Tuesday, 5 May 2026

கனவை திறக்கும் சாவி

கனவை திறக்கும் சாவி வாழ்வில் கனவு என்பது ஒரு புதிர். உளவியல் அறிஞர்களும், மனநல மருத்துவர்களும், இதை ஆராய்ந்து வருகின்றனர். மனப்பிறழ்வு, தற்கொலை, முன்னேற்றம் போன்றவற்றுக்கு அடிப்படையில் ஒன்று மனதின் புதிர் விளையாட்டு. இது பற்றி ஆராய்ந்து வருகிறார், உளவியல் வல்லுனர் எஸ்.சுவாமிநாதன். பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், ‘ஒருவரின் கனவு அவரது வாழ்க்கை சம்பந்தப்பட்டதாவே இருக்கும். ஒருவரின் கனவு விளக்கத்துக்கு திறவுகோல் அவரிடம் மட்டுமே உள்ளது’ என முடிவு கொண்டு ஆராய்ந்து வருகிறார். உள்மனதில் ஏற்படும் ஆர்வம், கொந்தளிப்பு எல்லாம் கனவு மூலமே வெளிப்படுகிறது. அதை புரிந்து மனதை சரி செய்தால் வாழ்க்கை பாதை சீராகும் என கணித்துள்ளார். உளவியல் வல்லுனர் சுவாமிநாதனுடன் நடத்திய உரையாடல்... கேள்வி: கனவுக்கு பொதுவான விளக்கம் சொல்ல முடியுமா... சுவாமிநாதன்: கனவுகளுக்கு பொதுவான விளக்கம் சொல்ல முடியாது. ஒருவருக்கு ஏற்படும் கனவு என்பது, அவர்களின் நிஜ வாழ்வின் பின்னணியைக் கொண்டே அமைந்திருக்கும். உப்பு வணிகர் ஒருவர் மழை பெய்வதாக கனவு கண்டால், அவருக்கு வர இருக்கும் இழப்பை உணர்த்துவதாக அது இருக்கும். அவரது முயற்சிக்கு தடை ஏற்பட்டுள்ளதை குறிக்கும். மாறாக, உழவர் ஒருவர் மழையை கனவு கண்டால், அவரது வாழ்வில் நற்பலன் விளைவிப்பதைக் காட்டும். கேள்வி: இந்த கருத்தை விளக்க முடியுமா... சுவாமிநாதன்: பள்ளியில் படித்த போது, விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு செல்வேன். பெரும்பாலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் முடிந்த முன்பே இது நடக்கும். எனவே, வீட்டுப்பாடம் எழுதுவது, பாடப்புத்தகம் படிப்பது என எந்த இறுக்கமும் அழுத்தமும் இருக்காது. பாட்டியின் அரவணைப்பு என்பதால் மிகவும் சுதந்திரமாக உணர்வேன். பிடித்த உணவுகளை சமைத்து தருவார். உண்பது சொர்க்கமாக இருக்கும். அந்த நாட்களில்தான், கிராமத்தில் திருவிழாக்கள் நடக்கும். அதற்கு யானை கொண்டு வரப்பட்டிருக்கும். அது கிராமத்தில் ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும். புதிய நண்பர்களும் கிடைப்பர். அவர்களுடன் முன்நிபந்தனையின்றி விளையாடுவேன். யானை கட்டப்பட்டிருக்கும் இடத்திலே நங்கூரமிட்டிருப்போம். பாகன்களை காக்காய் பிடித்த வைத்துக் கொள்வோம். பாகன்களிடம் யானைகள் பற்றிய அரிய செய்திகளை, கதையாக கேட்டு அறிவோம். யானைகளுக்கு உள்ள பொதுவான குணங்கள், பாகன்களுடன் பழகுவது, அதனால் வரும் இன்னல்கள் என செய்திகளை அறிய ஆர்வம் காட்டுவேன். அது மகிழ்ச்சியாக தருணம். நான் படித்த பள்ளி அருகே பெரிய காடு இருந்தது. காட்டின் ஓரம் இருந்த கிராமங்களை சேர்ந்த பலர் உடன் படித்தனர். அவர்களுக்கு காட்டிலே, விளை நிலங்கள் இருந்தன. அவற்றில் வாழை, தென்னை, மரவள்ளி கிழங்கு போன்ற பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம். காட்டில் வாழும் யானைகள் கூட்டமாகவோ, தனியாகவோ அந்த தோட்டங்களில் புகுந்து விடும். தோட்டங்கள் அழியும். யானைக் கூட்டத்துக்கு பலியானோரும் உண்டு. அந்த கிராமப்புற மாணவர்கள், நான் யானைகளை ஆவலுடன் பார்த்து மகிழ்வதை வினோதமாக பார்ப்பர். நான் படித்த பள்ளி அருகே ஒரு காவல் நிலையம் இருந்தது. அங்கு பாரம் ஏற்றிய லாரி நின்று கொண்டிருந்ததை ஒரு நாள் பார்த்தேன். லாரியின் முன்னும் பின்னும் மூங்கில்கள் நீட்டியபடி இருந்தன. ஓட்டுனர் குனிந்து சிரமத்துடன் தான், இருக்கைக்கு செல்ல வேண்டியிருந்தது. இது விந்தையாக தெரிந்தது. அது குறித்து காட்டின் ஓரத்தில் வசிக்கும் மாணவர்களிடம் விசாரித்தேன். இது போல் லாரியில் கட்டினால் தான், யானைகளிடமிருந்து ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றனர். லாரியில் பழுது ஏற்பட்டால், உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலைதான் ஏற்படும் என்பதையும் அறிந்தேன். அது மட்டுமின்றி, யானைகள் பற்றிய அச்சமூட்டும் கதைகளும் சென்னார்கள் என் பள்ளி தோழர்கள். ஆண் யானை பருவம் அடையும் போது, மதங்கொண்டால் அதனிடம் இருந்து தப்பும் வழிமுறை பற்றிய சாகச கதைகளை சொன்னார்கள். இதிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ளலாம். நான் யானையை கனவில் காண்பதற்கும், என் பள்ளி நண்பர்கள் அதை கனவில் காண்பதற்கும் வித்தியாசம் இருப்பதை புரிந்து கொள்ளலாம். கேள்வி: இதற்கும் கனவுகளை பகுத்தாய்வதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது... சுவாமிநாதன்: கனவில் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும், பொருளுக்கும், நம் பின்னணி, நமக்கிருக்கும் அபிப்ராயம் பற்றி அடிப்படையிலே விளக்கம் தேட வேண்டும். இந்த தத்துவத்தை பின்பற்றினால் ஒரு உண்மை புலப்படும். நாம் காணும் கனவுகளுக்கு நம்மால் மட்டுமே விளக்கம் தேட முடியும். கேள்வி: அப்படியானால், உளவியல் வல்லுனர், மனநல மருத்துவரின் பணிகள் தான் என்ன... சுவாமிநாதன்: கனவை பகுத்தாய்வு செய்யும் உளவியல் வல்லுனர், நாம் கனவில் கண்ட காட்சிகள், மனிதர்கள், பொருட்களை, நம் நிஜ வாழ்வில் நம்மிடம் என்ன தாக்கத்தை அல்லது பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தன என்றே அறிய முயல்வர். அந்த தத்துவத்தின் அடிப்படையில் நாமே பொருள் தேட வழி ஏற்படுகிறது. உலகில் பல துறைகளில் சங்கேத மொழி பயன்படுத்தப்படுகிறது. சில கிராமங்களில், கறுப்பு, வெள்ளை என சங்கேத மொழியில் குறிப்புடன் பேசுவர். உண்மையில் கறுப்பு என்பது, கள்ளையும், வெள்ளை என்பது சாராயத்தையும் குறிக்கும். மாடு வியாபாரத்தில் விலை விதிப்பதில் இது போல் சங்கேதம் உண்டு. அது பொன்ற சங்கேத சொற்கள் கனவில் வந்தால், அதன் உட்பொருளை அதை பயன்படுத்துவோர் மட்டுமே அறிய முடியும். கேள்வி: கனவுகளை ஏன் பகுப்பாய்வு செய்ய வேண்டும்... சுவாமிநாதன்: உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டால், உடலும், உள்ளமும் இயைந்து செயல்பட வழி கிடைக்கும். அமைதியான உள்ளம் நிறைவான வாழ்வை தரும். வாழ்வில் எடுக்கும் முடிவுகள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அமையாது. வாழ்க்கையின் குறிக்கோள் என்ன... நம் மனநிலைக்கு குறிப்பிட்ட வேலை ஒத்து வருமா... போன்ற கேள்விகளை எழுப்பி விடை அறிந்து செயல்பட முடியும். உறுதியான உடல்வாகு கொண்டவர்களே காவல்துறை போன்ற பணிகளுக்கு உகந்தவர்கள். அவர்களின் உள்ளமும் உறுதியாக தான் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், காவலர்களில் தற்கொலை அதிகம் நடக்கின்றன. உடல், உள்ளம் நலனில் விழிப்புணர்வு பெற்ற மருத்துவர்களும் கூட தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்கு காரணம் என்ன... உடல் நலத்துக்கு கொடுக்கும் அக்கறையை, உள்ள நலத்துக்கு கொடுக்கவில்லை என்பேதேயாகும். கனவுகளை பகுப்பாய்வு செய்வது உள்ளத்தின் நிலையை அறிந்து கொள்வதற்கு தெளிவான ஒரு வழிமுறை. அது சூழலுடன் ஒன்றி வாழ உதவுகிறது.

No comments:

Post a Comment