Saturday 9 June 2018

மோர்க்களியும் வெள்ளைபூரியும்

தமிழகத்தில், சமணத்தை பின்பற்றுவோர், 40,000 க்கும் ஆதிகம். இதில், 70 சதவீதம் பேர், விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வந்தவாசி பகுதி கிராமங்களில், இவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்; கும்பகோணம், மதுரை, காஞ்சிபுரம் பகுதி கிராமங்களிலும், தமிழ் சமணர்களின் வசிப்பிடம் உண்டு. 
விவசாயம் சார்ந்து வாழ்வதால், பொங்கல் முக்கிய பண்டிகை.  கொ்ணடாட்டத்தில் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றினாலும்,  பிரத்யேக வழக்கங்கங்களை, சமணக்குடும்பங்களில், பாரம்பரியமாக கடைபிடிக்கின்றனர்.
பொங்கலுக்கு முந்தைய நாள், போகிபண்டிகையில். வீட்டை சுத்தம் செய்வது போன்ற நடைமுறைகளை, மற்றவர்களைப் போல் கடைபிடிக்கின்றனர். ஆனால்... சின்ன மாற்றம்.
பொங்கலுக்கு முந்தைய இரவு, கிராமத் தெருக்களில், வலம்வரும் சமண பள்ளி பூசாரி பண்டிகையை அறிவித்து  நடைமுறையை துவக்குகிறார்.  சங்கு முழங்குவதுடன்,  சேமங்கலம் என்ற கருவியை இசைத்து, இயற்கையை புகழ்ந்து பாடிக்கொண்டே, தெரு வலம் வந்து பண்டிகையைத் துவக்குகிறார். இது, குதுாகலம் ஊட்டுகிறது.  இவரது பாடல்களை ரசிப்பதற்கென்றே, வீடுகளில் விழித்து காத்திருந்தவர்கள் உண்டு. இப்போது, நிலைமை மாறிவிட்டது. 
இப்போது இந்த நடைமுறை ஒரு சடங்கு போல் நிகழ்த்தப்படுகிறது. சடங்கு முறையிலாவது, பாரம்பரியம் வாழுகிறதே என ஆறுதல் படுகின்றனர் பெரியவர்கள்.
புத்தாடை உடுத்தி, உடன் ஊழைத்தோரை மகிழ்விப்பது போன்றவை நடைமுறையில் உள்ளன. ஆனால், விவசாயத்தொழில், இயந்திரமயமாகி வருவதால், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறது. நவீன வேளாண்மையில், விலங்கு சக்திக்கு இடம் இல்லாதாதல், மாட்டுப்பொங்கல் கூட மாறி வருகிறது. 
 பொங்கல் அன்று, வீட்டு வாசலில், பொங்கலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் வட மாவட்ட பகுதிகளில், கிராம கோவில்களில் சேர்ந்து பொங்கலிடுவதை வழக்கமாக கொண்டிருந்தாலும், சமணக் குடும்பத்தினர், வீட்டு வாசலை அலங்கரித்து, அங்கேதான் பொங்கல் வைக்கின்றனர்.
 வெண் பொங்கலுக்கு, தொட்டுக் கொள்ள தோதாக, பச்சை மிளகாய் பச்சடி படைப்பது வழக்கமாக உள்ளது. இனிப்பு பொங்கல், கரும்புச்சாறு கலந்து தயாரிக்கின்றனர். தயாரித்த பொங்கலை வீட்டுவாசலில், சூரியனுக்கு படைத்து வழிபடுகின்றனர். 
 பண்டிகைக்கான பிரத்யேக உணவு வகைகள், தயாரிக்கின்றனர் அவற்றில் முக்கியமானது வெள்ளைப்பூரி.  பச்சரிசியையும், துவரம்பருப்பையும் கலந்து, இந்த உணவைத் தயாரிக்கி்ன்றனர். இத்தடன், வேர்க்கடலை சட்டினியை தொட்டுக்கொள்ள பரிந்துரைக்கின்றனர். 
 கால வெள்ளத்தில், இந்து உணவுகள் மறைந்து வருவதாக தமிழ்நாடு சமணர் பேரவை தலைவர் அறவாழி. கூறினார். அவர் கூறுகையில்,`` கால ஓட்டத்தில் மாற்றம் தவிர்க்க முடியாததாகவிட்டது. வெள்ளைப்பூரி போன்ற பிரத்யேக உணவுகளை, இப்போது பலர் தொடர்வதில்லை. இந்த உணவு  கிராமங்களில் வசிக்கும் மூத்தோர்களால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது,'' என்றார்.
பொங்கலை யொட்டி, தமிழ் சமணர்கள் தயாரிக்கும் மற்றொரு பாரம்பரிய உணவு மோர்க்களி. பச்சரிசி, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் மோர் கலந்து இதை தயாரிக்கின்றனர். இந்த உணவும், வழக்கத்தில் மறைந்து வருகிறது. முதியோர்களால் மட்டுமே, இப்போது தயாரிக்கப்படுகிறது; இளைஞர்களோ, இளம் பெண்களோ அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார், வந்தவாசியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ஜம்புக்குமரன். 

வெள்ளைப்பூரி தயாரிக்கலாம் வாங்க
அரிசி,  3 பங்கு; துவரம் பருப்பு, 1 பங்கு எடுத்து ஊறவைத்து, அரைத்துக் கொள்ள வேண்டும். பூரி தயாரிப்பதற்கான மாவு போல் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி, பூரியைப்போல் உருட்டி தயாரித்துக் கொள்ள வேண்டும். அதை கொதிக்கும் சமையல் எண்ணெயில், வேகவைத்து எடுத்தால், சுவையான வெள்ளைப்பூரி தயார். இதை  தொட்டு சுவைக்க வேர்க்கடலை சட்னிதான் கூட்டு

No comments:

Post a Comment