Monday, 7 January 2019

எதிர்ப்பின் நுட்பத்தை உள்வாங்கும் அணுகுமுறை

‘வெற்றிக்கும் தோல்விக்கும் இடைப்பட்ட வித்தியாசம் ஒரு வெளிச்ச மாறுபாடுதான். அதை கணித்து விட்டால் இலக்கை அடைவது சுலபம்...’ என்பார், பிரபல எழுத்தாளர் ஜிம் கார்பெட். ஒரு காட்டில் இருட்டு அனுபவத்தை அவர் விவரி்ப்பதே அலாதியாக இருக்கும். முற்றிலும் வேறானது அவரது வாழ்வு அனுபவம். வாழ்வின் ஏற்ற இறக்கங்களை அனுமானித்து கடக்கும் அவரது நுட்பம் மேன்மையானது.
அந்த நுட்பத்தை புரிந்து கொண்டால், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், புதிய அனுபவங்களை உணர்த்தும். மென்மை நிறைந்த உலகத்தின் மேன்மைகளை உணர்த்தும். காடு சார்ந்தும், காட்டுயிர்கள் சார்ந்தும் வேட்டை சார்ந்தும், மனிதர்கள் சார்ந்தும் பல புத்தகங்களை, ஜிம் கார்பெட் எழுதியுள்ளார். சில தமிழ் மொழியாக்கம் பெற்றுள்ளன.
ஒரு சுவைக்காக, Jim Carbet எழுதி, Oxford University press வெளியிட்டுள்ள, The Man Eating Leopard of Rudraprayog என்ற புத்தகத்தில் இருந்து, A Wild Boar Hunt என்ற பகுதியை தமிழ் ஆக்கி தந்திருக்கிறேன்.
‘‘...இந்த மலை உச்சி, 12 ஆயிரம் அடி உயரமுள்ளது. இதில் உள்ள கணவாய் வழியாக, காஷ்மீருக்கு செல்லலாம். மலையில், 8000 அடி ஏறியதும் பனிப் புயல் வீசத் துவங்கியது. மேகங்களின் நிறம் மாறியது. என்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; கவனமாக, ஒரு மரத்தைத் தேர்வு செய்தேன். பனிப் புயல் வீசும் போது, கூடவே, பயங்கர மின்னலும் வெட்டும். சாய்வான உச்சி உள்ள பெரிய ஊசி இலை மரத்தின் அடியில் ஒதுங்கினால், மின்னல் தாக்கும் அபாயம் உண்டு. எனவே, வட்டமான உச்சியுள்ள, அடர்ந்த இலைகளைக் கொண்ட மரத்தின் அடியில் ஒதுங்கினேன்.
சுள்ளிகளை சேகரித்து, தீ மூட்டினேன். தலைக்கு மேல் மின்னல் கீறியது; இடி கர்ஜித்தது; புயல் வீசி அடித்தது. கணப்பின் கதகதப்பில் உட்கார்ந்திருந்தேன்.
ஒரு மணிநேரத்துக்குப்பின் புயல் ஓய்ந்தது; சூரியன் தலைகாட்டியது. மரத்தடியிலிருந்து, வெளியே வந்த போது, வெண் தேவதைகளின் தேசத்தில், பிரவேசிப்பது போல் இருந்தது. தரையில் வெண் கம்பளம் போல், பனி போர்த்தியிருந்தது. அதில், முத்துக்கள் ஒளிர்ந்தன. இலைகளும், புல் இதழ்களும் பனியை சுமந்து மின்னின.
ஒரு பாறையை அடைந்தேன். அதைச் சுற்றி நீலவண்ண மலைஅரளி பூத்து குலுங்கி மனதை வருடியது. இமயமலை காட்டு மலர்களில், மிக மிக அழகானது. புயலால் தண்டு முறிந்த நீல மலர்கள், வெண்பனிப் படுக்கையில் சாய்ந்து கிடந்தன. இந்த காட்சி என்னுள் நிரம்பியது.
பிரமிப்பூட்டும் பிர் மரங்கள் அடர்ந்த காட்டினுாடே நடந்து, ஒரு புல் சரிவுக்கு வந்தேன்.
சிறிய மண்மேட்டில், சின்ன விலங்கு ஒன்று வாலை காட்டியபடி நின்றது. விலங்கு படப் புத்தகத்தில், அதை பார்த்திருக்கிறேன். இதன் பெயர் காஷ்மீர் சிவப்பு கலைமான்; அது, தலையை உயர்த்திய போது, பெண்மான் என, அடையாளம் கண்டேன்.
புல்வெளிச் சரிவில், ஒரு பாறை மறைவில் நின்று கவனித்தேன்; புல்மேய மான் குனியும் போது, மெதுவாக அதை நோக்கி நகர்வதும், தலையை உயர்த்தும் போது, அசையாமல் நின்று விடுவதுமாக நெருங்கிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது வலப்பக்கத்தை அது நோக்கியது; அங்கு, அதன் உறவினர்கள் நிற்கலாம் என கணித்தேன்.
எனவே, ஒரு பாறை மறைவில் நின்று கவனித்தேன். இந்த ரக மானை, முதல் முறையாகப் பார்ப்பதால் சிறுத்தை குரல் கேட்டால், அவை நடந்து கொள்ளும் விதம் பற்றி அறிய விரும்பினேன்.
புல் மேய அது குனிந்த போது, சிறுத்தை போல, குரல் எழுப்பினேன். முதல் குரல் கேட்டதுமே, பெண்மான் ஒரு சுற்றுச் சுற்றி  திரும்பி, குரல் வந்த திசையைப் பார்த்தது. முன்னங்கால்களால், தரையை உதைக்க ஆரம்பித்தது. இது, கூட்டாளிகளை விழிக்க வைக்கும் எச்சரிக்கை சமிக்ஞை. ஆனால், கூட்டாளிகள் நகரவில்லை. சிறுத்தையை, பெண்மான் பார்த்தால் மட்டுமே, குரல் கொடுத்து எச்சரிக்கும் என, அறிவேன்.
 நான், பழுப்பு நிற, கோட் அணிந்திருந்தேன். பதுங்கி நின்ற பாறைக்கு வெளியே, என் தோள்பட்டையை மேலும், கீழுமாக அசைத்தேன். பெண்மான், இந்த அசைவைக் கண்டு, சட்டென்று சில அடிகளை முன் வைத்து, கத்த ஆரம்பித்தது. அதன் பொருள், ‘ஆபத்து நெருங்கி வருகிறது; ஓடி வந்து, என்னோடு சேர்ந்து விடுங்கள்’ என்பதுதான்.
இப்போது, அவை சேர்ந்து கொள்வதுதான் பாதுகாப்பானது. முதலில், ஓடி வந்தது ஒரு குட்டிமான். அது பனிமூடிய பாதை மீது, துள்ளித்துள்ளி வந்து, பெண்மான் ஓரம் நின்று கொண்டது; குட்டியைத் தொடர்ந்து, மூன்று ஆண் மான்கள் ஓடி வந்தன. அவற்றைத் தொடர்ந்து, வயதான ஒரு பெண் மான் வந்தது. இவற்றை, 30 அடி துாரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
பெண்மான் கத்துவதை நிறுத்தவில்லை. மற்றவை, காதுகளை, மாற்றி மாற்றி விடைப்பதும், முன்னும், பின்னும் நகர்வதும், சப்தமும், காற்றும் வரும் திசை நோக்கி, சலனமின்றி வெறித்து பார்ப்பதுமாக இருந்தன.
நான் நின்ற இடத்தில் பனி உருகியதால், அசவுகரியமாக இருந்தது. இப்படியே, நின்றால் தடுமன் பிடித்து விடும். பெண்மான் கத்துவதைக் கேட்டு விட்டேன்; ஒரு ஆண்மான் கத்துவதையும் கேட்க விரும்பினேன். ஆகவே, பாறை மறைவில் நின்றபடியே, தோள்பட்டையை உயர்த்தினேன். உடனே, ஆண்மான்கள் கத்தின; பெண்மான்களும், குட்டியும் பல்வேறு தொனிகளில் குரல் எழுப்பின.
நான் அன்று புறப்பட்டதன் நோக்கமே, ஏதேனும் ஒரு மானை வேட்டையாடி, உணவுக்காக கொண்டு வருவது தான். அதற்கு அனுமதி சீட்டு வைத்திருந்தேன். ஆனால், வேட்டையாட அவசரப்படவில்லை. மெதுவாக வெளியே வந்தேன். அவ்வளவுதான்... காஷ்மீர் சிவப்பு கலைமான் கூட்டம் திகைத்து, ஓடி மறைந்தன. புதர்களினுாடே அவை ஓடும் சத்தம்  சடசடத்தது...’’
இது போல், தெளிந்த ஆறாக பாய்கிறது, ஜிம் கார்பெட் எழுத்துக்கள். மேன்மையான வாழ்வு அனுபவத்தை பேசுகிறது; மிகை அனுபவத்தை அல்ல. எதிர்ப்பின் நுட்பங்களை உள்வாங்கும் வழிமுறைகளை உணர்த்துகிறது. இதை வாசிக்க கிடைக்கும் வாய்ப்பு, வாழ்வின் பெரும் அனுபவப் பேறு. மின்நுால் வடிவிலும், ஜிம் கார்பெட் புத்தகங்கள், இணையத்தில் கிடைக்கிறது.



Thursday, 11 October 2018

தங்க அரளியும் தலைக்கனமும்

இந்தமுறை, புன்னார்குளம் வழியை தேர்வு செய்தேன். வழக்கமாக செல்லும் பொற்றையடி வழியை துறந்தேன். இரண்டு வழியிலும் ஆலடிவிளையை அடைய நடை பயண துாரம் கிட்டத்தட்ட, 1 கி.மீ., தான் வித்தியாசம்.
அதிகாலையே ரயில்நிலையத்துக்கு, வந்துவிட்டார் எழுத்தாளர் கென்னடி. அவரது வாகனத்தில், மயிலாடியை நெருங்கும் போது, ரிங்கல்தெளபே பள்ளயை ஒரு போட்டோ எடுக்கும் ஆசை ஏற்பட்டது.
முகப்பை படம் எடுத்துக் கொண்டிருந்த போது, என்.எஸ்.எஸ்., முகாமிலிருந்த ஆசிரியர் வந்து கேள்வி கேட்டு கதவை திறந்துவிட்டார்.
ஆறு ஆண்டுகள் தவறாமல், இந்த வளாகத்தில் திரிந்துள்ளேன். காலம் எல்லாவற்றையும் சிதைத்திருந்தது. அடையாளங்கள் அழிந்திருந்தன. பல மங்கியிருந்தன. முகப்பு, வளாக புல்தரை, தோட்டங்கள்,  உருவாக்கிய சிறுகுன்றுகள், நட்ட மரங்கள், வழியை ஒழுங்கு செய்து, வீச்சு அரிவாளுக்கு கட்டுப்பட்டு நின்ற தங்க அரளிகள் எல்லாம் முற்றாக அழிந்திருந்தன.
பனங்கை தாங்கிய ஒட்டுக்கட்டடம் சிதைந்து விரிசல் விழுந்து மழையில் கரைந்து நின்றது. பழ மரங்கள், நிழல் மரங்கள் எதுவும் இன்றி காட்சி மாறிவிட்டது. மனதில் தங்கியுள்ள நிழல் அந்த வளாகத்தில் இல்லை. பதற்றப் பட ஒன்றுமில்லை.
ஒருமுறை வளாகத்தை சுற்றி வந்தேன். வாசல்கள் இடம் மாறியிருந்தன. அப்போதைய தலைமை ஆசிரியர் ஒய். ரெஜினால்டு டேவிஸ் அறை அருகே வந்தோம்.
எங்களுக்கு வழிவிட்ட ஆசிரியர் நெகிழ்வாக இருந்தார். எளிமையாக உரையாட முடிந்தது. ஒய். ரெஜினால்டு டேவிஸ் என்ற ஒய்.ஆர்.டி., பற்றி அறிந்திருந்தார்.
மண் கூஜாவை துாக்கியபடி, ஒய்.ஆர். டி., கையலம்பும் பகுதியில் அலங்கார செடிகளைக் காணவில்லை. கட்டாந்தரையாகி வெறுமை வடிவமாக கிடந்தது.
ஒய்.ஆர்.டி., காலமாகிவிட்டதாக சொன்னார் அந்த ஆசிரியர்.
பேச்சு அவரது நேர்மை, உழைப்பு, காலந்தவறாமை என, திரும்பியது. இந்த பண்புகளே, பொது சமூகத்தை விட்டு அவரை விலக்கியதாக குறிப்பிட்டார். சரியான கணிப்பாக பட்டது.
மனம் அந்த பக்கம் விலகி நின்று பார்த்தது. பெருங்கருணை, நேர்மை போன்ற அறங்கள், சில நேரம் அகந்தையாக கட்டமைத்துக் கொள்வதை புரிந்து கொள்ள முடிந்தது. சற்று நேரம் மவுனமாக கட்டந்தரையை பார்த்துக் கொண்டிருந்தேன்.
சமயம் பரப்ப வந்த ஐரோப்பியர்களின் மனநிலையாக அதை கணிக்க முற்பட்டேன்.
ஆப்ரிக்கா கண்டத்தில், சமயம் பரப்ப போன ஐரோப்பியர்களின் அன்பை, நெகிழ்வை, நேர்மையை, அறத்தை, செயலை  தத்துவரீதியாக, நுட்பமாக அணுகியதால், சிதைவுகள் (Things fall apart by Chinua Achebe) என்ற மிகப் பிரமாண்ட காவியம் உலகுக்கு தந்தார் சீ்ன்வா ஆசிபி. ஒரு புராதன சமூகத்தை, சமயம் பரப்ப வந்தவர்கள் அழித்த அவலத்தை அது விளக்கியது.
சமயம் பரப்புதலின் சூழ்ச்சியை வெளிப்படுத்தியது அந்த நுால். உலகின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக சிலாகிக்கப்படுகிறது.  ஆனால், இங்கு அந்த வாய்ப்பு ஏற்படவில்லை. கண்ணீருடன் கூடிய மன்றாட்டாக தங்கி விட்டது. பாவிகள், மீண்டும் மீண்டும் இந்திய சமூகத்தில் பிறந்து கொண்டிருக்கின்றனர். சாத்தானை நோக்கி, ஐரோப்பிய பாதிரிகள் எய்த அம்புகள், இப்போது நம் சகோதரர்கள் கையில். பாவிகள் பிறந்து கொண்டே இருக்கின்றனர். சாத்தான்களை நோக்கி அம்புகளை எய்து கொண்டே, அன்பையும், கருணையையும் கற்றுத் தருகிறார்கள்.
ஐரோப்பிய ஆண்டவரின் அன்பையும், நெகிழ்ச்சியையும் பெற, சொந்த மண் மண்டியிட்டு, அடிமையாக கிடக்கிறது. இந்த அவலம் இன்னும் உறைக்கவில்லை. எல்லாவற்றையும் இழந்தும் ‘பாவம்’ செய்து கொண்டே இருக்க வேண்டிய நிலை. எழுத்தறிவுக்கு விலையாக பாவமூட்டை முதுகில் ஏற்றப்பட்டது. எந்த சிந்தனை, இந்த பாவமூட்டையை இறக்கி வைக்குமோ... தெரியவில்லை.

சுவாரசியமற்ற தோல்வி

கல்லுாரி மாணவ, மாணவியருக்கான இதழியல் பயிலரங்கு ஒன்றை, 2018 ஆகஸ்ட் 15 ம் தேதி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் என்ற  பிரபல இலக்கிய அமைப்பு தக்கலையில் நடத்தியது. இதில், பேச  நண்பர் மூலம் என்னையும் முன்பதிவு செய்திருந்தனர். மாணவர்கள் என்றதால்,  ஆதாயம் வேண்டாமல், சொந்த செலவில் வருவதாக மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன்.
நிகழ்ச்சிக்கு முந்தையநாள், தாயார் மரணம். கலந்து கொள்ள முடியுமா என்ற குழப்பம். ஒப்புக் கொண்ட நிகழ்ச்சியை சாக்குப் போக்கு சொல்லி தட்டிக் கழிப்பது என் வழக்கமல்ல. ‘கண்டிப்பாக பங்கேற்பேன்’ என, நண்பரிடம் சொல்லிவிட்டேன்.
நிகழ்வு அன்று காலை கடும் மழை. கிராமத்தில், போக்குவரத்து தடை பட்டிருந்தது. சிறு மழையில் நடந்தும், பெருமழைக்கு ஒதுங்கியும் கிட்டத்தட்ட, 3 கி.மீ., கடந்து, பஸ் பிடித்தேன். நாகர்கோவிலில் பஸ் மாறினேன். குறிப்பிட்ட நேரத்தில் போய் சேர வேண்டுமே என்ற கவலை. வாக்கை காப்பாற்றிவிடுவோமா என்ற பதைபதைப்பு.
ஒருவழியாக, குறிப்பிட்ட நேரத்தில் சென்றுவிட்டேன். உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர், நீட்டி, முழக்கி பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். சுயபுராணத்தை, முறுக்கல், சாகசங்களுடன் பட்டியலிட்டு முழங்கிக் கொண்டிருந்தார்.
கீழ் நோக்கு (Top to bottom) தொடர்பியல் முறையிலான கூச்சல். தன்னை முன்னிலைப்படுத்தி ஆதாயம் தேடும், வாய் வீச்சுடன் பாசாங்கான உடல் மொழி. குடிசை இதழ் ஆசிரியர் தோழர் இரத்தினசுவாமி, இது போன்ற உரைகளை, ‘வயிறு வளர்க்கும் வாய்கள்’ என்பார். தொடர்ந்த உரைகளும் வயிறு வளர்த்தன.
தவறான இடத்துக்கு வந்துவிட்டது போல் உணர்ந்தேன். பயிலரங்குக்கான தொடர்பியல் முறை இதுவல்ல. விளக்கமுறையும், கலந்துரையாடலுமே, பயிலரங்கில் பலனளிக்கும். அதுவும், மாணவ, மாணவியரிடம் மிகுந்த பொறுப்புடன், எளிமையாக கலந்துரையாடினால் மட்டும் தான், சிறிது பயனை எதிர்பார்க்கலாம்.
எனக்கு கலந்துரையாட மட்டுமே தெரியும். கதைகளை அடித்து விட்டு,  உடல் மொழியால் கவரத் தெரியாது.
நான், ஒரு வகை பணியை செய்கிறேன். பழகினால், அதை எவரும் செய்யலாம். இந்த தொழிலில் கிடைக்கும் அனுபவம் கொஞ்சம் சுவாரசியமானது. அதை, மெருகேற்றி பிரஸ்தாபிப்பதன் மூலம், ஒரு பயிலரங்கின் லட்சியத்தை நிறைவு செய்ய முடியாது.
என்முறை வந்தது. விளக்கமுறையில் கலந்துரையாடலுக்கு, பங்கேற்பாளர்களை தயார் செய்யும் விதமாக துவங்கினேன். நாய் மூத்திரமடித்த கல்சாமி போல, பித்துக்குளிகளை இயல்புக்கு கொண்டுவர எடுத்த முயற்சி எதுவும் பயனளிக்கவில்லை.
கிட்டத்தட்ட, 60 நிமிடங்கள், உத்திகளை மாற்றி மாற்றி தோற்றுப்போனேன். ஒரு கல்லைக் கூட, அசைக்க முடியவில்லை. ஆமாம் சாமிகள், தலையாட்டிகள்... வெறித்துக் கொண்டிருந்தன. பார்க்க கசப்பாக இருந்தது. முயன்று சோர்ந்து தோற்றுக் கொண்டிருந்தேன்.
பங்கேற்பாளர்களின் கண்கள் பிரியாணியை தேடிக்கொண்டிருந்தன.
இழப்பின் பலவீனம் ஒருபுறம். நண்பர்களின் பிரசங்கம் கேட்ட அயற்சி மறுபுறம். சுவராசியமற்ற தோல்வியால் உரையாடலை முடித்து திரும்பினேன். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள், ‘ஸ்பான்சர்’ வழங்கிய பிரியாணியை, விளம்புவதில் குறியாக இருந்தனர்.
கடும் பிரயாசப்பட்டு வந்திருக்க வேண்டாமோ என்று என்னை ஒருமுறை கேட்டுக் கொண்டேன்.  உணவை மறுத்து அயர்ச்சியுடன் மழைத்துளிகளுக்குள் புகுந்து நடந்தேன், நேற்றை விட துயரமான மனதுடன்... எனக்கு பசிக்கவே இல்லை.
உழைப்பும், அனுபவமும் மலிவாக கிடைப்பதாக கணக்குப் போட்டு, ஸ்பான்சர்களை, தோழர்கள் தேடுவதாக எண்ணத் தோன்றுகிறது. பயிலரங்கின் பொருள் தெரியுமா உங்களுக்கு..

Thursday, 6 September 2018

கடுவாய் அனுப்பிய துண்டு சீட்டு

பள்ளிக்கு, காலை, 8:00 மணிக்கு முன்பே கடுவாய் வந்துவிடும். வளாகத்தை நிதானமாக அளந்து, செடி, கொடி, மரம், வழி அரண் அரளிகள், கிணற்றடி, தோட்டம், கக்கூசுகள், ஸ்டாப் ரூம், வகுப்பறை, ஆய்வகம் என, கூர் நோக்கி, கண்காணிக்கும். பின், அலுவலக அறைக்கு சென்று அமரும். 
பள்ளி, ‘ப’ வடிவ கட்டடத்தில், தென்கிழக்கு மூலையில், அந்த அறை இருந்தது. எப்போதாவது, வகுப்பறைகள் இரைச்சலால் அதிர்ந்தால், நாற்காலியின் இழுவை ஒலி கேட்கும். அவ்வளவுதான்... அனைத்தும் அடங்கிவிடும். அமைதி துலங்கி நிற்கும்.
பள்ளி வளாகத்துக்குள் வர இரண்டு வழிகள். இரண்டும் எதிர் திசைகளில்... அவற்றை, கண்காணிக்கும் பாணி வியப்பூட்டும். புதிதாக நுழைபவரை, மிக எளிதாக கண்டுபிடித்துவிடும் திறன்மிக்க கடுவாய் அது.
மயிலாடி, ரிங்கல் தெளபே பள்ளியில், 6 ம் வகுப்பு சேரும் முன், அச்சுறுத்தலோடு அறிமுகமான பெயர்தான் கடுவாய். சேர்ந்த பின், அந்த பெயர் மறைந்து, ஒய்.ஆர்.டி., என்பது, மனதில் நிறைந்தது. தலைமை ஆசிரியர் ஒய். ரெஜினால்டு டேவிஸ் பெயர் சுருக்கம்தான் அது. 
ஆறு ஆண்டுகள்... அவரது ஆளுமையைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஒழுக்கத்தை, நேர்மையை, எங்கள் வாழ்வுடன் இணைக்க, அவரது நடத்தை, முன் நிபந்தனையாக இருந்தது. என் அப்பா கற்றுத்தந்தவறை, வலுவாக்கிய தளம் அவரது. 
காலை, 8:00 மணிக்கு முன் துவங்கி, இரவு, 7:00 மணிக்கு பின் முடியும் அவரது பணி. எங்கேயும் இருப்பார். எது நடந்தாலும் கவனத்துக்கு சென்றுவிடும். கல்வி சுற்றலாக்களில் பங்கேற்க மாட்டார். ஆனால், புறப்படும் போதும், முடியும் போதும் அவர் இருப்பார். ஆசிரியர்களுடன், அரட்டை அடிக்கமாட்டார்; வளர்ச்சி உரையாடல் நடத்துவார்.
அது, 9 ம் வகுப்பில் என்று நினைவு. அதிகாலையில், அப்பாவுடன் வயலுக்கு சென்றுவிட்டேன். பருவமழை காலம். மேகம் கவிந்திருந்ததால், நேரம் சரியாக தெரியவில்லை. தாமதம் ஆகிவிட்டது. சாலையில் நின்று பள்ளி வளாகத்தை கவனித்தேன். அவர், கண்ணில் படவில்லை.
உறுதி செய்தபடி, ஓரமாக நகர்ந்து, வகுப்புக்கு போய்விட்டேன். சற்று நேரத்தில், பீயுன் ஒரு துண்டு சீட்டை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்தார். தலைமை ஆசிரியர், என்னை அழைத்த சீட்டு அது. 
பயந்து நடுங்கியபடி, அவர் அறைக்குப் போனேன். அவரது கைகடிகார சங்கிலி அவிழ, அவிழ அடியும், குத்தும் வாங்கி வந்தேன். மதிய இடைவேளைக்கு பின் மீண்டும் அழைப்பு. நடுங்கிக் கொண்டே போனேன். 
‘வயலுல இருந்து தானே வந்தே... பின்னே நேரா கிளாசுக்கு போக வேண்டியதுதானே. ஏன் ஒளிச்சே...’ என, நெகிழ்ந்தார். ஒழுக்கமும், நேர்மையும், நிர்வாகத்திறனும், காலந்தவறாமையும், அழகியலும்... சொல்லிக் கொண்டே போகலாம் கீர்த்தியை.
பள்ளி வளாகத்தில், அழகிய வடிவமைப்புடன் தோட்டம் இருந்தது. தங்க அரளி செடிகளால் வேலி அமைத்து, ஒழுங்குபடுத்தி, மாணவர்களே பராமரிக்கும் வகையில், செயல் திட்டம் உருவாக்கியிருந்தார். 
விடுப்பு ஆசிரியர் வகுப்புக்கு, வழக்கமாக அவர் பொறுப்பேற்பார். வளாகத்தில் ஒரு மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்துவார். வகுப்பு, இயல்பாக, இயற்கையாக அமைந்திருக்கும். செயல்முறையாக  அமையும். 
காக்கை பறப்பதை பார்... வண்ணங்களை கவனி... கூர்ந்து நோக்கும் போது அலகை நோக்கு... என்ற பாணியில் பாடம் நடக்கும். மண்வெட்டியின், பிடி முனைக்கு, ‘வெப்புதாங்கி’ என்ற பெயர் இருப்பதை, உணர்த்தியது ஒரு மரத்தடி வகுப்புதான். ஒரு விவசாயின் மகனாக, மிகவும் வெட்கப்பட்ட தருணம் அது. 
மொழி, சூழல், பண்பு, நடத்தை, அறிவியல், இயற்கை, இலக்கியம் என, சாதுார்யமாக தொட்டு செல்லும் அந்த பாடம். மனசில் உணர்த்தி, நேரத்தை கலகலப்பாக கரைக்கும்.
ஒரு ஆசிரியர் தின நாள். 1987 என, நினைக்கிறேன். நல்லாசிரியர் விருது நிகழ்ச்சி, சென்னை, தியாராயநகர், சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. செய்தி சேகரிக்க, சென்றிருந்தேன். 
முன் வரிசையில், நிருபர்களுக்கான இடம். அதன் அருகே நின்று, இருக்கைகளை பார்த்துக் கொண்டே வந்தேன். ஒன்று கவனத்தில் நின்றது. அவர்தான்... உறுதிப்படுத்திக் கொள்ள, செய்தி குறிப்பை வாசித்தேன். பெயர் இருந்தது. 
விருது வாங்கிக் கொண்டு, இறங்கி வந்தார். அவர் முன் விழுந்து வணங்கினேன். மொத்த நிகழ்வும் ஒரு கணம் நின்று, கவனம் எங்கள் மீது திரும்பியது. என்னை இறுக அணைத்துக் கொண்டார். பார்வையில், ‘யார் நீ...’ என்ற கேள்வி. கற்ற காலத்தை சொல்லி, அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
மிகவும் நெகிழ்ந்து, மகிழ்ந்தார். 
பின்னர், இருமுறை நாகர்கோவில், கிறிஸ்டோபர் நகரில் அவரது வீட்டில் சந்தித்து, உலாவலுடன் நீண்ட உரையாடல் நடத்தியுள்ளேன். 
ஆசிரியர் தினம் மட்டும் அல்ல... நேர்மை, ஒழுக்கம், நிர்வாகம் பற்றிய தகவல்களை பகிரும் போதெல்லாம், என் தலைமை ஆசிரியர் ஒய். ரெஜினால்டு டேவிஸ் அவர்களை மேற்கோள் காட்ட தவறியதில்லை.
#mylaudy #ringletaubeshcool #YRD

Wednesday, 22 August 2018

நிறைவேறாத உரையாடல்...

அவரது பெயரில், கொஞ்சம் நிலம் உண்டு. இரண்டு பகுதிகளில்... வயல், தென்னந்தோப்பு, மாந்தோட்டம் என்று... தோவாளை பாசனக்கால்வாய், மெயின் மடை வெள்ளம் பாயும். ஒன்றில், மரியம்மாள் மகள் செல்லத்தாயி என்றும், மற்றொன்றில் ராஜமணி மனைவி செல்லத்தாயி என்றும் பத்திரம் பதிவாகியிருந்தது. ஒருமுறை அப்பாவிடம் இது பற்றி கேட்டேன். முதல் சொத்து, அம்மாவின் பெற்றோர் போட்ட தங்கநகைகளை விற்று வாங்கியதால், தாயாரை துணைப் பெயராக பதிவு செய்ததாக கூறினார்.
முதல்வராக கருணாநிதி, 1989 ல் பதவி வகித்த போது, குடும்ப சொத்தில், பெண்களுக்கு உள்ள உரிமையை சட்டமாக்கினார். அதையொட்டிய நாளில் ஒரு முறை ஊர் சென்றிருந்த போது, அந்த சட்டப்படி சொத்து பிரிப்பதை என் பெற்றோர்  உறுதி செய்தனர். அப்பா மரணத்துக்குப்பின் அந்தப் படியே, பிரித்தோம். என் உடமையும் அம்மா நிர்வாகத்தில் இருந்தது.
பிச்சிகுடியிருப்பு அம்மாவின் சொந்த ஊர். பிச்சி என்பது, ஒரு வகை குற்றுச் செடி. விரும்பத்தக்க வாசனையுடன் பூக்கும். எங்கள் குடும்பங்களில் சுப நிகழ்வு, வழிபாடு போன்றவற்றில் முக்கிய இடம் பெறும். சென்னை வாசிகள் ஜாதிமல்லி என்பர்.
ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, லண்டன் மிஷன் அமைப்பு சார்பில், 1800 களில், திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு புராட்டஸ்டாண்டு கிறிஸ்தவ மதம் பரப்ப வந்த, ஜெர்மனி பாதிரியார் வில்லியம் தோபியாஸ் ரிங்கல்தெளபே, இந்த ஊர் பெயரை, ஜேம்ஸ்டவுண் என மாற்றினார். மதம் மாறியதில், என் அம்மாவின் மூதாதையர்களும் உண்டு. அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய, ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில்தான், ஜேம்ஸ்டவுண் தேவாலயம் உள்ளது.
சில தலைமுறைகளுக்கு பின், என் தாயார் மூதாதையர் குடும்பம், மீண்டும் பாரம்பரிய வழிபாட்டு முறைக்கு திரும்பியது. ஆனாலும் பெயர் ஒட்டுகளில், கிறிஸ்தவம் படிந்தது. அது இன்னும் நீங்கவில்லை. என் அம்மா வழி குடும்பத்தில், இப்போதும், ஏசுதாசன், ஞானமணி, அமர்தியா போன்ற பெயர்கள் உண்டு. என் தாய்மாமன் மகள் பெயர் மரிய ஜூலியட். அவர்கள் கிறிஸ்தவ வழிபாட்டு முறையை கடைபிடிப்பவர்கள் அல்ல.
திருமலய பெருமாள்... (ஜாதி ஒட்டு உண்டு) – மரியம்மாள் தம்பதிக்கு, ஒரு மகன்; இரண்டு மகள்கள். முதலாமவர் திருமணி (ஜாதி ஒட்டு உண்டு). அஞ்சுகிராமம் ஊராட்சி தலைவராக பணியாற்றிய போது, பொது சேவையில் கொஞ்சம் சொத்தை இழந்தவர். அடுத்தது பொன்னம்மை. கடைக்குட்டி என் தாயார் செல்லத்தாயி.
பிச்சி குடியிருப்பு ஊரில் திறன்மிக்க நடுத்தர வேளாண் குடும்பம். சோளம், கேழ்வரகு, தெங்கு, காய்கறிகள், வாழை, உள்ளி, கொல்லமிளகு, உளுந்து, தட்டைப் பயிறு, பச்சை பயிறு என பல்பயிர் சாகுபடி செய்வர். திறன்மிக்க உழவு மாடுகளும், கவலை மாடுகளும், கறவை மாடுகளும் உண்டு. வசதியான நீண்டு அகன்ற சுற்றுச்சுவருக்குள் வீடும் சுற்றிச்சூழ களமும் விஸ்தாரமானது.
தேவாலயத்தை நோக்கி தெற்கு முகமாக, எழில்மிக்க பூந்தோட்டம். ஐரோப்பிய பாணியிலானது. ஒரு மருங்கில் பன்னீர் மரம். அது, பூத்து தெளிவது மனப்பரப்பில் மகிழ்வை தரும். மறு மருங்கில் வளர்ந்த ஒற்றை பெருந்தடியுடன்  கொல்லாமரம். அதாவது முந்திரி மரம். அதையொட்டி பூவரசு.  சுற்றுச்சுவரை ஒட்டி, தோவாளை பாசனக்கால்வாய் வெள்ளம், மடையில் விழுந்து கிளைக்கால்வாயில் புகுந்து ஓடும். கால்வாயில் சிறுநண்டு, நத்தை, பொத்தி, கணியன், மானா என, சிறு உயிர்கள் களிநடனம் புரியும். மதிலுக்கு அப்பால், தோவாளை பாசனக்கால்வாய். பருவ காலங்களில் பூந்துாவலுடன், நீர் வீழ்ச்சி பெறும். காற்று சுழன்றடிக்கும் போது, நீர் எழுச்சியாகி முயங்கித்திரியும். நீர் வீழும் போது மெல்லிய ஓசை இதமளிக்கும்.
இந்த சூழலில் பிறந்து வளர்ந்தவர், என் தாயார்.
திருச்செந்துார் அருகே குட்டம் ஊரில் இருந்து, 18 ம் நுாற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. அவற்றில் ஒன்று, சாமிவேல் மகன் ஒற்றைவீரன் குடும்பம். அந்த குடும்பத்தைச் சேர்ந்த நாராயணன்... ( ஜாதி ஒட்டு உண்டு) – தாமரை வடிவு மகன் ராஜமணி. இவர் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அளவிலான விளையாட்டு வீரர். கபடி, கிளிதட்டு போன்ற குழுவிளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்றவர். சார்ந்த அணிக்கு பதக்கங்களை குவித்தவர். இவருக்கு செல்லத்தாயியை திருமணம் முடித்தனர்.
என் தாய்மாமன் திருமணி, திராவிட அரசியல் பிரமுகர். அவரது அரசியல் தொடர்பு, திருவிதாங்கூர் மண்ணில், கட்சி, ஜாதி அரசியலைத் தாண்டி பலருடன் நெருங்கிய நட்பாக மலர்ந்திருந்தது. அதன் விளைவாக நிச்சயமானதுதான் இந்த திருமணம்.
...1

Saturday, 11 August 2018

டூப்மாஸ்டரும் கருணாநிதியும்

அவர், குட்டையானவர். சைக்கிளில் அமர்ந்தால், பெடலை மிதிக்க கால் எட்டாது. நடக்கும் போது, ‘சடக்... புடக்...’ என, குதித்து செல்வது போல் தோன்றும்.  நேர்த்தியாக தலைமுடியை வாரி சிங்காரித்திருப்பார். பெயர் தவசி. இப்படி, கூப்பிட்டால் அவரை யாருக்கும் தெரியாது. ஒரு, நிரையசை  சொல்லை ,பெயரின் பின்னொட்டாக சேர்க்க வேண்டும். அது சாதி அடையாளம். அதனால் இங்கே தவிர்த்துள்ளேன்.
சிறுவனாக இருந்த போது, தவசியிடம் ஏகப்பட்ட கதைகள் கேட்டுள்ளேன். பின்னர், சென்னையில் தமிழ் சினிமாவுக்கு கதை சொல்வோரை பார்த்திருக்கிறேன். அவர்கள், தவசியிடம் மண்டியிட்டு பாடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
அவ்வளவு அற்புதம்... நேர்த்தி... காட்சிமயம்... வியப்பை வர்ணித்துக் கொண்டே போகலாம்.
திரு. கருணாநிதி, 70 களில் முதல்வராக இருந்த போதுதான், கதை புனையும் ஆற்றல் அவருக்கு வாய்த்தது. மாயா யதார்த்த வாதம் எல்லாம் அத்துபடி. அவர் கதைக்குள் தமிழ் மண்டியிடும்.
 அது, நெல்லுக்கு,  லெவி விதித்திருந்த காலம். ஏழை சிறு விவசாயிகளை, அதிகாரிகள் வதைப்பர். வன்கொடுமை செய்வர்.  வெளிச்சந்தையில், நெல் விற்க அனுமதிக்காமல், பிடித்து பறிப்பர். முறையாக எடை போடாமல் குறைந்த விலையில், கொள்ளையடிப்பர்.  விற்க மறுப்பவரை, பதுக்கல்காரன் என்று வழக்குப் போட்டு வதைப்பர். இழுத்து செல்வர்.
பத்தயத்துக்குள் நெல் போட முடியாது. பதுக்கல் என ஏகடியம் செய்வர். வீட்டுக்குள் புகுந்து சோதனை என்ற பெயரில் அடாவடி செய்வர். பெண்களை தரக்குறைவாக பேசுவர். அடாவடியில் நேரடியாக நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
ஒரு இடத்தில் இருந்து கூலி நெல்லைக் கூட கொண்டு வரமுடியாது. எங்கள் ஊர் விவசாய கூலிகள், நாஞ்சில் பகுதியில் உள்ள வடமேதி எனப்படும் கடுக்கரை, பூதப்பாண்டி போன்ற ஊர்களில் நெல் அடிப்புக்கு போவர். கிடைக்கும் கூலி நெல்லை, ஊருக்கு எடுத்து  வரமுடியமல் தவித்து அலைவர். பதுக்கல், கடத்தல் என, அதிகாரிகள் அடாவடி செய்து பிடுங்கிக் கொள்வர். பின், லஞ்சம் வாங்கி விடுவிப்பர். விவசாயிகள் கண்ணீரில் கரைந்த காலம் அது.
இன்றைய பொய், நாளைய வரலாறு என்று பொற்கால ஆட்சி புரிந்தவர்கள் பதிவில் இவை இடம் பெற வாய்ப்பு இல்லை. அரசின் கெடுபிடியின் ஊடாக பல நிகழ்வுகள் நடப்பது சமூக யதார்த்தம். அப்படியானது தான் தவசியின் கதையும்.
சரி... கதைக்கு வருகிறேன். அவரது அய்யா பனைத் தொழில் செய்வார். தவசிக்கும் அதைக் கற்றுக் கொடுத்தார். கள்ளமில்லாமல் பிழைக்க வேண்டுமே.
 குட்டையான தவசி, பெரிய பனைகளில் கைபோட்டு ஏறுவதில் சிரமப்பட்டார். உள்ளங்கை, நெஞ்சம் அதாவது மார்பு, கால் கரண்டை, உள் முட்டி போன்ற உறுப்புகள் காய்த்து வெடிப்பேறுவதை, சகிக்க முடியாமல் தவித்தார்.
சீவி சிங்காரிப்பதில் ஆர்வம் மிகுந்த தவசி, விடுபட முயன்றார். சிறு விவசாய பணிகள் செய்தார். கடுத்த வேலை செய்ய உடல் ஒத்துழைக்கவில்லை. எங்கு வேலைக்கு போனாலும் பேச்சு... நயமான பேசு்சு...
நெல் சாகுபடி செய்யும் சிறு விவசாயிகள், விலைக்கு அரிசி வாங்குவதை, கீழ்த்தர நடவடிக்கையாக பார்த்தனர். உணவு அரிசிக்காக, மாதத்தில், மூன்று முறை என, முறை வைத்து, புழுக்கிய நெல்லை அரைக்க எடுத்து செல்வர். அந்த அரிசியைத்தான் சாப்பிடுவர்.
லெவி அமலில் இருந்த நாட்களில், அரவை ஆலைக்கு எடுத்து செல்லும் நெல்லையும், அதிகாரிகள் புடுங்கிப் போய்விடுவர். இது, ‘வேலைக்கள்ளன்’ களுக்கு பிழைக்க வாய்ப்பாக அமைந்தது.
தவசிக்கும் இது வாய்ப்பாக, வாகாக அமைந்தது. அரைக்க கொண்டு செல்லும் நெல்லை, விற்று விட்டு அதிகாரிகள் பறித்து சென்றதாக, நாடகமாடுவார். அதற்காக, மிக நேர்த்தியாக ஒரு கதையைத் தயாரிப்பார்.
அந்த கதையில், அவர்தான் முக்கிய கதா பாத்திரம். எடுத்து சென்ற நெல்லை, மீட்க எடுத்த சிரமங்கள் கதை வர்ணனையாக கரையும். அது பெரும் பகுதியைப் பிடித்துக் கொள்ளும். ‘லே... பறிக்க வந்தவன் சீப்புல வந்தானா...  சக்கடா வண்டியிலா... மக்கா’ என்று, மடக்க முயல்வோரை  சுவாரசியமான சொல்லாடல்களால் திசை திருப்பி விடுவார். விவரணையுடன்  வர்ணிப்பார். திருப்பங்களை நேர்த்தியாக கோர்ப்பார். ஆனால், மறுநாளே குட்டு வெளுத்துவிடும். அவருக்கு, என் அப்பா, ‘டூப்மாஸ்டர்’ என்று பெயர் வைத்திருந்தார். அது பிரபலமாயிற்று.
உடல் உழைப்பை தாங்க இயலாமல் இரண்டு முறை, கால்போன போக்கில், தலைமறைவாகிவிட்டார். ஒருமுறை கோவையிலும், மற்றொரு முறை மதுரையிலும் இருந்து அழைத்து வந்தனர். அவர், புலி வேட்டையாட போனக் கதையை பின்னர் ஒருமுறை சொல்கிறேன். 

Saturday, 4 August 2018

பிரசவம் ரோட்டிலா... வீட்டிலா...

அது, 1996 என்று நினைக்கிறேன்.  போலீஸ் செய்திகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்தேன். உயர்  அதிகாரிகளின் கோபப்பார்வைக்கு உள்ளாகியிருந்தேன்.  பலருக்கு தீரா பகைமை.
என், ‘தகவல் மூலம்’ எல்லாம், அதிகாரிகள் வீட்டு அடுப்படியும், காரோட்டிகளும் தான். வீட்டுப்பணிப்பெண்ணுக்கு, தோசை சுட கரண்டியை கையுடன் பிடித்து அனுபவப் பாடம் எடுப்பது, ஒரே மாதிரி உடை அணிந்த மப்டி பெண் போலீஸ் சூழ, மன்னர் வேடத்தில் தியேட்டரில் ராஜாங்கம் நடத்துவது, என பல தினுசான அதிகாரிகளை பார்த்திருக்கிறேன்.  தகவல்கள் அவ்வப்போது, என் பேஜர் கருவியில் ஏறும். அவை, டீகடை பெஞ்சில் பேசப்படும். பெரிய செய்தியாவதும் உண்டு.
அது ஏப்ரல் மாதம். கொடும் வெயில். ஒரு முற்பகலில், கோடம்பாக்கம் போலீஸ்நிலையத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணை கண்டேன். ஒரு போலீஸ்காரரிடம் விசாரித்தேன். ஆறுமாதமாக, நடையாய் நடப்பதாக சொன்னார். விவரம், விலாசம் பெற்று கொண்டேன்.
 அன்று, பணியை முடித்துக்கொண்டு, இரவு, 8:00 மணி அளவில் வடபழனி கங்கையம்மன் கோவில் தெரு சந்தில் உள்ள அந்த வீட்டுக்கு சென்றேன்.
அது ஒரு பீகாரி குடும்பம். தந்தை சண்டை போட்டுக் கொண்டிருந்தார். கர்ப்பிணியை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. தந்தையின் குரல் இயலாமையாக வெளிப்பட்டது. சூழலை ஒருவாறு ஊகித்தபின், அறிமுகப்படுத்திக் கொண்டேன். அந்த ஏழைத் தந்தை, இயலாமையின் வலியை வெளிப்படுத்தினார். மகளுக்காக நீண்ட நாட்கள் அலைந்தும், நீதியின் ஆரம்ப கதவைக் கூட, எட்ட முடியாத ஏக்கம் வெளிப்பட்டது. அப்போதைய பிரதமரின் உறவினர் என்று அவ்வப்போது சொல்லி ஆறுதல் பட்டுக் கொண்டார். நீதி கேட்டு, பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றையும் காட்டினார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டேன். கடிதங்கள், புகார்கள் என, நகல்கள் கேட்டு வாங்கினேன். கர்ப்பிணியிடம் நீண்ட பேட்டி ஒன்றை, மைக்ரோ நாடாவில் பதிவு செய்து விடை பெற்றேன். போலீசாரிடமும் சில விளக்கங்களை கேட்டு பெற்றேன்.
அதன் அடிப்படையில் ஒரு செய்தி தயாரித்தேன். பாலியல் பலாத்காரம் சார்ந்த தகவல் கொண்ட செய்தி. வழக்கமாக இது மாதிரி செய்திகளை, நிருபரின் பெயரில் வெளியிடுவதில்லை. எனக்கு உயர் நிலையில் இருந்தவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. என் பெயரில் வெளியிட்டுவிட்டார்.
செய்தி இதுதான்...
பிரபல தமிழ் நடிகர் ஒருவர். கதாநாயகன், வில்லன் என்று கதா பாத்திரங்களில் நடிப்பவர். தமிழ் தேசியம் எல்லாம் பேசுவார். அலுவலகத்தில் வேலை செய்ய வந்த பீகாரி பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அதிகார மிடுக்குடன் நடிகர் வலம் வந்ததால், புகார் பதியாமல், அலைக்கழித்தனர். விரட்டியடித்தனர். அவர் பிரசவம், ரோட்டிலா... வீட்டிலா... என்ற நிலையில்தான், என் செய்தி வெளிவந்தது.
போனில் ஏகப்பட்ட மிரட்டல். பணம் வாங்கிக் கொண்டு, எதிராக செய்தி போட்டதாக... பணம் கேட்டு மிரட்டியதாக... பேரம் பேசியதாக... நடிகர் புகழை கெடுப்பதாக...
பொதுவாக, இவை வரும் என, எதிர்பார்ப்பதுதான். எனவே, செய்தியின் உயிர்ப்பு வாடிப்போகாமல் இருக்க தொடர் தாக்குதல் நடத்துவதை தவிர வேறு வழி இருக்காது.  அதற்கும் தயாராக இருந்தேன். சம்பவத்தை நிரூபிக்கும் ஆவணங்களை தொடர் செய்தியாக்கினேன். துவக்கம் என்னிடம் என்றாலும், மற்ற இதழ் நிருபர்களும் அதன்பின் இணைந்தனர்.
 அப்போது, எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. என்னிடம் பேரம்படியாததால், சம்பந்தப்பட்ட பெண்ணை அணுகிய நடிகர், பேரத்தையும் மிரட்டலையும் துவங்கினார். பெண் நிலை தடுமாறினார். ஏற்கனவே திருமணமானவர் நடிகர். அந்த பெண்ணையும் திருமணம் செய்வதாக சொல்ல, தடுமாற்றம், பூகம்பமாகிவிட்டது.
ஆவணங்களை உளவுபிரிவு உயர் அதிகாரி ஒருவரிடம் கொடுத்துவிட்டேன். அதன் அடிப்படையில், விசாரணை நடத்திய அப்போதைய  தி.நகர் போலீ்ஸ் உதவி கமிஷனர் திரு. சந்திரசேகர் வழக்கு பதிய உத்தரவிட்டார். இவர், தி.மு.க., அமைச்சர் ஒருவரின் உறவினர்
நடிகர் பேரத்தால், இரண்டும் கெட்டானாகிவிட்டார், பெண். அந்த நேரத்தில் உதவிக்கு வந்தார், அறநிலையத்துறை அதிகாரி கவிதா. அவரது தீவிர முயற்சியால், பிரபல வழக்கறிஞர் பாதுகாப்பில் சில நாட்கள் பெண் இருந்தார். பின், மதிப்புக்குரிய ஜனநாயக மாதர் சங்கம், வழக்கு முடியும் வரை, அந்த பெண்ணை பராமரித்தது. அப்போதுதான், கவிதாவின் தீர்க்கத்தையும், அயராத முயற்சியையும் கண்டேன். அவர் மீது பெரும் மதிப்பு ஏற்பட்டது. அந்த மதிப்பு குலையாமல், குறையாமல் தொடர்கிறது.
சரி... வழக்குக்கு வருவோம். பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. அறிவியல் நிரூபணப்படி, வென்றார். நிவாரணம் கிடைத்தது. நடிகருக்கு தண்டனையும் கிடைத்தது. காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் தானே... நடிகரின் இரண்டாவது மனைவியாகிவிட்டார். தீவிர தமிழ் தேசியம் பேசும் நடிகர், விரைவில் புரட்சிகள் நடத்துவார்.