Saturday 25 July 2020

அறுவை மருத்துவமும் ஆட்டு மயிரும்

போர் மற்றும் விபத்தில் காயம்பட்டவரை காப்பாற்ற தான் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை முறை அறிமுகமானது. துவக்கத்தில் சிகிச்சை முடிந்ததும், 55 சதவீதம் நோயாளிகள் உயிரிழந்தனர். அறுவை சிகிச்சை காயத்தில் சீழ் பிடித்து, தொற்று ஏற்பட்டதால் பெருவாரி மரணங்கள் நிகழ்ந்தன. இதை அறிய முடியாமல், திணறியது மருத்துவ உலகம்.
காயத்தில் சீழ் பிடிப்பதை கண்டறிந்து, அதை தடுக்க, ‘ஆன்டிசெப்டிக்’ என்ற, தொற்று தடுப்பு முறையை புகுத்திய மருத்துவமேதை, ஜோசப் லிஸ்டர். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், ஏப்ரல் 5, 1827ல் பிறந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார்.  
அறுவை சிகிச்சை மருத்துவ துறையில் புகழ்பெற்ற பேராசிரியர் ஜேம்ஸ் சைம். இவருடன் இணைந்து, ஸ்காட்லாந்து, எடின்பரோ பல்கலைக் கழகத்தில் ஆய்வுகள் மேற்கோண்டார். அவரது மகளையே திருமணம் செய்தார். அறுவை சிகிச்சையில் புதுமைகள் நிகழ்த்தினார்.
அந்த காலத்தில், அறுவை சிகிச்சை முடிந்த சில நாளிலேயே, நோயாளிகளில் பலர் இறந்தனர். இதை தடுக்கும் முயற்சிகள் பலன் தரவில்லை. இது பற்றி ஆராய்ந்தார் லிஸ்டர். அறுவை காயத்தில், நுண் கிருமிகள் தொற்றி, சீழ் பிடிப்பதால், மரணங்கள் நிகழ்வதை உறுதி செய்தார்.  
நுண்ணுயிரியலின் தந்தை லுாயி பாஸ்டர் கண்டுபிடித்திருந்த தொற்றுநோய் நுண்கிருமி கோட்பாட்டை, 1865ல் அறிந்தார். அறுவைப் புண்ணில் தொற்றும் நுண் கிருமிகளை அழித்து விட்டால், நோயாளியை காக்கலாம் என நம்பினார்.
நகர சாக்கடையில் துர்நாற்றத்தை தடுக்க, கார்பாலிக் அமிலத்தை, துப்புரவு தொழிலாளர்கள் பயன்படுத்துவதைக் கண்டார். அதை ஆராய்ந்த போது விடை கிடைத்தது. அறுவை சிகிச்சை அறையில், கார்பாலிக் அமிலத்தை தெளித்தார். அறுவை சிகிச்சை புண் மீதும், அமிலத்தில் நனைத்த துணியால் கட்டுப்போட்டார். 
இந்த முறையில், முதல் அறுவை சிகிச்சை, குதிரை வண்டியால் காயம் பட்ட, ஏழு வயது சிறுவனுக்கு, ஆகஸ்ட், 1865ல் நடந்தது. இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. உடனே ஆறியது காயம். சீழ் பிடித்து நோய் தொற்றவில்லை. 
ஆராய்ச்சி வெற்றி பெற்றதால் புகழ் பரவியது. ஆனால், அந்த கண்டுபிடிப்பை ஏற்க மறுத்தது மருத்துவ உலகம். பல சோதனைகள் மூலம் கடுமையாக போராடி மீண்டும் மீண்டும் நிரூபித்தார். பின், உலகம் முழுவதும் இந்த முறை பரவியது.  
அறுவை சிகிச்சையில், உடல் பாகங்களில் தையல் போட, ஆட்டு ரோமம் பாதுகாப்பானது என்பதையும் கண்டுபிடித்தார் லிஸ்டர். இதுவும், மருத்துவ உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மருத்துவ துறையில் பயன்பாட்டில் உள்ளது.
லிஸ்டரைத் தேடி பதவி, பரிசுகள் வந்தன. இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் அந்தரங்க மருத்துவராக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்து ராயல் ஆராய்ச்சி கழக தலைவராக பதவி வகித்தார். மதிப்பு மிக்க ஆராய்ச்சி நிறுவனங்கள் அவரை பாராட்டின.  
மருத்துவ ஆராய்ச்சிகளில் உறுதுணையாக, ஆய்வுக்கூடத்தில் உதவிகள் செய்து வந்தார் அவரது மனைவி ஏன்ஸ். நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திடீர் என இறந்தார். துடிதுடித்த லிஸ்டர் சோகத்தில் ஆழ்ந்தார். ஆராய்ச்சி பணிகளில் கவனம் குறைந்தது. சோகம் விலகாமல், 1912ல் காலமானார். 
ஆன்டிசெப்டிக் மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார் ஜோசப் லிஸ்டர். மனித உயிர்களை காக்க, அரும்பணியாற்றிய அவர் புகழ் என்றும் நிலைக்கும்.
குழந்தைகளே... மருத்துவ மேதை லிஸ்டரை மனதில் கொண்டு லட்சியத்துடன் செயல்படுங்கள்.

தெளிப்புக்கருவி!
அறுவை சிகிச்சை அறையில், பாதுகாப்பாகவும், எளிமையாகயும்,கார்பாலிக் அமிலத்தை தெளிக்கும் வகையில் ஓர் இயந்திரத்தை உருவாக்கினார் லிஸ்டர். மிகவும் நுட்பமாக இயங்கி, மெல்லிய துாவலாக பெய்யும் வகையில் வடிவமைத்துள்ளார். 
இதுதான், அறுவை மருத்துவத்துறையில் பெரும் மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்தது. இந்த எளிய இயந்திரம், ஸ்காட்லாந்து, கிளாஸ்கோ பல்கலைக் கழக ஹன்டேரியன் அருங்காட்சியத்தில், இன்றும் பாதுகாப்பாக உள்ளது. மருத்துவ மாணவர்கள், இதை பார்த்து வியக்கின்றனர்.



நினைவுச்சின்னம்!
லிஸ்டரின் பாதுகாப்பான அறுவை சிகிச்சை முறையை, மருத்துவ உலகம் முதலில் ஏற்க தயங்கியது. ஆன்டிசெப்டிக் முறையை பல இடங்களில் நிரூபிக்க வேண்டியிருந்தது. சலிப்பின்றி அதை செய்தார். அவரது காலத்திலே உலகம் முழுவதும் பரவியது. 
லிஸ்டரின் நினைவை போற்றும் வகையில், உலகின் பல இடங்களில் நினைவு சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் முதன் முதலில் ஆன்டிசெப்டிக் முறையை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யும் காட்சியை, ஒரு சிற்ப தொகுப்பாக உருவாக்கியுள்ளனர். ஐரோப்பிய நாடான இத்தாலி, ரோம் நகரில் நினைவு சின்னமாக, அது வைக்கப்பட்டுள்ளது.
 ஆன்டிசெப்டிக்!
கிரேக்க மொழியில் பிறந்த சொல், ஆன்டிசெப்டிக். ஆன்டி என்றால், எதிர் என பொருள். செப்டிக் என்றால் அழுகுதல் என்ற பொருள். அழுகலைத் தடுக்கும் அமிலம் மற்றும் பொருள், ஆன்டிசெப்டிக் மருந்தாக பயன்படுகிறது. தமிழில், அழுகல் தடுப்பு மருந்து என்று கொள்ளலாம்.
பண்டைய போர்களங்களில் வீரர்களுக்கு ஏற்பட்ட புண், குறிப்பிட்ட நாளுக்குள் ஆறாமல், அழுகி துர்நாற்றம் எடுத்ததைக் கண்ட கிரேக்கர்கள், புளித்த திராட்சை ரசத்தையும், வடித்த சாரயத்தையும் பூசினர். அழுகல் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. பின், பிராந்தி, பாதரசம், டர்பண்டைன் போன்றவற்றையும் பயன்படுத்தினர். 
ஐரோப்பிய நாடான ஹங்கேரி மருத்துவர் இக்னஸ் செமல் வெய்ஸ், 1800ல், லைம் குளோரைடு அமிலத்தை பயன்படுத்தினார்; ஆங்கிலேய மருத்துவர் ஜோசப் லிஸ்டர், கார்பாலிக் அமிலத்தை பயன்படுத்தினர். இவர்கள் நவீன மருத்துவத்துக்கு வழி காட்டினர்.
புண் மீது, சுத்தமான தேனை தடவும் வழக்கம், தமிழர்களிடம் நீண்ட நாள் வழக்கமாக உள்ளது. கைகழுவ பயன்படுத்தும் சோப், கைகளில் பூசிக்கொள்ளும், ‘சானிடைசர்’ திரவம் போன்றவையும், ஆன்டிசெப்டிக் வகைகள் தான். இவை வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமி செயல்பாட்டை அழிக்கின்றன. 
தீநுண்மி நோயான கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இன்று நாம் இவற்றை பயன்படுத்துகிறோம்.

No comments:

Post a Comment