Tuesday 2 April 2019

கரீபியன் கடலில் ஒரு ராட்சத முதலை – கியூபா

கழுகுப் பார்வையுடன் கரீபியன் கடலில் பறந்தால், பெரிய முதலை மிதப்பது போன்ற நிலப்பரப்பை பார்க்கலாம். அதுதான் கியூபா நாடு.
வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள கரீபியன் கடலில் கியூபா உள்ளது. வட அமெரிக்க கண்டப்பரப்பில் அமைந்துள்ளது. நில அமைப்பில், அமெரிக்காவுக்கு மிக அருகிலும், கொள்கையில் மிக துாரத்திலும் உள்ள நாடு. அமெரிக்கா, மியாமி கடற்கரையில் இருந்து, 130 கி.மீ., துாரத்தில் உள்ளது.
உலகின், ஏழாவது பெரிய தீவு இது. 1,14,524 சதுர கி.மீ., பரப்பளவுள்ளது. 2017 ல் மக்கள் தொகை 1.15 கோடி. அரசு மொழியாக ஸ்பானிஷ் உள்ளது. இதன்  தலைநகரம் ஹவானா.
கடல் பயணத்தின் போது, கொலம்பஸ், 1492 ல், கியூபாவைக் கண்டறிந்தார். ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன், ஸ்பெயின் மற்றம் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டில் நீண்ட காலம் இருந்தது.
ஸ்பெயின் ஆதிக்கத்திலிருந்து, 1898 ல் விடுபட்டது. 1920 ல் சுதந்திரக் குடியரசு நாடானது. ஆனாலும், அமெரிக்கா பல கட்டுப்பாடுகளை கியூபா மீது விதித்திருந்தது.  1952 ல், பில் ஜன்ஸியோ பாட்டிஸ்டா என்பவர் ராணுவ புரட்சி நடத்தி கியூபா ஆட்சியைக் கைப்பற்றினார். லஞ்சம், ஊழல், சீர்கேடுகள் நிறைந்த ஆட்சியாக அது இருந்தது.
இந்த நிலையில், பாட்டிஸ்டா ஆட்சிக்கு எதிராக, பெரும் புரட்சி வெடித்தது. புரட்சிக்கு  தலைமை வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. இளைஞர்களை திரட்டி போராடினார். அவரை சிறை பிடித்த அரசு, நீதிமன்றத்தில் நிறுத்தியது.
அங்கு வரலாற்று புகழ் மிக்க, வாக்குமூலத்தை, பிடல்காஸ்ட்ரோ பதிவு செய்தார். அதில்,  ‘கியூபா மக்கள் விடுதலை அடைய விரும்பும் போது, விமானங்களை கல்லெறிந்து வீழ்த்துவர்; டாங்கிகளை வெறும் கைகளால் புரட்டிப்போடுவர்’  என்று குறிப்பிட்டார்.
 புரட்சி, 1959 ல் வென்றது; ஆட்சி, பிடல்காஸ்ட்ரோவின் கைக்கு மாறியது. பொதுவுடமை சித்தாந்த அடிப்படையில் ஆட்சி நடந்த ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டார். அமெரி்க்காவுடன் உறவில் விலகி நின்றார்.
கியூபாவில் இருந்த அமெரிக்க சொத்துக்களை, 1960ல் அரசு உடமை ஆக்கினார். இதையடுத்து, கியூபா மீது, அமெரிக்கா, பொருளாதாரத் தடையை விதித்தது.
அமெரிக்க படை, 1961 ல் கியூபா நாட்டில் நுழைந்தது. இதற்கு, ‘டேஸ் ஆப் பிக்ஸ்’ என, அமெரிக்கா பெயர் வைத்து தாக்கியது. மிகவும் நுட்பமாக சண்டையிட்ட கியூபா, 1100 அமெரிக்கர்களை, பிணை கைதிகளாக பிடித்தது.
இது  கடும் நெருக்கடியை ஏற்படுத்தியதால், அமெரிக்கா போரை நிறுத்தியது. பிணைய கைதிகளை விடுவிக்க, 53 மில்லியன் டாலர். தற்போதைய இந்திய மதிப்பில், 3396.77 கோடி ரூபாய்  மதிப்பிலான உணவுப் பொருட்களையும், மருந்தையும் அமெரிக்கா கொடுத்தது.
 அதன்பின்னும், அமெரிக்கா– கியூபா இடையே பனிப்போர் நிலவியது. இது, 55 ஆண்டுகள் நீடித்தது. அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்த போது, பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்தார். கியூபா நாட்டுக்கு சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற புகழையும் பெற்றார்.
தொடர்ந்து, 47 ஆண்டுகள், கியூபா பிரதமர் மற்றும் அதிபராக, பிடல் கேஸ்ட்ரோ பொறுப்பு வகித்தார். குடல் நோய் பாதிப்பு காரணமாக, கடந்த, 2008 ல், பதவி விலகினார். அப்போது ராணுவ அமைச்சராக இருந்த அவரது  தம்பி, ரவுல் காஸ்ட்ரோ தற்காலிகமாக அதிபர் பொறுப்பை ஏற்றார்.
கடந்த, 2013 ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, ரவுல் காஸ்ட்ரோவே  அதிபர் பொறுப்புக்கு வந்தார். 2018 வரை அந்த பதவியை வகித்தார். 87 வயதில் பதவி விலகிவிடுவதாக அளித்த வாக்குறுதிபடி நடந்து கொண்டார். 2018 ல் நடந்த தேர்தலில் வென்று மிகேயில் டயஸ் கானல் Miguel Diaz Canel என்பவர் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
கியூபாவில் கற்றது...
உலக மக்களுக்கு உயர்ந்த அறங்களையும், பாடங்களையும் கற்றுத்தரும் நாடு.
இங்கு, 77 சதவீதம் பேர் நகர்புறத்தில் வசிக்கின்றனர். ஆண்களின் சராசரி ஆயுள், 76 வயது, பெண்களுக்கு, 81 வயது. இந்த நாட்டில் மதம் என்ற பெயரில் ஏதும் இல்லை.  ஆகஸ்டில் இங்கு குளிர் அதிகம். ஜனவரியில் கோடை.
இந்த நாடு முழுவதும், 250 அருங்காட்சியகங்கள் உள்ளன. நாட்டின் பெருமையை, குடிமக்களுக்கு உணர்த்துவதற்காக இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு ஆறு முதல் 15 வயது வரையுள்ளவர்களுக்கு கட்டாய பள்ளிக் கல்வி உண்டு. பள்ளி முதல் கல்லுாரி வரை அனைத்து படிப்புகளுக்கும் கட்டணம் இல்லை. எல்லா படிப்புகளும் இலவசம். படிக்காதவர்களே இல்லை .
பள்ளிகளில், வகுப்பு வாரியாக மாணவ, மாணவியருக்கு பிரத்யேக வண்ண சீருடைகள் வழங்கப்படும். சீருடை அணிவது கட்டாயம்.
இந்த நாட்டில் சுற்றுலா முக்கியத் தொழில்.
உலக அளவில் மக்கள் தொகை அடிப்படையில், கணக்கிட்டால்,  மிக  அதிகமான  மருத்துவர்கள் கியூபாவில் தான் உள்ளனர்.  உலகில் எந்த நாட்டில் நோய் பாதிப்பு ஏற்பட்டாலும்,  உதவிக்கு  கியூபா, தன் நாட்டு மருத்துவர்களை உடனடியாக அனுப்பி வைக்கும்.
கியூபாவில் நடனம் மக்கள் வாழ்க்கையுடன் இணைந்தது. நடனம் ஆட தெரியாதவர்களே இல்லை என சொல்லலாம்.  பொலிரோ, மாம்போ மற்றும் சாசா என்ற நடன வகைகள் இங்கு பிரபலம். கிராமியக் நடனக் கலைஞர்களுக்கு, அரசு விழாக்களில்  முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இங்கு, இன்றும் கார்கள் அரசுடமையாகவே உள்ளன.

No comments:

Post a Comment