Wednesday 3 April 2019

மரம் அறிந்து அறம் காப்போம் - நாகலிங்கம்

சென்னை, ஒயிட்ஸ் சாலையில் ஒரு நாகலிங்கம் மரம் உள்ளது. நான் பணி செய்யும் அலுவலகம், இங்கு மாறியது முதல், கவனித்து வருகிறேன். கருநிழல் படர்ந்திருக்கும். அந்த வழியில் நடப்போரை ஓய்வெடுக்க துாண்டும். எப்போதும் பூங்காம்படித்து மொட்டுக்கள் மிளிர்ந்து கொண்டே இருக்கும். உதிர்வதும் துளிர்ப்பதும் இயல்பாய் இருக்கும். கொத்திலை தாவரம் என்பதால் நிழல் அடர்வு அதிகமாக இருக்கும். 
வேலை நெருக்கடி இல்லாத நாட்களில், மதியம், மரத்தை ரசிப்பது வழக்கம். 03–04–2019 அன்று காலை ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வழியில் கடந்த சிறுவன், சற்று துாரம் சென்ற பின், திரும்பி வந்தான். மரத்தை சுற்றி வந்து வியப்புடன் பார்த்தான். அவனை ஈர்த்துள்ளதை கவனித்தேன்.
இதன் பூ இளஞ்சிவப்பு வண்ணம். பார்வைக்கு இதமானது. இதழ்களுக்குள், ஒரு லிங்கம் பொதிந்திருப்பது போல் தோன்றும். அது நாகப்பாம்பு படம் எடுப்பது போன்ற காட்சியை உருவாக்கும். மணம் விரும்பி ரசிக்கத் தகுந்தது. இலைகள், தூசியை வடிகட்டி சுற்றுப்புறத்தை மிளிர்த்தும்.
ஆங்கிலத்தில், Cannon ball tree என்பர். தாவரவியல் பெயர், கவுரவ்பீட்டா கயனென்சிஸ் – Couroupita Guianensis Aublet. தாவரக் குடும்பம் : லெஸிதிடேசி – Lecythidaceae. லத்தீன் அமெரிக்கா, தென் கரீபியன் பகுதியை  தாயகமாக கொண்டது. 35 மீட்டர் வரை  வளரும்.
விரிந்த தழையுடன் அடர்ந்து நிற்கும். அடிமரத்தில் நீண்ட குச்சிகள் போல் பூங்காம்பு  வளரும். சரமாய் பூக்களைத் தாங்கும். .
அடிமரத்தண்டு மற்றும் தடித்த பெரிய கிளைகளில் பூங்காம்பு உருவாகி சிரிக்கும். அது, ஒரு மீட்டர் வரை நீளும். அழகிய சிமிழ் போல் அதில் மொட்டுக்கள் முகிழ்க்கும்.
விரியும் பூவின் மகரந்தப் பகுதி, நாகப் பாம்பு படமெடுப்பது போன்றிருக்கும். விரிந்த பூவின் அண்டம், லிங்கம் போல் தோன்றும். இதை அடிப்படையாக கொண்டு, நாகலிங்கம் என, தமிழர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
பூக்கள், சூல் கொண்டு காய் உருவாகும். காய், கடின உருண்டை பந்து போல் தொங்கும். அவை, விழுந்தால், குண்டு வெடிப்பது போல் சத்தம் கேட்கும்.
இலையை அரக்கி, தழையெருவாகப் பயன்படுத்தலாம்.  பழத்தை, லத்தீன் அமெரிக்கா்கள் கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கின்றனர்.
ஆப்ரிக்கர்கள், கனியை உண்ணும் வழிமுறையை அறிந்துள்ளதாக கூறப்படுகிறது. கனியிலிருந்து ஒருவகை பானமும் தயாரிக்கின்றனர். பூவில் வாசனை திரவியம் தயாரிக்கலாம்.
முதிர்ந்த  நாகலிங்கம் மரம் வேளாண் கருவி, பெட்டி, பொம்மை செய்ய பயன்படும்.
மித வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளரும். வறட்சியை தாங்கும். பனிக்கு தேங்கும்.
காலனியாதிக்கத்தின் போது, ஆங்கிலேயர்கள் இந்தியா, இலங்கை நாடுகளுக்கு கொண்டு வந்து நட்டனர். சிங்கள மொழியில், ‘சல்’ என்று அழைக்கின்றனர்.
தமிழகத்தில், நீலகிரி மாவட்டம், பார்லியாறு பகுதியில் தான் முதலில் நடப்பட்டது. இங்கு பல்கி பெருகியுள்ளது. பூவின் அழகை விரும்பியவர்களால், தமிழகம் முழுவதும் பரவியுள்ளது.
இலையில் டைைஹட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இண்டிகோ இன்ட்ரூபின், ஐசாடின் போன்ற வேதி சேர்மங்கள் உள்ளன.
இந்த மரம் பற்றி ஏற்கனவே சில பதிவுகள் எழுதியுள்ளேன். ஒருமுறை மரத்தை வெட்டி சேதப்படுத்த சிலர் முயன்றனர். அப்போது, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரிடம் சிறிய கம்பி வேலி போட பரிந்துரைத்தேன். உடனே செய்தார். அந்த கம்பிவேலிக்குள், நாகலிங்கம் பாதுகாப்பாக நிற்கிறது.
உணர்ந்தால் உயரலாம்
வழக்கம் போல், தமிழர் அறிவின் மீது சாணி அடிக்கும் கூட்டம் ஒன்று பூவின் வடிவத்தைக் காட்டி, மூடநம்பிக்கையை பரப்பி வருகிறது. பக்தியின் பெயரால் பிழைப்பு நடத்தும் கூட்டம் அது.  பூவை வைத்து பூஜை செய்தல், வழிபடுதல்,  பூவை வணங்குதல் போன்ற எந்த செயல்களாலும் பலன் இல்லை. 
பூமியில் மலரும் ஒவ்வொரு மலருக்கும் தனிச்சிறப்பு உண்டு. அவை ரசிக்கத் தக்கவை. மனித மன இயல்பை பூக்கள் மிளிர்த்தும். மிளிர்ச்சியையும், மலர்ச்சியையும் கற்பிக்க இயற்கை அமைத்த ஏற்பாடு தான் பூக்கள்.
இவற்றில் சிலவற்றை அறிந்த அறிஞர்கள் விவரங்களை பயன்களையும் பதிவு செய்துள்ளனர். பல பூக்கள் பற்றிய தகவல் தொகுக்கப்படவில்லை. அவற்றின் பலன்களை நுகரமுடியவில்லை. 
லத்தீன் அமெரிக்காவில் இருந்து வந்த இந்த மரமும் உயர்ந்த விழுமியங்கள் கொண்டது. பயன் மிக்கது. மன மலர்ச்சியை உருவாக்க வல்லது. அந்த மரத்தின் நுட்ப செயல்பாட்டை அறிய முயல்வோம். 
மரத்தை அறிவோம்; அறத்துடன் வாழ்வோம்.

No comments:

Post a Comment