Thursday 14 March 2019

வண்ணங்களை பூசிய வால்காக்கை

சென்னை பெசண்ட் நகர் உ.வே.சா., வாசிப்பகம் பக்கம் ஒரு வேலையாக போயிருந்தேன். கலாசேத்ரா பள்ளி வளாகத்தில் தனித்தீவு போல் உள்ளது. தனிமையும் அமைதியும் நிறைந்த இடம். வளாகத்தில், மைனா, கிளி, வால்காக்கை,  துடிச்சிட்டு, பூணியல் என, பறவைகள் சுதந்திரமாக திரிந்தன. கொஞ்ச நேரம் அவற்றை ரசித்துக் கொண்டிருந்தேன்.
இந்த படிப்பகத்தில் மிகச்சிறந்த சுவடியகம் உள்ளது. சங்க இலக்கிய மூலச் சுவடிகள் பலவற்றை பார்த்தேன். மூலிகை பாதுகாப்பு முறையில் வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் மூலிகை கலவை நெடிக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. பழந்தமிழ் சுவடிகளை, மின்னுாலாக்கும் பணி நடந்து வருகிறது.
வாசிப்புக்கு வசதியான வடிவமைப்புடன் கூடம் உள்ளது. மேற்கோள் புத்தகங்கள்  பல ஆயிரம் உள்ளன. படிக்கத்தான் ஆட்களை காணோம்.
இந்த இடத்துக்கு போனதும்,  ருக்மிணி தேவி அருண்டேல் பற்றிய நினைவு வந்தது. அவரது மறைவு தினம், பிப். 24 ம் தேதி. மறைந்த வருடம், 1986. என் அஞ்சலியை பதிவு செய்தேன்.
அவர் பிறந்தது,  1904  பிப்., 29 ல். அவரது பிறந்த நாளை முறைப்படி நினைவு படுத்த வேண்டுமானால், நான்கு வருடத்துக்கு ஒருமுறை தான் முடியும். 
மதுரையில் பிறந்தவர். புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியை நிறுவியவர்.
சமூகத்தில் ஒரு சாரார் மட்டுமே ஆடிவந்த சதிர் என்ற நடனத்தை, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பரவலாக்கியவர்.
மொரார்ஜி தேசாய், இந்திய பிரதமராக இருந்த போது, 1977 ல் இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தார். ‘கலை மற்றும் கலைசார்ந்து  பணிபுரிவதே விருப்பம்’ என்று கூறி மறுத்துவிட்டார்.
மதுரயைில், நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள் தம்பதியருக்கு,  பிறந்தார். அன்னி பெசண்ட் துவக்கிய,  தியசோபிக்கல் சொஸைட்டியில், நீலகண்ட சாஸ்திரி ஈடுபாடு கொண்டவர். பணி ஒய்வுக்கு பின்,  சென்னை அடையாரில், குடும்பத்துடன் குடியேறினார்.
ரவீந்திரநாத் தாகூர் எழுதிய, மாலினி என்ற நாடகத்தில் அங்குதான் ருக்மிணி தேவி நடித்தார். அவரது பாடல்களையும் பாடினார். தந்தையின் ஊக்குவிப்பால் கிரேக்க நடனம் கற்றுக் கொண்டார்.
கல்விபணிக்காக வந்த இங்கிலாந்தை சேர்ந்த  ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரை, 1920 ல்  அன்னிபெசன்ட் முன்னிலையில் மணந்தார்.
இது, அக்காலக் கட்டத்தில், பிரமாண குடும்பங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஷ்ய நாட்டு பாலே கலைஞர்கள் அன்னா பாவ்லோவா, கிளியோ நார்டி  ஆகியோரிடம், பாலே நடனம் கற்றார். இந்திய பாரம்பரிய நடனத்தையும் கற்கும் படி, பாப்லோவா பரிந்துரைத்தார்.
சென்னை மியூசிக் அகாதெமியில், 1933 ல் தேவதாசிகளின், சதிர் நடன நிகழ்ச்சி நடந்தது. அதனால் ஈர்க்கப்பட்டு அக்கலையை  கற்க விரும்பினார். பல தடைகளுக்கு பின், மயிலாப்பூர் கௌரி அம்மா என்பவரிடம் கற்றார். பின்னர் பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் பயின்றார்.
சதிர் என்ற பரதநாட்டியம், கற்பிக்க, கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியைத் துவக்கினார். அந்தக் காலக்கட்டத்தில்,  பாட்டு மற்றும் நடனம் போன்றவை தேவதாசிகள் என்ற சமூகத்தினர் மட்டுமே செய்ய வேண்டும் என்ற எண்ணம் பரவியிருந்தது. அதை மாற்ற அயராது உழைத்தார்.
சதிராட்டம், ஆபாசங்களை அள்ளி வீசுவதை மட்டுமே குறியாக கொண்டிருந்தது. ருக்மிணி, அந்த தளத்தை மாற்றினார். அதில் இருந்து மேலெழுந்து, மிகச்சிறந்த ஆடல் அனுபவத்தை வெளிப்படுத்தி ரசிக்க வைத்தார்.
தேவதாசிகள், சதிராடிய போது, சேலை, நகைகள் என பலவற்றையும் அணிந்திருந்தனர். ஆடும் போது, பக்க வாத்தியக்காரர்கள் பின் தொடர்ந்தனர். இதனால் நடனத்தின் அழகியல் தன்மை குறைவதாக கருதிய ருக்மிணி சில மாற்றங்களை செய்தார்.
பக்கவாத்தியக்காரர்களையும், பாடுபவர்களையும் மேடையில் ஓரமாக அமரச் செய்தார். பாரம்பரிய சிற்பக் கலை ரசனையில் தோய்ந்து, இத்தாலிய உடை நிபுணர் மேடம் காஸன் உதவியுடன் புதுவித உடைகளையும், ஒப்பனையையும்  வடிவமைத்தார்.  நடன மேடையின் பின்புலத்தை மாற்றியமைத்தார். 
கான்ராட் வோல்ட்ரிங், அலெக்ஸ் எல்மோர், மேரி எல்மோர் போன்ற நாடகக் கலைஞர்களின் உதவியால், மேடை ஒளியமைப்பையும் மாற்றினார்.  சதிராட்டதுக்கு, பரதநாட்டியம் என பெயர் சூட்டினார்.
வால்மீகி ராமாயணம், புத்தாவதாரம், குமார சம்பவம், குற்றாலக் குறவஞ்சி, கண்ணப்பர் குறவஞ்சி, ஆண்டாள் முதலிய நூல்களை நடன காட்சியாக அமைத்தார்.
இந்திய பாரம்பரியக் கலைகளில் முழு ஆர்வம் கொண்டிருந்தார்.  நலிவடைந்திருந்த நெசவுத் தொழிலை, ஊக்குவிக்கும் பொருட்டு  கண்கவர் வண்ணங்களில்,  வேலைப்பாடுகளுடன் கைத்தறி ஆடைகளை தயாரித்தார்.
கமலாதேவி சட்டொபத்யா உதவியுடன், துணிகளுக்கு இயற்கை சாயங்களை பயன்படுத்தும் முறையை பயின்றார். கலம்கரி என்ற துணிகளில், இயற்கை சாயம் கொண்டு வேலைப்பாடு செய்யும் முறைகளை ஊக்குவித்தார். இயற்கையுடன் வாழ்ந்த பேராளர் அவர்.
பத்ம பூசன் விருது, காளிதாஸ் சம்மன் விருது, சங்கீத நாடக அகாதமி விருது ஆகியவை இவரை அலங்கரித்தவை. வண்ணங்களை பூசிய வால் காக்கை போல் பறந்து திரியும் அவரது நினைவை போற்றுகிறேன்.

No comments:

Post a Comment