Tuesday 5 June 2018

எதை சாப்பிடுகிறேம் நாம்?

இயற்கை முறையில் சாகுபடி உலகளவில், 30 மில்லியன் எக்டேரில் நடக்கிறது. விஷமற்ற உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதில் உலக அளவில் இந்தியாவுக்கு, 117 வது இடம். உலக அளவில், அதிக வேளாண் பரப்பைக் கொண்ட நாடுகள் இந்தியாவும், சீனாவும் தான்.
இந்தியா அளவில், தமிழகத்தின் இயற்கை வழி வேளாண்மை, ஐந்து சதவீதம் நிலத்தில் மட்டுமே நடக்கிறது. பளபளப்பை ரசிப்பதிலும் புசிப்பதிலும் தமிழர்களக்கு ஆர்வம் அதிகம்.
கத்தரிக்காயும், தக்காளியும் குண்டு குண்டாக இருந்தால், துாக்கி வைத்து மகிழ்ந்து கொண்டாடுவோம். உடல்நலம் பற்றி, மனசு எந்த கேள்வியும் எழுப்புவதில்லை.
இயற்கையாக விளைந்த காய் கனிகளில் பளபளப்பு அவ்வளவாக இருக்காது. ஆனால், பாதுகாக்கும் பண்பு இருக்கும்.
விஷத்தை சேர்த்து தினமும் சாப்பிடுகிறோம். பலசரக்கு கடையில் பொருள் வாங்க, மாதாந்திர பட்டியல் போடுவது போல, மெடிக்கல் ஸ்டோருக்கு வாரந்திரம், பட்டியல் தயாரித்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் நிலை வந்துவிட்டது.
நஞ்சை கலப்பதால், இந்திய திராட்சை, கொத்தமல்லி, கறிவேப்பிலையைக் கண்டு வெளிநாட்டவர் அஞ்சி ஓடுகின்றனர்.
சரி… கொஞ்சம் யோசிப்போம்.
விவசாயத்தில் இயற்கை முறை பூச்சி விரட்டிகளை பாருங்கள். உங்கள், முன்னோரிடம் இருந்தவற்றை நினைவில் கொண்டு வாருங்கள். அறிவும் தெளிவும் எவை என புரியும்.
பயிர் விளைச்சலை பாதுகாத்தவை பாம்பு, பறவை, குளவி, தேனீ, தவளை, பூனை, பூச்சி என இப்படி ஏராளம்.
சாரைபாம்பு வயல்வெளியில் தினமும், எலிகளை பிடித்து தின்று இயற்கையை சமப்படுத்தியது. அவற்றின் தோலை உரித்து விட்டோம். சமர்த்துக்கள் நாம். பேஸ்… பேஸ்…
கோழிகள் கரையான்களை தின்று சமன் படுத்தி வந்தன. பிராய்லர் கோழி போதும் என, வீட்டில் நாட்டுக்கோழியை கண்ணில் படாமல் ஒழித்து விட்டோம்.
ஆந்தைகளும் கோட்டானும் இரவு வயல் வெளியில் அமர ஒற்றை கம்பு நட்டு வைத்தோம்…
தாவர பூச்சிவிரட்டிகளாக அரளி, தும்பை, நொச்சி, துளசி, இலுப்பை, புங்கம், வேம்பு பயன்படுத்தினேம்
எண்ணெய் காகிதமும், கருவாட்டு பொடியும் பயன்படுத்தி, பூச்சி பொடிகளை கட்டுப்படுத்தினோம்
கத்தரி, வெண்டையில் காய்ப்புழுவை தடுக்க உயிர் ஒட்டுண்ணிகளை பயன்படுத்தினோம். குழல் விளக்கு அருகே எண்ணெய் தடவிய காகிதத்தை கட்டும் முறையை மறந்துவிட்டோம்
மஞ்சள் நிற காகித ஒட்டுப்பொறியை வைத்தால், அஸ்வினி, சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஒட்டி அழிந்து விடும் என்பது மறந்து போய்விட்டது.
பாட்டிலில் துளையிட்டு கருவாட்டுப் பொடி வைத்தால் கொய்யா தோட்டம், மாந்தோப்பில் தீமை செய்யும் பழ ஈக்களை கவர்ந்து அழிக்க முடியுமே.
மயில், கிளிகளை விரட்ட அக்னி அரக்கனை உருவாக்கி கட்டினோம்.
தலைவலி, காய்ச்சலுக்கு மளிகை கடையில் அலோபதி மருந்து வாங்கித்தின்றவுடன் எல்லாம் மறந்து போச்சு.
சிந்தித்து பார்த்தோமா?.
வயலுக்ககுள் எந்த பயிரை சாகுபடி செய்கிறோமோ, அதை பாதுகாக்க வரப்பில் செடிகளை தேர்வு செய்து நட்ட காலம் மலை ஏறிவிட்டது.
வயல் வெண்டைக்கு, வரப்பு ஆமணக்கு பாதுகாப்பு
வயல் தக்காளிக்கு, வரப்பு மரிக்கொழுந்து பாதுகாப்பு
வயல் கத்தரிக்கு, வரப்பு மணத்தக்காளி பாதுகாப்பு,
வயல் மிளகாய்க்கு வரப்பு அகத்தி பாதுகாப்பு
காலிபிளவர், முட்டைகோசுக்கு கடுகு செடியே பாதுகாப்பு
தட்டான், ஊசிதட்டான், பொறிவண்டு, நாவாப்பூச்சியினங்கள், பயிர்களுக்கு, 60 சதவீத பாதுகாப்பை தருவதாக இயற்கை விஞ்ஞானிகள் அறிவு தந்துள்ளனர்.
ஆமணக்கு, துவரை, செண்டுமல்லி, கொத்தமல்லி, சூரியகாந்தி, தட்டைபயறு செடிகளில் மலரும் பூக்கள், நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்திழுக்கும். இவை, பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை தின்றுவிடும். பூச்சிகொல்லிகளை பயன்படுத்துவதால், நன்மை செய்யும் பூச்சிளும் அழிந்து விடுமே…
இயற்கை வழியில், தீர்வுகளை தேடுவோம். உலக உயிர் சூழலை பாதுகாப்போம்.
மருத்துவமனைகளை மூடுவோம்.

No comments:

Post a Comment