Saturday 9 June 2018

கவலையைப் போக்கும் காக்கையும் மைனாவும்

பறவைகளை தேடுவதும், அவற்றை பின் தொடர்வதும், அவற்றின் ஒலியை, நடத்தையை ரசிப்பதிலும்  தனி  சுவராசியம் உண்டு.
 உலகம் முழுவதும் ஊர்ப்புற பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு, 2014 ஜனவரி 17 ம் தேதி நடந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் ஆர்வம் ஏற்பட்டதால் தயக்கத்துடன் பங்கேற்றேன்..
 ரிஷி வேலி கல்வி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டிருந்த பறவைகள் குறித்த சில ஆங்கில நுால்களை ஒரு முறை வாசித்திருக்கிறேன்.   
பறவைகளைத் தேடி அடையாளம் காணும் ஆர்வத்தால், ஞாயிறன்று, அதிகாலை 4:00 மணிக்கே எழுந்து விட்டேன். சைக்கிள் ஓட்ட பயற்சியை முடித்துக் கொண்டு, அதிகாலை 5:40 மணிக்கு, மாடிக்கு வந்தேன். இருள் விலகவில்லை; ஆனால், பறவைகளின் குரல் தெறித்துக் கொண்டிருந்தது.  காகங்களின் கரைச்சல்தான் துாக்கலாக இருந்தது. மரங்களை மாற்றி மாற்றி அவை பயணித்துக் கொண்டிருந்தது கரைச்சல் வழி அறிய முடித்து. 
அவை, பறப்பதைக் கவனி்த்துக் கொண்டிருந்தேன். எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது குரல் மழையில் தெரிந்தது. 
 தொடர்ந்து மைனாக்கள் சத்தம் போட்டன.அந்தகுரல் ஏற்கனவே அறிமுகம் என்பதால், அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படவில்லை.  எண்ணிக்கையை அவதானித்தேன். 
இடை்யே, மேலும் சில பறவைகளின் குரல்கள்... அந்த குரல்கள் பரிச்சயம்தான் என்றாலும்,  பெயர்களை  அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டது.
 மைனாக்கள், ஐந்து விதமாக குரல் கொடுப்பதை கவனித்திருககிறேன். அவற்றில் ஒருவகை குரல் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட குரல் எழுப்பும் போது, இணை மைனாக்கள் குதுாகலமாக இருப்பதை கவனித்திருக்கிறேன்.
 கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில், மைனாக்களை வீட்டில் வளர்த்து, பேச பழக்குவது உண்டு. என் உறவினர் பெண் ஒருவர், ஒரு மைனாவுக்கு, அக்கக்கா.... கள்ளன்...கள்ளன் என்று பேசக் கற்றுக் கொடுத்திருந்தார்.  
இலங்கை தமிழர்களின், தமிழக பகுதி குடியிருப்புகளுக்கு சென்ற போதெல்லாம், பல குடியிருப்புகளில், கிளியும் மைனாவும் வளர்ப்பதை பார்த்திருக்கிறேன். மைனாக்கள் மிகவும் மெல்லியதாக இனிய விசில் கூட அடிககும். 
சரி... பறவைக்கு வருவோம்
தொடர்ந்து, அண்டங்காக்கைகளின் கனமான குரல் கேட்டது. எதிர்வீட்டு தென்னையில் அது அமர்ந்திருந்ததை கவனித்தேன். அதற்கு தனி்தத குரல் உண்டு. பலர் இதை ரசிப்பதில்லை. ஆனால், அரசங் காகத்தின் கரைச்சலை விட, அண்டங்காக்கையின் கனம் நிறைந்த குரல் சுவராசியப்படுத்தும். ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று, பக்கத்து வீட்டுச்சுவர் மாடியில் அமர்ந்தது.
 விடியலால், வானம் பொலபொலத்தது. காகங்களின் வரவு அதிகரித்து. அவை, நக்கல் குரலிலும் ஒன்றைக் குரலிலும் கரைந்து கொண்டே இருந்தன. மைனாக்களிலும் மற்றொரு இணை வந்து, குப்பையில் இரைதேட துவங்கின.
 அந்த பகுதியை கூர்ந்து கவனித்த போது, மற்றொரு காட்சி. குப்பை சிதறிக் கிடந்த பகுதியில, ஒரு கீரிப்பிளை்ளை சுற்றித் திரிவதைக் கவனித்தேன். சற்று நேரத்தில், அதன் இணை கீரியும் உடன் சேர்ந்து கொண்டது. அவை குப்பையில் அலைந்து கொண்டிருந்தன.
 இதற்கிடையில், மேற்கில் இருந்து, கிழக்கின் சாய்வாக, சில பறவைகள் வேகமாக பறந்து மறைந்து கொண்டிருந்தன. அவை மிகவும் சிறியவை. பறக்க சிரமப்பட்டது போல் தோன்றினாலும், அதில் தனி அழகு தெரிந்தது. ஆனால், காற்றை கிழித்துக்கொண்டு பறந்தன அவை, ஒரே திசையில் பறந்து மறைந்து கொண்டிருந்தன.. 28 பறவைகள் என், தலைக்கு மேலாக பறந்து சென்றதை எண்ணிப்பார்த்தேன்.. அவற்றின் வடிவம் அழகு. ஆனால், அவற்றை இனம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
சில, பச்சைக் கிளிகள் உச்சிவானில் சத்தமிட்டபடியே, பறந்து மறைந்தன. இப்படி சென்றவற்றில், ஏழு எண்ணிக்கையை அவதானித்தேன். சில தனித்தனியாக பறந்து  கொண்டிருந்தன. எளிமையான கார்ட்டூனாக அவற்றை வரைந்து விட முடியும் என நினைத்தேன்.
அப்போது சற்று துாரத்தில், கருஞ் சிட்டுக்குருவியின் குரல்.  கொலுசு குலுங்குவது போல் இருந்தது. அந்த ஓசை பரிச்சியம் என்பதால், எளிதில் அடையாளம் காண முடிந்தது.  மாணிக்க பரல்களை சேர்த்து உருட்டி விடுவது போல் அவற்றின் ஒலி இருக்கும். அந்த சத்தம் மென்மையானது. அற்புதமானது. மனசில் ஒலித்து்க்கொண்டே உயிர்ப்புடன் இருக்கும். இநத ஒலியை அறிமுகப்படுத்தியது என் துணைவியார்தான். இந்த பறவைகள் வீட்டருகே வந்துவிட்டால், ஓ.. அற்புத சுிட்டுக்களே... என்று ஆர்வமாக சென்று கவனிப்பார். குழந்தைகளையும் அழைத்து காண்பிப்பார்.
 சிட்டுக்கள், பல விதமாக ஒலி எழுப்புவதை கவனித்திருக்கிறேன். அனேகமாக, இவற்றில் ஆண்கள்தான் நுாதனமாக ஒலி எழுப்பும். அவற்றின ஓலிக்கு ஏற்ப, பெட்டை நகர்ந்து நிகழ்வை ஒழுங்கு செய்யும்.
சிட்டு என்று நான் குறிப்பிடுவது அடைக்கலான் குருவிகளை அல்ல.
 பறவை ஆர்வலர்கள், சிட்டு என்று அடையாளம் காட்டுவதை நான், என் பெற்றோரிடம் இருந்து, அடைக்கலான் குருவி என்று அடையாளம் கணடுள்ளேன்
. அடைக்கலான் குருவியுடன் நீண்ட பரிச்சயம் எனக்கு உண்டு. என் பூர்வீக வீட்டில், பத்துக்கும் மேற்பட்ட கூடுகளில் அவை வசித்து வந்தன. விவரம் தெரிந்த நாள் முதல் அவற்றை எனக்கு தெரியும் அவை எங்கள் குடும்ப உறுப்பினர் என்பதால், அனைத்து செயல்களுடனும் பரிச்சயம்.  எங்களுடன் அடைக்கலமாக வாழ்வதால, அவற்றை அடைக்கலான் குருவி என்று அப்பா சொல்லித்தந்திருந்தார். 
சில நேரங்களில், அவற்றின் கூட்டில் இருந்து குஞசுகள், மாடி அறைக்குள் தவறி விழுந்து விடும். அவற்றை, மிகவும் மெ்ன்மையாக எடுத்த அப்பாவிடம் காட்டுவோம். எணியை எடுத்துச் சென்று, குறிப்பிட்ட கூட்டைத் தேடி குஞ்சை அங்கு வைப்போம். அது அந்த காலம். இப்போது, அடைக்கலான் குருவி கூடுக்ளை காணமுடிவதில்லை. அவற்றின் இனிய ஒலி, என் இதயத்தின் ஓரத்தில் சிந்திக் கொண்டே இருக்கிறது.. 
பறவைகளை ரசித்து நின்ற போது...  ஒரு செண்பகம் அந்த வழியாக பறந்த சென்றது. தொடர்ந்து, மீன் கொத்தி ஒன்று, மின் கம்பியில் நடனம் ஆடிக் கொண்டிருந்தது. ‘அங்கே என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்,’ என, என் கவனத்தை ஈர்த்தபடி, கருங்குருவி ஒன்று பக்கத்து வீட்டு மாடியைச் சுற்றி பறந்தபடியே சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. அந்த அற்புதத்தை ரசித்து க்கொண்டிருந்த போது, மணி, 7:30 ஐ தாண்டிவிட்டது. இப்போது நானும்இயந்திரத்தை நோக்கி பதட்டமாக நகரத் துவங்கினேன்.
பறவைகள் கணக்கெடுப்பை ஒட்டி, இணையத்தில், காக்கைகளையும் மைனாவையும் மட்டுமே பதிவிட முடிந்தது. மற்ற பெயர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.  ஆங்கில பெயர்களை இனம் காண்பதில், தடுமாற்றம் ஏற்பட்டதால், எண்ணிககையை பதிவிடாமல் தவிர்த்தேன். இப்போது, நண்பர் ஜெகந்நாதனும், ஆசையும் இணைந்து எழுதிய, பறவைகள் கையேடு புத்தகத்தின் வழி, அடையாளம் காணவும் அறிந்து கொள்ளவும் முடிகிறது.
இந்த புத்தகத்தின் அடிப்படையில், மற்றொரு முறை மாடியில் பறவைகளை ரசிக்க சென்றோம். என் மகளும் உடன் வந்தார். மைனாக்களையும், காகங்களையும், புறாக்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது உயரத்தில் ஒரு கரும்பருந்து பறந்த கொண்டிருந்தது.
 இறக்கையை ஆட்டாமல், எளிமையாக, அது பறந்து சென்ற விதத்தை வியந்து எனக்கு அதன் பறப்பு வனப்பை  விளக்கினார் மகள். இதற்கிடையில், ஒரு மைனா கூட்டையும் பார்த்துவிட்டோம். சிறித நேரத்தில், கரும்பருந்து மீண்டும் வட்டமடித்தது. அதை ஒரு காகம் மேலும் கீழுமாக பறந்து விரட்டியடித்துக் கொண்டிருந்தது.   

No comments:

Post a Comment