்தயங்களிலும் ஆர்வம் காட்டுவார். இப்போது அவரது வயது, 94. இந்த வயதிலும், அரண்மனை வளாகத்தில் குதிரை சவாரி செய்வதாக புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
இவர், 1952ல் அரியணை ஏறியதிலிருந்து, இங்கிலாந்தில், 15க்கும் மேற்பட்ட பிரதமர்களுடன் பணியாற்றியுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் நீண்ட காலம் ஆட்சி புரிபவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 
வட அமெரிக்க நாடான கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் நிரந்தர அதிபராகவும் பொறுப்பு வகிக்கிறார். இந்தியா உட்பட, 54 நாடுகளை உள்ளடக்கிய காமென்வெல்த் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார். கடந்த, 1961, 1984, 1997ம் ஆண்டுகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம், இங்கிலாந்து மக்கள் வரிப்பணித்தில் தான், நடந்து வந்தது. இந்த நடைமுறையை, 2012ல் தடைசெய்தார். இந்த உத்தரவு வரலாற்றில் எலிசபெத்தை முக்கியத்துவம் பெற வைத்துள்ளது.
 இவருக்கு, 88 பில்லியன் டாலர் சொத்து உள்ளதாக, போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டுள்ளது.

உடல் கூறியல் வல்லுனர்

மனித உடற்கூறு பற்றி, மிகச் சரியாக ஆராய்ந்து எழுதிய மருத்துவ நிபுணர் ஆண்ட்ரூஸ் வெசாலியஸ். இவரது நினைவு சின்னம், ஐரோப்பிய நாடான இத்தாலி அருகே, அயோனியன் கடல் தீவு ஒன்றில் உள்ளது. 
கிரேக்க மருத்துவர் காலென் எழுதிய நுால் தான், உலகின் முதல் உடற்கூறு புத்தகமாக, 1,300 ஆண்டுகளாக போற்றப்பட்டது. அதில் கூறியிருந்த கருத்துக்களை பின்பற்றியே மருத்துவ ஆராய்ச்சிகள் நடந்தன. அதை தாண்டி, அந்த துறை வளரவில்லை.
இந்த சூழலில், உடற்கூறியல் பற்றிய ஆய்வில் புதிய தடம் பதித்தார் ஆண்ட்ரூஸ் வெசாலியஸ். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் வாழ்ந்த மருத்துவக் குடும்பத்தில், கி.பி., 1514ல் பிறந்தார். லத்தீன், கிரேக்க மொழிகளில் புலமைப் பெற்றார். மனித உடற்கூறு பற்றி ஆராய்வதில் நாட்டம் கொண்டார். ஆரம்பத்தில், சிறு உயிரினங்களின் உடல்களை ஆராய்வதில் ஆர்வம் காட்டி வந்தார்.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரிஸ் நகர மருத்துவக்கல்லுாரியில், 19ம் வயதில் சேர்ந்தார். நாய், பன்றி போன்றவற்றின் உடல்களை ஆராய்ந்தார். அவற்றின் உடற்கூறு, அறிஞர் காலெனின் கருத்துப்படி இல்லை. இதை எடுத்துக் கூறி விவாதித்தார்.
பன்றி, நாய் போன்றவற்றுக்கும், மனித உடலமைப்பிற்கும் வேறுபாடு உண்டு என, மறுத்தார் அவருக்கு உடற்கூறியல் கற்பித்த பேராசிரியர். இந்நிலையில், புதிதாக கற்க வாய்ப்பு ஏதும் இல்லை என, மனம் நொந்து சொந்த ஊருக்கு திரும்பினார் ஆண்ட்ரூஸ்.
ஒரு நாள் –
 நண்பருடன் உலாவச் சென்றார். வழியில், பயங்கரக் குற்றவாளி ஒருவனை, அந்த நாட்டு அரசர் உத்தரவுப்படி, மரத்தில் கட்டி தொங்க விட்டிருந்தனர். உயிர் பிரிந்து, எலும்புக்கூடு மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வந்து, உடற்கூறு பற்றி ஆராய துவங்கினார் ஆண்ட்ரூஸ். உண்மையில், காலென் கூறியபடி அது இல்லை என தெளிவு பெற்றார். 
ஆய்வில் கண்டறிந்த உண்மைகளை, புத்தகமாக எழுதினார்; அதுபற்றி மருத்துவ நிபுணர்களுடன் விவாதித்தார். யாரும், அவரது கருத்துக்களை ஏற்க முன்வரவில்லை. இந்தநிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில், 1543ல் மனித உடற்கூறு பற்றிய நுாலை வெளியிட்டார். அது, 700 பக்கங்களில், விளக்கப்படங்களுடன் அமைந்திருந்தது.
அந்த நுாலுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. அவரது மருத்துவ நண்பர்களே எதிரிகளாயினர். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆண்ட்ரூஸ், மனம் நொந்தார்; கண்டுபிடிப்புகளை தீயிட்டு கொளுத்தினர். இனி, ஆராய்ச்சியே வேண்டாம் என முழுக்கு போட்டார். ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு திரும்பி, மன்னரின் அரண்மனை மருத்துவராக பணியில் சேர்ந்தார். 
அப்போது, இத்தாலி, பாதுவா பல்கலைக் கழக பேராசிரியர் கேப்ரியஸ் பாலோபியஸ், ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். 
அதில், ஆண்ட்ரூஸ் கண்டுபிடித்த உடற்கூறு கொள்கை தான், துல்லியமானது என, பாராட்டி எழுதியிருந்தார். அவற்றில் சில கருத்துக்கள் மீது விளக்கம் கேட்டிருந்தார். 
எதிர்ப்பு குரல்களையே கேட்டு பழகிய ஆண்ட்ரூசிற்கு இது உற்சாகம் தந்தது. கேட்டிருந்த சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்க, இத்தாலி புறப்பட்டார். ஆனால், கேப்ரியல் திடீர் மரணம் அடைந்ததால் ஏமாற்றமடைந்தார்.
பல்கலையில், கேப்ரியல் பணி புரிந்த இடம் காலியாக இருந்தது. அந்தப் பதவியை ஏற்ற ஆண்ட்ரூஸ், மூன்றாண்டுகள் பணியாற்றினார். 
பின், மத்திய கிழக்கு பகுதியில் ஜெருசலம் நகருக்கு புனித யாத்திரையாக சென்றார். அந்த யாத்திரையை முடித்து திரும்பிய போது, அவர் பயணம் செய்த கப்பல், புயலில் சிக்கி கவிழ்ந்தது. இத்தாலி அருகே அயொனியன் கடல் அருகே ஒரு தீவு பகுதியில், பயணியர் உடல்கள் ஒதுங்கின. அந்த வழியாக சென்ற மற்றொரு கப்பல் இதை கண்டது.
ஒதுங்கிக் கிடந்த உடல்களை அங்கேயே அடக்கம் செய்தனர் கப்பால் மாலுமிகள். ஒரு உடலில் இருந்த சட்டைப் பையில், சில புத்தகங்கள் இருந்தன. அவற்றை ஆய்வு செய்தார் கப்பல் தலைவர். ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தில், ‘ஆண்ட்ரூஸ் வெசாலியஸ் அவர்களுக்கு, அன்புடன் கேப்ரியல் பாலோபியஸ்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
இதன் மூலம், அது, ஆண்ட்ரூஸ் வெசாலியஸ் உடல் என, அடையாளம் கணப்பட்டது.  உடலை அங்கேயே அடக்கம் செய்து, ‘ஆண்ட்ரூஸ் வெசாலியஸ் நினைவிடம்’ என, ஒரு கல்லில் பொறித்தனர். அவர் நினைவாக இன்றும் அந்த கல் அங்கு உள்ளது.
மனித உடற்கூறு பற்றி முறையான கண்டுபிடிப்பு நிகழ்த்தியவர் வெசாலியஸ். அவர், 53 ஆண்டுகள் தான் வாழ்ந்தார். அற்புத கண்டுபிடிப்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மருத்துவ உலகின் வளர்ச்சிக்கு வழிகாட்டியவரின் புகழ் என்றும் நிலைக்கும்!