Wednesday 6 June 2018

பல எலிகளும் சில விவசாயிகளும்

சந்திக்க வருபவர்களுடன், மனமாச்சரியம் இன்றி நேரடியாக, எளிமையாக பேசும் பண்பை கடைப்பிடிப்பவர்களை தமிழகத்தில் காண்பதரிது. தமிழ் படைப்புலகத்தில் இத்தகைய பண்பு உள்ளவர்களை பார்க்கவே முடியாது. ராஜவல்லிபுரம் வல்லிக்கண்ணன், இதில் மாறுபட்டவர்.
நாகர்கோவிலில் வெளியான குடிசை மாத இதழில், தமிழ் – தமிழ்நாடு – தமிழர்கள் என்ற தலைப்பில் வல்லிக்கண்ணன், 80களில்  தொடர் கட்டுரை எழுதிவந்தார். நகர எல்லையை மிதித்த காலத்தில் படித்த தொடர் கட்டுரைகளில் இதுவும் ஒன்று. அந்த கட்டுரை பற்றி, ஒரு கடிதம் எழுதிப்போட்டேன்.  உடனே, பதில் எழுதியிருந்தார். அந்த பதிலை படித்தது அறபுதமான கணம். அதை சொற்களில் விவரிக்க முடியாது.
இலக்கியம், சமூகம் என்று பல தளங்களில் வெளிவந்த புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த நாட்கள் அவை. எழுத்துபவர்களை சந்திப்பது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. தொடர்ந்து, அவருடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தேன். படிப்பதற்கு பல புத்தகங்களை பரிந்துரைத்தார்.
இப்போது உள்ள இலக்கிய அரசியல் அவரிடம் இல்லை. எந்த குழுவையும் துக்கிப்பிடிக்கவில்லை. இப்படிப்பட்டவர்களை அபூர்வமாகத்தான் பார்க்கமுடிகிறது.
படைப்பாளர் பட்டறை ஒன்றை, சோலை இயக்கம், 1986 ல், திருச்சியில் நடத்தியது. அங்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அவர்களுடன்  இருந்ததார். மூன்று நாட்கள், நேரடியாக பழகும் வாய்ப்பு கிடைத்தது.
பட்டறை நிகழ்வு நேரம் தவிர, யாராவது ஒரு எழுத்தாளருடன் பேசிக்கொண்டிருந்தேன். அதிகமும் செலவிட்டது வல்லிக்கண்ணனுடன்தான். பின்னர்,  சென்னை ராயப்பேட்டையில் தங்கியிருந்த அவரை, குடிசை ஆசிரியர் இரத்தினசுவாமி அவர்களுடன், சென்று ஒருமுறை பார்த்தேன். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். முதிர்ந்த நிலையில் உடல் தளர்வுடன் காணப்பட்டார்.
உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். முதுமையில் தனிமையின் வாட்டம் பேச்சின் ஊடே வெளிப்பட்டது. நீண்ட அனுபவமும், அதை முறைப்படுத்தி நினைவில் வைத்திருந்த திறனும் மிகவும் ஆச்சரியப்டுத்தியது. எளிமையாக வாழ்வது பற்றி அவரிடம் கற்றேன்.
அபூர்வ மனிதர். வாசிப்பு மற்றும் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்திய விதம் விரும்பத்தக்கது.  எழுத்துக்காக, வாழ்க்கையை அர்ப்பணி்ததவர். தமிழக அரசியல் வாதிகளை எலிகளாக உருவகப்படுத்தி நையாண்டியுடன் அவரது  இளமை நாட்களில் எழுதிய கட்டுரை தொகுதி, ஒன்றை வாசித்தேன். எழுத்தின் பல இடங்கள், பிரபல ருஷ்ய எழுத்தாளர் அந்தோன் செக்கவ் பாணியை நினைவு படுத்தியது. விவசாயிகளைப் பற்றி பேசும் போது, எலிகளைப் பற்றியும் கண்டிப்பாக பேச வேண்டிய அவசியம் இருப்பதை புரிந்து கொண்டேன்.

No comments:

Post a Comment