Wednesday, 22 August 2018

நிறைவேறாத உரையாடல்...

அவரது பெயரில், கொஞ்சம் நிலம் உண்டு. இரண்டு பகுதிகளில்... வயல், தென்னந்தோப்பு, மாந்தோட்டம் என்று... தோவாளை பாசனக்கால்வாய், மெயின் மடை வெள்ளம் பாயும். ஒன்றில், மரியம்மாள் மகள் செல்லத்தாயி என்றும், மற்றொன்றில் ராஜமணி மனைவி செல்லத்தாயி என்றும் பத்திரம் பதிவாகியிருந்தது. ஒருமுறை அப்பாவிடம் இது பற்றி கேட்டேன். முதல் சொத்து, அம்மாவின் பெற்றோர் போட்ட தங்கநகைகளை விற்று வாங்கியதால், தாயாரை துணைப் பெயராக பதிவு செய்ததாக கூறினார்.
முதல்வராக கருணாநிதி, 1989 ல் பதவி வகித்த போது, குடும்ப சொத்தில், பெண்களுக்கு உள்ள உரிமையை சட்டமாக்கினார். அதையொட்டிய நாளில் ஒரு முறை ஊர் சென்றிருந்த போது, அந்த சட்டப்படி சொத்து பிரிப்பதை என் பெற்றோர்  உறுதி செய்தனர். அப்பா மரணத்துக்குப்பின் அந்தப் படியே, பிரித்தோம். என் உடமையும் அம்மா நிர்வாகத்தில் இருந்தது.
பிச்சிகுடியிருப்பு அம்மாவின் சொந்த ஊர். பிச்சி என்பது, ஒரு வகை குற்றுச் செடி. விரும்பத்தக்க வாசனையுடன் பூக்கும். எங்கள் குடும்பங்களில் சுப நிகழ்வு, வழிபாடு போன்றவற்றில் முக்கிய இடம் பெறும். சென்னை வாசிகள் ஜாதிமல்லி என்பர்.
ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, லண்டன் மிஷன் அமைப்பு சார்பில், 1800 களில், திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு புராட்டஸ்டாண்டு கிறிஸ்தவ மதம் பரப்ப வந்த, ஜெர்மனி பாதிரியார் வில்லியம் தோபியாஸ் ரிங்கல்தெளபே, இந்த ஊர் பெயரை, ஜேம்ஸ்டவுண் என மாற்றினார். மதம் மாறியதில், என் அம்மாவின் மூதாதையர்களும் உண்டு. அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய, ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில்தான், ஜேம்ஸ்டவுண் தேவாலயம் உள்ளது.
சில தலைமுறைகளுக்கு பின், என் தாயார் மூதாதையர் குடும்பம், மீண்டும் பாரம்பரிய வழிபாட்டு முறைக்கு திரும்பியது. ஆனாலும் பெயர் ஒட்டுகளில், கிறிஸ்தவம் படிந்தது. அது இன்னும் நீங்கவில்லை. என் அம்மா வழி குடும்பத்தில், இப்போதும், ஏசுதாசன், ஞானமணி, அமர்தியா போன்ற பெயர்கள் உண்டு. என் தாய்மாமன் மகள் பெயர் மரிய ஜூலியட். அவர்கள் கிறிஸ்தவ வழிபாட்டு முறையை கடைபிடிப்பவர்கள் அல்ல.
திருமலய பெருமாள்... (ஜாதி ஒட்டு உண்டு) – மரியம்மாள் தம்பதிக்கு, ஒரு மகன்; இரண்டு மகள்கள். முதலாமவர் திருமணி (ஜாதி ஒட்டு உண்டு). அஞ்சுகிராமம் ஊராட்சி தலைவராக பணியாற்றிய போது, பொது சேவையில் கொஞ்சம் சொத்தை இழந்தவர். அடுத்தது பொன்னம்மை. கடைக்குட்டி என் தாயார் செல்லத்தாயி.
பிச்சி குடியிருப்பு ஊரில் திறன்மிக்க நடுத்தர வேளாண் குடும்பம். சோளம், கேழ்வரகு, தெங்கு, காய்கறிகள், வாழை, உள்ளி, கொல்லமிளகு, உளுந்து, தட்டைப் பயிறு, பச்சை பயிறு என பல்பயிர் சாகுபடி செய்வர். திறன்மிக்க உழவு மாடுகளும், கவலை மாடுகளும், கறவை மாடுகளும் உண்டு. வசதியான நீண்டு அகன்ற சுற்றுச்சுவருக்குள் வீடும் சுற்றிச்சூழ களமும் விஸ்தாரமானது.
தேவாலயத்தை நோக்கி தெற்கு முகமாக, எழில்மிக்க பூந்தோட்டம். ஐரோப்பிய பாணியிலானது. ஒரு மருங்கில் பன்னீர் மரம். அது, பூத்து தெளிவது மனப்பரப்பில் மகிழ்வை தரும். மறு மருங்கில் வளர்ந்த ஒற்றை பெருந்தடியுடன்  கொல்லாமரம். அதாவது முந்திரி மரம். அதையொட்டி பூவரசு.  சுற்றுச்சுவரை ஒட்டி, தோவாளை பாசனக்கால்வாய் வெள்ளம், மடையில் விழுந்து கிளைக்கால்வாயில் புகுந்து ஓடும். கால்வாயில் சிறுநண்டு, நத்தை, பொத்தி, கணியன், மானா என, சிறு உயிர்கள் களிநடனம் புரியும். மதிலுக்கு அப்பால், தோவாளை பாசனக்கால்வாய். பருவ காலங்களில் பூந்துாவலுடன், நீர் வீழ்ச்சி பெறும். காற்று சுழன்றடிக்கும் போது, நீர் எழுச்சியாகி முயங்கித்திரியும். நீர் வீழும் போது மெல்லிய ஓசை இதமளிக்கும்.
இந்த சூழலில் பிறந்து வளர்ந்தவர், என் தாயார்.
திருச்செந்துார் அருகே குட்டம் ஊரில் இருந்து, 18 ம் நுாற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. அவற்றில் ஒன்று, சாமிவேல் மகன் ஒற்றைவீரன் குடும்பம். அந்த குடும்பத்தைச் சேர்ந்த நாராயணன்... ( ஜாதி ஒட்டு உண்டு) – தாமரை வடிவு மகன் ராஜமணி. இவர் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அளவிலான விளையாட்டு வீரர். கபடி, கிளிதட்டு போன்ற குழுவிளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்றவர். சார்ந்த அணிக்கு பதக்கங்களை குவித்தவர். இவருக்கு செல்லத்தாயியை திருமணம் முடித்தனர்.
என் தாய்மாமன் திருமணி, திராவிட அரசியல் பிரமுகர். அவரது அரசியல் தொடர்பு, திருவிதாங்கூர் மண்ணில், கட்சி, ஜாதி அரசியலைத் தாண்டி பலருடன் நெருங்கிய நட்பாக மலர்ந்திருந்தது. அதன் விளைவாக நிச்சயமானதுதான் இந்த திருமணம்.
...1

Saturday, 11 August 2018

டூப்மாஸ்டரும் கருணாநிதியும்

அவர், குட்டையானவர். சைக்கிளில் அமர்ந்தால், பெடலை மிதிக்க கால் எட்டாது. நடக்கும் போது, ‘சடக்... புடக்...’ என, குதித்து செல்வது போல் தோன்றும்.  நேர்த்தியாக தலைமுடியை வாரி சிங்காரித்திருப்பார். பெயர் தவசி. இப்படி, கூப்பிட்டால் அவரை யாருக்கும் தெரியாது. ஒரு, நிரையசை  சொல்லை ,பெயரின் பின்னொட்டாக சேர்க்க வேண்டும். அது சாதி அடையாளம். அதனால் இங்கே தவிர்த்துள்ளேன்.
சிறுவனாக இருந்த போது, தவசியிடம் ஏகப்பட்ட கதைகள் கேட்டுள்ளேன். பின்னர், சென்னையில் தமிழ் சினிமாவுக்கு கதை சொல்வோரை பார்த்திருக்கிறேன். அவர்கள், தவசியிடம் மண்டியிட்டு பாடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
அவ்வளவு அற்புதம்... நேர்த்தி... காட்சிமயம்... வியப்பை வர்ணித்துக் கொண்டே போகலாம்.
திரு. கருணாநிதி, 70 களில் முதல்வராக இருந்த போதுதான், கதை புனையும் ஆற்றல் அவருக்கு வாய்த்தது. மாயா யதார்த்த வாதம் எல்லாம் அத்துபடி. அவர் கதைக்குள் தமிழ் மண்டியிடும்.
 அது, நெல்லுக்கு,  லெவி விதித்திருந்த காலம். ஏழை சிறு விவசாயிகளை, அதிகாரிகள் வதைப்பர். வன்கொடுமை செய்வர்.  வெளிச்சந்தையில், நெல் விற்க அனுமதிக்காமல், பிடித்து பறிப்பர். முறையாக எடை போடாமல் குறைந்த விலையில், கொள்ளையடிப்பர்.  விற்க மறுப்பவரை, பதுக்கல்காரன் என்று வழக்குப் போட்டு வதைப்பர். இழுத்து செல்வர்.
பத்தயத்துக்குள் நெல் போட முடியாது. பதுக்கல் என ஏகடியம் செய்வர். வீட்டுக்குள் புகுந்து சோதனை என்ற பெயரில் அடாவடி செய்வர். பெண்களை தரக்குறைவாக பேசுவர். அடாவடியில் நேரடியாக நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
ஒரு இடத்தில் இருந்து கூலி நெல்லைக் கூட கொண்டு வரமுடியாது. எங்கள் ஊர் விவசாய கூலிகள், நாஞ்சில் பகுதியில் உள்ள வடமேதி எனப்படும் கடுக்கரை, பூதப்பாண்டி போன்ற ஊர்களில் நெல் அடிப்புக்கு போவர். கிடைக்கும் கூலி நெல்லை, ஊருக்கு எடுத்து  வரமுடியமல் தவித்து அலைவர். பதுக்கல், கடத்தல் என, அதிகாரிகள் அடாவடி செய்து பிடுங்கிக் கொள்வர். பின், லஞ்சம் வாங்கி விடுவிப்பர். விவசாயிகள் கண்ணீரில் கரைந்த காலம் அது.
இன்றைய பொய், நாளைய வரலாறு என்று பொற்கால ஆட்சி புரிந்தவர்கள் பதிவில் இவை இடம் பெற வாய்ப்பு இல்லை. அரசின் கெடுபிடியின் ஊடாக பல நிகழ்வுகள் நடப்பது சமூக யதார்த்தம். அப்படியானது தான் தவசியின் கதையும்.
சரி... கதைக்கு வருகிறேன். அவரது அய்யா பனைத் தொழில் செய்வார். தவசிக்கும் அதைக் கற்றுக் கொடுத்தார். கள்ளமில்லாமல் பிழைக்க வேண்டுமே.
 குட்டையான தவசி, பெரிய பனைகளில் கைபோட்டு ஏறுவதில் சிரமப்பட்டார். உள்ளங்கை, நெஞ்சம் அதாவது மார்பு, கால் கரண்டை, உள் முட்டி போன்ற உறுப்புகள் காய்த்து வெடிப்பேறுவதை, சகிக்க முடியாமல் தவித்தார்.
சீவி சிங்காரிப்பதில் ஆர்வம் மிகுந்த தவசி, விடுபட முயன்றார். சிறு விவசாய பணிகள் செய்தார். கடுத்த வேலை செய்ய உடல் ஒத்துழைக்கவில்லை. எங்கு வேலைக்கு போனாலும் பேச்சு... நயமான பேசு்சு...
நெல் சாகுபடி செய்யும் சிறு விவசாயிகள், விலைக்கு அரிசி வாங்குவதை, கீழ்த்தர நடவடிக்கையாக பார்த்தனர். உணவு அரிசிக்காக, மாதத்தில், மூன்று முறை என, முறை வைத்து, புழுக்கிய நெல்லை அரைக்க எடுத்து செல்வர். அந்த அரிசியைத்தான் சாப்பிடுவர்.
லெவி அமலில் இருந்த நாட்களில், அரவை ஆலைக்கு எடுத்து செல்லும் நெல்லையும், அதிகாரிகள் புடுங்கிப் போய்விடுவர். இது, ‘வேலைக்கள்ளன்’ களுக்கு பிழைக்க வாய்ப்பாக அமைந்தது.
தவசிக்கும் இது வாய்ப்பாக, வாகாக அமைந்தது. அரைக்க கொண்டு செல்லும் நெல்லை, விற்று விட்டு அதிகாரிகள் பறித்து சென்றதாக, நாடகமாடுவார். அதற்காக, மிக நேர்த்தியாக ஒரு கதையைத் தயாரிப்பார்.
அந்த கதையில், அவர்தான் முக்கிய கதா பாத்திரம். எடுத்து சென்ற நெல்லை, மீட்க எடுத்த சிரமங்கள் கதை வர்ணனையாக கரையும். அது பெரும் பகுதியைப் பிடித்துக் கொள்ளும். ‘லே... பறிக்க வந்தவன் சீப்புல வந்தானா...  சக்கடா வண்டியிலா... மக்கா’ என்று, மடக்க முயல்வோரை  சுவாரசியமான சொல்லாடல்களால் திசை திருப்பி விடுவார். விவரணையுடன்  வர்ணிப்பார். திருப்பங்களை நேர்த்தியாக கோர்ப்பார். ஆனால், மறுநாளே குட்டு வெளுத்துவிடும். அவருக்கு, என் அப்பா, ‘டூப்மாஸ்டர்’ என்று பெயர் வைத்திருந்தார். அது பிரபலமாயிற்று.
உடல் உழைப்பை தாங்க இயலாமல் இரண்டு முறை, கால்போன போக்கில், தலைமறைவாகிவிட்டார். ஒருமுறை கோவையிலும், மற்றொரு முறை மதுரையிலும் இருந்து அழைத்து வந்தனர். அவர், புலி வேட்டையாட போனக் கதையை பின்னர் ஒருமுறை சொல்கிறேன். 

Saturday, 4 August 2018

பிரசவம் ரோட்டிலா... வீட்டிலா...

அது, 1996 என்று நினைக்கிறேன்.  போலீஸ் செய்திகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்தேன். உயர்  அதிகாரிகளின் கோபப்பார்வைக்கு உள்ளாகியிருந்தேன்.  பலருக்கு தீரா பகைமை.
என், ‘தகவல் மூலம்’ எல்லாம், அதிகாரிகள் வீட்டு அடுப்படியும், காரோட்டிகளும் தான். வீட்டுப்பணிப்பெண்ணுக்கு, தோசை சுட கரண்டியை கையுடன் பிடித்து அனுபவப் பாடம் எடுப்பது, ஒரே மாதிரி உடை அணிந்த மப்டி பெண் போலீஸ் சூழ, மன்னர் வேடத்தில் தியேட்டரில் ராஜாங்கம் நடத்துவது, என பல தினுசான அதிகாரிகளை பார்த்திருக்கிறேன்.  தகவல்கள் அவ்வப்போது, என் பேஜர் கருவியில் ஏறும். அவை, டீகடை பெஞ்சில் பேசப்படும். பெரிய செய்தியாவதும் உண்டு.
அது ஏப்ரல் மாதம். கொடும் வெயில். ஒரு முற்பகலில், கோடம்பாக்கம் போலீஸ்நிலையத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணை கண்டேன். ஒரு போலீஸ்காரரிடம் விசாரித்தேன். ஆறுமாதமாக, நடையாய் நடப்பதாக சொன்னார். விவரம், விலாசம் பெற்று கொண்டேன்.
 அன்று, பணியை முடித்துக்கொண்டு, இரவு, 8:00 மணி அளவில் வடபழனி கங்கையம்மன் கோவில் தெரு சந்தில் உள்ள அந்த வீட்டுக்கு சென்றேன்.
அது ஒரு பீகாரி குடும்பம். தந்தை சண்டை போட்டுக் கொண்டிருந்தார். கர்ப்பிணியை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. தந்தையின் குரல் இயலாமையாக வெளிப்பட்டது. சூழலை ஒருவாறு ஊகித்தபின், அறிமுகப்படுத்திக் கொண்டேன். அந்த ஏழைத் தந்தை, இயலாமையின் வலியை வெளிப்படுத்தினார். மகளுக்காக நீண்ட நாட்கள் அலைந்தும், நீதியின் ஆரம்ப கதவைக் கூட, எட்ட முடியாத ஏக்கம் வெளிப்பட்டது. அப்போதைய பிரதமரின் உறவினர் என்று அவ்வப்போது சொல்லி ஆறுதல் பட்டுக் கொண்டார். நீதி கேட்டு, பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றையும் காட்டினார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டேன். கடிதங்கள், புகார்கள் என, நகல்கள் கேட்டு வாங்கினேன். கர்ப்பிணியிடம் நீண்ட பேட்டி ஒன்றை, மைக்ரோ நாடாவில் பதிவு செய்து விடை பெற்றேன். போலீசாரிடமும் சில விளக்கங்களை கேட்டு பெற்றேன்.
அதன் அடிப்படையில் ஒரு செய்தி தயாரித்தேன். பாலியல் பலாத்காரம் சார்ந்த தகவல் கொண்ட செய்தி. வழக்கமாக இது மாதிரி செய்திகளை, நிருபரின் பெயரில் வெளியிடுவதில்லை. எனக்கு உயர் நிலையில் இருந்தவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. என் பெயரில் வெளியிட்டுவிட்டார்.
செய்தி இதுதான்...
பிரபல தமிழ் நடிகர் ஒருவர். கதாநாயகன், வில்லன் என்று கதா பாத்திரங்களில் நடிப்பவர். தமிழ் தேசியம் எல்லாம் பேசுவார். அலுவலகத்தில் வேலை செய்ய வந்த பீகாரி பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அதிகார மிடுக்குடன் நடிகர் வலம் வந்ததால், புகார் பதியாமல், அலைக்கழித்தனர். விரட்டியடித்தனர். அவர் பிரசவம், ரோட்டிலா... வீட்டிலா... என்ற நிலையில்தான், என் செய்தி வெளிவந்தது.
போனில் ஏகப்பட்ட மிரட்டல். பணம் வாங்கிக் கொண்டு, எதிராக செய்தி போட்டதாக... பணம் கேட்டு மிரட்டியதாக... பேரம் பேசியதாக... நடிகர் புகழை கெடுப்பதாக...
பொதுவாக, இவை வரும் என, எதிர்பார்ப்பதுதான். எனவே, செய்தியின் உயிர்ப்பு வாடிப்போகாமல் இருக்க தொடர் தாக்குதல் நடத்துவதை தவிர வேறு வழி இருக்காது.  அதற்கும் தயாராக இருந்தேன். சம்பவத்தை நிரூபிக்கும் ஆவணங்களை தொடர் செய்தியாக்கினேன். துவக்கம் என்னிடம் என்றாலும், மற்ற இதழ் நிருபர்களும் அதன்பின் இணைந்தனர்.
 அப்போது, எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. என்னிடம் பேரம்படியாததால், சம்பந்தப்பட்ட பெண்ணை அணுகிய நடிகர், பேரத்தையும் மிரட்டலையும் துவங்கினார். பெண் நிலை தடுமாறினார். ஏற்கனவே திருமணமானவர் நடிகர். அந்த பெண்ணையும் திருமணம் செய்வதாக சொல்ல, தடுமாற்றம், பூகம்பமாகிவிட்டது.
ஆவணங்களை உளவுபிரிவு உயர் அதிகாரி ஒருவரிடம் கொடுத்துவிட்டேன். அதன் அடிப்படையில், விசாரணை நடத்திய அப்போதைய  தி.நகர் போலீ்ஸ் உதவி கமிஷனர் திரு. சந்திரசேகர் வழக்கு பதிய உத்தரவிட்டார். இவர், தி.மு.க., அமைச்சர் ஒருவரின் உறவினர்
நடிகர் பேரத்தால், இரண்டும் கெட்டானாகிவிட்டார், பெண். அந்த நேரத்தில் உதவிக்கு வந்தார், அறநிலையத்துறை அதிகாரி கவிதா. அவரது தீவிர முயற்சியால், பிரபல வழக்கறிஞர் பாதுகாப்பில் சில நாட்கள் பெண் இருந்தார். பின், மதிப்புக்குரிய ஜனநாயக மாதர் சங்கம், வழக்கு முடியும் வரை, அந்த பெண்ணை பராமரித்தது. அப்போதுதான், கவிதாவின் தீர்க்கத்தையும், அயராத முயற்சியையும் கண்டேன். அவர் மீது பெரும் மதிப்பு ஏற்பட்டது. அந்த மதிப்பு குலையாமல், குறையாமல் தொடர்கிறது.
சரி... வழக்குக்கு வருவோம். பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. அறிவியல் நிரூபணப்படி, வென்றார். நிவாரணம் கிடைத்தது. நடிகருக்கு தண்டனையும் கிடைத்தது. காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் தானே... நடிகரின் இரண்டாவது மனைவியாகிவிட்டார். தீவிர தமிழ் தேசியம் பேசும் நடிகர், விரைவில் புரட்சிகள் நடத்துவார். 

Monday, 30 July 2018

அவருடன் நேரடி பழக்கம் எதுவும் இல்லை

அது, 1989. துல்லியமாக நினைவில் இல்லை. சென்னை செய்திப்பிரிவில் பணியாற்றிவந்தேன். நாளிதழ்களில் ஒரு செய்தி ஒரு வாரமாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. ‘ஒரு பக்தர் வீட்டு லிங்கத்தில் பொங்கி வழியும் தண்ணீர்’ பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து செய்தியை வெளியிட்டு வந்தன. பெரும் பக்தர் கூட்டம். ஆட்சித் தலைவர், வருவாய்த்துறை அதிகாரிகள், உயர் போலீஸ் அதிகாரிகள் என, அதிகார மிக்க பக்தர் கூட்டம் வரிசையில் வர, சாமானியர்களை கேட்கவா வேண்டும். பெரும் போக்குவரத்து நெரிசல்.
பொதுவாக, இந்த நிகழ்வுகளை கட்டமைப்பவர்கள், உயர்அதிகாரிகளுடன், நிருபர்களையும் வளைத்துப் போடுவர்.
நான் பணியாற்றிய இதழில் அந்த செய்தி தொடர் வரவில்லை. அப்போது தாம்பரம் நிருபராக இருந்த அகஸ்டின், சிந்திக்கத் தெரிந்தவர். அவரை வளைக்கும் முயற்சி தோல்வியுறவே, தலைமை அலுவலகத்துடன், தொடர்பு கொண்டார் ஒருவர். அந்த தொலைபேசி அழைப்பை சந்தித்தவன் நான். விவரங்களை வாங்கிக் கொண்டேன். அதிகாரிகளை துணைக்கழைத்து மேற்கொள்காட்டி, கண்டிப்பாக செய்தி போட கேட்டுக் கொண்டார்.
சரி... லிங்கம் தண்ணீர் விடுவதை பார்த்தால், செய்தி எழுதுவதாக உறுதி சொன்னேன். ஒப்புக் கொண்டார்.
அவரது மன்றாட்டை, ஆசிரியர் பார்வைக்கு கொண்டு போனேன். விசாரித்து எழுத சொன்னார். அன்று இரவு, தாம்பரத்துக்கு சென்றேன். அகஸ்டினும் உடன் வந்தார். லிங்கத்தை பார்க்க போனோம்.
போனதும் புரிந்தது பிழைப்புக்கான பசப்பு. பிழைக்க வழியில்லாமலோ, தெரியாமலோ நடக்கும் அவச் செயல். தோண்டி துருவி விசாரித்தால் ஆனுதாபம்தான் மிஞ்சும். அவர்களின் புத்திசாலித்தனம் வியப்பை தரும்.
எங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.  லிங்கம் தண்ணீர் கொட்டும் கதையை விளக்கினர். என், மதநம்பிக்கை பற்றிய விசாரணையும் முடிந்தது. ஒரு சிறிய வீட்டின்  உள்ளறையில், லிங்கம் இருந்தது. அருகே போனதும், கண்ணாமூச்சு விளையாட்டு மாதிரி, ‘அதோ தாண்ணி... இதோ தண்ணி... வியர்க்கிறது பாருங்கள்...’ என்று, கும்பல் அரற்றி அடித்து விட்டுக் கொண்டே இருந்தது. பேசாமல் நின்றேன். நேரம் நகர்ந்தது. மீண்டும், ‘அதோ ஊற்று... இதோ ஊற்று...’ என்றனர்.
 ‘சரி... ஊறட்டும்... சென்னையில குடி தண்ணீர் பிரச்னையாவது தீருமே... அமைதியா இருங்க...’ என்றேன், சிரிக்காமல்.
இதற்கிடையில், ‘பூசை நடத்த வேண்டும்’ என்றனர். என் முன்னிலையில் நடத்த சொன்னேன். கதவை மூடி மறைவாகத்தான் பூசை என்றனர். நான் லேசாக சிரித்தேன். நிகழ்வின் முக்கியஸ்தர் என் அருகே வந்தார். காதில், ‘நாங்க குடும்பத்தோட கிணத்துல குதிச்சி தற்கொலை பண்ணிக்கப் போறோம்... ’ என்றார். நான் சிரித்த படி, ‘ கொஞ்சம் பொறுங்க... போட்டோ கிராபரை கூப்பிட்டுக்கிறேன்.  கிணத்துல பாயுறத படம் எடுக்க வேண்டாமா...’ என்றேன்.
நிகழ்வை திட்டமிட்டவர்களுக்கு வியர்க்க துவங்கியது. நான் வேளியேறினேன். அகஸ்டின் சிரித்துக் கொண்டு நின்றார். வெளியே கூடியிருந்த பக்தர்களிடம் விவரங்களை அவர் கறந்திருந்தார். தகவல்களை ஒருங்கிணைத்து, ஒரு செய்தி எழுதினோம். மறுநாள் காலை இதழில் வெளியானது. பக்தர் வரிசையில் நின்ற அதிகாரிகள் இப்போது, விலங்குடன் நின்றனர்.
எங்கள் செய்தி வெளியானதற்கு மறுநாள், முரசொலி இதழில், ஒரு பக்க கட்டுரை ஒன்று. அப்போதைய முதல்வர் கருணாநிதி எழுதியிருந்தார். அந்த கட்டுரை, எங்கள் செயலையும், நாங்கள் தயாரித்த செய்தியையும் மையமாக கொண்டிருந்தது. அவருடன் எனக்கு நேரடி பழக்கம் எதுவும் இல்லை.

Thursday, 26 July 2018

கவலையை போக்குமா காக்கையும் மைனாவும்

பறவைகளை தேடுவதும், அவற்றை தொடர்வதும், ஒலியை, நடத்தையை ரசிப்பதிலும்  தனி  சுவாரசியம் உண்டு.
உலகம் முழுவதும் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு, 2014 ஜனவரி 17 ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்க ஆர்வம் ஏற்பட்டது, தயக்கம்தான் என்றாலும் பங்கேற்றேன்.
ரிஷி வேலி கல்வி நிறுவனம், பறவைகள் பற்றிய, சுய கற்றல் முறையில் தயாரித்த ஆங்கில பாட நுால்களை வாசித்திருக்கிறேன். அது, கொஞ்சம் உதவலாம் என நம்பினேன்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை 4:00 மணிக்கே எழுந்து விட்டேன். சைக்கிள் பயற்சியை முடித்து அதிகாலை, 5:40 மணிக்கு, வீட்டின் மாடிக்கு வந்தேன். இருள் விலகவில்லை; ஆனால், பறவைகளின் குரல் தெறித்துக் கொண்டிருந்தது.  காகங்களின் கரைச்சல்தான் துாக்கல். மரங்களில் மாறி மாறி அவை பயணித்துக் கொண்டிருந்ததை, கரைசல் வழி அறிய முடித்து.
அவை, பறப்பதைக் கவனி்த்துக் கொண்டிருந்தேன். எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது.
தொடர்ந்து, மைனாக்கள் சத்தம் போட்டன. அந்த குரல் ஏற்கனவே அறிமுகம் என்பதால், அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படவில்லை.  எண்ணிக்கையை அவதானித்தேன்.
இடையே, மேலும் சில பறவைகளின் குரல்கள்... அவை பரிச்சயம் என்றாலும்,  அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
மைனாக்கள், ஐந்து விதமாக குரல் கொடுப்பதை கவனித்திருக்கிறேன். ஒருவித குரல் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட குரல் எழுப்பும் போது, இணை மைனா குதுாகலம் அடைவதை கவனித்திருக்கிறேன்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில், மைனாக்களை வீட்டில் வளர்த்து, பேச பழக்குவது உண்டு. என் உறவினர் ஒருவர், ஒரு மைனாவுக்கு, ‘அக்கக்கா.... கள்ளன்...கள்ளன்...’ என்று பேசக் கற்றுக் கொடுத்திருந்தார்.
இலங்கை தமிழர்களின், குடியிருப்புகளில், கிளியும் மைனாவும் வளர்ப்பதை பார்த்திருக்கிறேன். மைனாக்கள் மிகவும் மெல்லியதாக இனிமையாக சீட்டி அதாவது விசில் அடிக்கும்.
சரி... பறவை பார்க்க வருவோம்
தொடர்ந்து, அண்டங்காக்கைகளின் கனமான குரல் கேட்டது. எதிர்வீட்டு தென்னையில் அமர்ந்திருந்ததை கவனித்தேன். தனி்த்த குரல் வளம் உள்ளவை. பலர் இதை ரசிப்பதில்லை. ஆனால், அரசங்காகத்தின் கரைச்சலை விட, அண்டங்காக்கையின் கனம் நிறைந்த குரல் சுவாரசியப்படுத்தும். ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று, பக்கத்து மாடி சுவரில் அமர்ந்தது.
விடியலால், வானம் பொலபொலத்தது. காகங்களின் வரவு அதிகரிக்க  அவை, நக்கல் குரலிலும் ஒன்றைக் குரலிலும் கரைந்து கொண்டே இருந்தன. மைனாக்களிலும் மற்றொரு இணை வந்து, குப்பையில் இரை தேட துவங்கின.
குப்பை சிதறிக் கிடந்த பகுதியில், ஒரு கீரிப்பிளை்ளை சுற்றித் திரிவதைக் கவனித்தேன். சற்று நேரத்தில், அதன் இணை கீரியும் சேர்ந்து கொண்டது. அவை குப்பையில் அலைந்து கொண்டிருந்தன.
இதற்கிடையில், கிழக்கு நோக்கி சாய்வாக, சில பறவைகள் வேகமாக பறந்து மறைந்து கொண்டிருந்தன. அவை மிகவும் சிறியவை. பறக்க சிரமப்பட்டது போல் தோன்றினாலும், தனி அழகு தெரிந்தது. காற்றை கிழித்துக்கொண்டு பறந்தன அவை, ஒரே திசையில் பறந்து மறைந்து கொண்டிருந்தன.. 28 பறவைகள் என், தலைக்கு மேலாக பறந்து சென்றதை எண்ணிப்பார்த்தேன்.. அவற்றின் வடிவம் அழகு. ஆனால், அவற்றை ரகம் காணமுடியவில்லை.
சில, பச்சைக் கிளிகள் உச்சிவானில் சத்தமிட்டபடியே, பறந்து மறைந்தன. இப்படி சென்றவற்றில், ஏழு எண்ணிக்கையை அவதானித்தேன். சில தனித்தனியாக பறந்து  கொண்டிருந்தன. எளிமையான கார்ட்டூனாக வரைந்து விட முடியும் என நினைத்தேன்.
அப்போது சற்று துாரத்தில், கருஞ் சிட்டுவின் குரல்.  கொலுசு குலுங்குவது போல் இருந்தது. அந்த ஓசை பரிச்சியம் என்பதால், எளிதில் அடையாளம் காண முடிந்தது.  மாணிக்க பரல்களை உருட்டி விடுவது போல் ஒலி இருக்கும். அந்த சத்தம் மென்மையானது. அற்புதமானது. மனசில் ஒலித்து்க்கொண்டே உயிர்ப்புடன் இருக்கும். இநத ஒலியை அறிமுகப்படுத்தியது என் துணைவிதான். இந்த பறவைகள் வீட்டருகே வந்துவிட்டால், ஓ.. அற்புத சுிட்டுக்களே... என்று ஆர்வமாக சென்று கவனிப்பார். குழந்தைகளையும் அழைத்து காண்பிப்பார்.
சிட்டுக்கள், பல விதமாக ஒலி எழுப்புவதை கவனித்திருக்கிறேன். அனேகமாக, இவற்றில் ஆண்கள்தான் நுாதனமாக ஒலி எழுப்பும். அவற்றின ஓலிக்கு ஏற்ப, பெட்டை நகர்ந்து நிகழ்வை ஒழுங்கு செய்யும்.
சிட்டு என்று நான் குறிப்பிடுவது அடைக்கலான் குருவிகளை அல்ல.
பறவை ஆர்வலர்கள், சிட்டு என்று அடையாளம் காட்டுவதை நான்,  அடைக்கலான் குருவி என்று அடையாளம் கண்டுள்ளேன்.
அடைக்கலான் குருவியுடன் நீண்ட பரிச்சயம் உண்டு. என் குடும்ப வீட்டில், பத்துக்கும் மேற்பட்ட கூடுகளில் அவை வசித்தன. விவரம் தெரிந்த நாள் முதல் அவற்றை தெரியும் அவை எங்கள் குடும்ப உறுப்பினர் என்பதால், அனைத்து செயல்களுடனும் பரிச்சயம்.  எங்களுடன் அடைக்கலமாக வாழ்வதால, அடைக்கலான் குருவி என்று அப்பா சொல்லித்தந்திருந்தார்.
சில நேரங்களில், அவற்றின் கூட்டில் இருந்து குஞசுகள், மாடி அறையில் தவறி விழுந்து விடும். அவற்றை, மிகவும் மெ்ன்மையாக எடுத்த அப்பாவிடம் காட்டுவோம். எணியை எடுத்துச் சென்று, குறிப்பிட்ட கூட்டைத் தேடி குஞ்சை கவனமாக வைப்போம். அது அந்த காலம்.
இப்போது, அடைக்கலான் குருவி கூடுகளை காணமுடிவதில்லை. அவற்றின் இனிய ஒலி, இதயத்தின் ஓரத்தில் சிந்திக் கொண்டே இருக்கிறது.
பறவைகளை ரசித்து நின்ற போது,  ஒரு செண்பகம் அந்த வழியாக பறந்தது. தொடர்ந்து, மீன் கொத்தி ஒன்று, மின் கம்பியில் நடனம் ஆடிக் கொண்டிருந்தது. ‘அங்கே என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்,’ என, என் கவனத்தை ஈர்த்தபடி, கருங்குருவி பக்கத்து வீட்டு மாடியைச் சுற்றி பறந்தபடியே சத்தம் போட்டுக்கொண்டிருந்தது.  ரசித்து க்கொண்டிருந்த போது, மணி, 7:30 ஐ தாண்டிவிட்டது. இப்போது இயந்திரத்தை நோக்கி பதட்டமாக நகரத் துவங்கினேன்.
பறவைகள் கணக்கெடுப்பை ஒட்டி, இணையத்தில், காக்கைகளையும் மைனாவையும் மட்டுமே பதிவிட முடிந்தது. மற்ற பெயர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.  ஆங்கில பெயர்களை இனம் காண்பதில், தடுமாற்றம் ஏற்பட்டதால், பதிவிடாமல் தவிர்த்தேன். இப்போது, நண்பர் ஜெகந்நாதனும், ஆசையும் இணைந்து எழுதிய, பறவைகள் கையேடு புத்தகத்தின் வழி, அடையாளம் காணவும் அறிந்து கொள்ளவும் முடிகிறது.
இந்த புத்தகத்தின் அடிப்படையில், மற்றொரு முறை மாடியில் பறவைகளை ரசிக்க சென்றோம். என் மகளும் உடன் வந்தார். மைனாக்களையும், காகங்களையும், புறாக்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது உயரத்தில் கரும்பருந்து பறந்த கொண்டிருந்தது.
 இறக்கையை ஆட்டாமல், எளிமையாக, அது பறந்து சென்ற விதத்தை வியந்து எனக்கு பறப்பு வனப்பை  விளக்கினார் மகள். இதற்கிடையில், ஒரு மைனா கூட்டையும் பார்த்துவிட்டோம். சிறிது நேரத்தில், கரும்பருந்து மீண்டும் வட்டமடித்தது. அதை விரட்டியடிக்க ஒரு காகம் மேலும் கீழுமாக பறந்து கொண்டிருந்தது.

Wednesday, 25 July 2018

தொல்லியல் நிலமும் மடுவிளை கனவும்

அதை, மடுவிளை என்பர். மதுவிளை என்போரும் உண்டு. கன்னியாகுமரி மாவட்டம், மருந்துவாழ்மலையின் வடக்கு  மடியில் உள்ளது. பருவ மழை பெய்யும் போது, மலையின் முதுகில் விழும் துளிகள், சேர்ந்து பெருகி, ‘பண்ணிப்பொட’ என்ற பகுதி வழியாக, ஆர்ப்பரித்து திரண்டு பாய்ந்து, மடுவிளை நிலப்பரப்பை அரித்து ஓடும். மண் அரிப்பால், மடுவிளையில் பெரிய ஓடை உருவாகியிருந்தது. திரண்டு சாடும் வெள்ளம், மருந்துவாழ்மலை பாசனக் கிளைக்கால்வாயின் கீழ்மடை வழியாக ஒடுங்கி சாடி, பெரும் ஓடையாகி, ஒருமைல் மேற்கில் நாஞ்சில் புத்தனாற்றில் விழும்.
அப்போது, மடுவிளையிலும் அதை சுற்றியும் குடைமரங்கள் நிறைந்திருந்தன. வாகைகளும் உண்டு. அவற்றில் பொன்வண்டுகள் ஒளிரும். மழைநீர் அறுத்து ஓடிய உடைந்த நில சரிவில்,  பொந்துகளில், ஆந்தை, கூகை, பனங்காடை, மீன்கொத்தி, தவிட்டு புறா என பறவைகள் வசிக்கும். கானாங்குருவிகள் கனன்று திரியும். கருங்குருவிகள், காக்கைகளை துரத்தும், நாகணவாய்கள் நவிங்கித் திரியும். வாலாட்டிகள் வழியறிந்து, சிறுபூச்சி புதர்களுக்குள் குடியிருக்கும்.
 என் பள்ளிப் பருவத்தில் அங்கு அதிகம் போவேன். எங்களுக்கும்,  அந்த பகுதியில் மலை அடிவாரத்தை ஓட்டி கொஞ்சம் நிலம் உண்டு. அதை, மலைக்கரை விளை என்போம். வழக்கமாக, நன்செய் சாகுபடி பணிகளுக்குப்பின்,   ஆவணி மாதத்தில், புன்செய் பணிகள் துவங்கும். அந்த காட்டு நிலத்தில், காணம், சிறுபயிறு, உளுந்து, எள்ளு என்று மாறி மாறி விதைப்பு நடக்கும்.
பரப்பில் முள் புதர்கள் நிறைந்து கிடக்கும். விதைப்பு பணி நாட்களில் அங்கேயே உளுந்தங்கஞ்சி காய்ச்சுவர். மதியம், பனம் பட்டையில் ஆவிபறக்கும் உளுந்தங் கஞ்சியை ஊற்றி, காணத்துவையலை தொடுகறியாக்கி குடித்து மகிழ்வோம்.
அங்கு, பிரண்டைக் கொடிகள் நீண்டு கிடக்கும். துாதுவளை, மட்டைக் கள்ளிகளுக்குள் ஒளிந்து படர்ந்திருக்கும். குற்று முள் செடிகள் படர்ந்திருக்கும். விடைதலை மரங்கள், குற்றி படர்ந்திரக்கும். முசுட்டைக் கொடிகள் திருகி சிரிக்கும். அதன் இலைகளை சுவைத்து மகிழ்வோம். அவற்றின் ஊடே, காட்டு முயல்களுக்கு கண்ணி வைத்து காத்திருப்பர். ஓணான்கள் அதன் மீது, நடந்து போகும். மலை உ:டும்புகள், இடுங்காமல் திரியும்.
மடுவிளையை, எப்போதும் வியப்புடன் பார்ப்பேன். அதன் பரப்பு முழுவதும், உடைந்த மண்பாண்ட சில்லுகள் சிதறிக்கிடக்கும். அவற்றை சேகரித்து திரிவேன். ஊர் பெரியவர்கள், ‘ ஓட்ட காலனத் தொடாதே மக்கா...’ என்று அதட்டி விரட்டுவர். அவ்வப்போது அந்த பகுதிக்குள் தனிமையில் சுற்றிவந்து, ஈர்ப்பை புதுப்பித்துக் கொள்வேன். அந்த ஓடுகள் நிலையை கவனித்துக்கொண்டே நடப்பேன். ஒரு காரணமும் தெரியாது. முதியவர்கள் பார்த்தால், அதட்டி விரட்டுவர்.
ஒருமுறை, மண் சிற்பத்தில் உடைந்த தலை ஒன்று கிடைத்தது. அதை எடுத்து வந்த போது, முதியவர் ஒருவர் அதட்டி, பிடுங்கி எறிந்துவி்ட்டார்.
உடைந்த மண் சில்லுகள் பற்றி, ஆலடிவிளை ஊரில் வாய்மொழி கதை உண்டு.  ஊர் உருவாகும் முன், மலை அடிவாரப் பகுதியில் குயவர்கள் வசித்தனராம். அவர்கள், மயிலாடி, வம்பவிளை அருகே நாராயிணி குளத்தில் மண் எடுத்து, பாண்டங்கள் வனைந்தனராம். அந்த பாண்டங்கள், எளிதில் உடையாத தன்மையுடன் இருந்தனவாம். மண் பாத்திரங்கள் உடையாவி்ட்டால், பிழைப்பு நடத்தவது அரிது என்று எண்ணி, இடம் பெயர்ந்து விட்டனராம்.
இந்த கதையின் மூலத்தை அறியேன். நாகர்கோவில் இந்து கல்லுாரியில், வரலாற்று துறை பேராசிரியராக பணியாற்றிய திரு. ராமச்சந்திரன் அவர்களிடம், நான் கல்லுாரியில் சேர்ந்த போது, இது பற்றி கூறினேன். அவர் சில மாணவர்களுடன், மடுவிளையை ஆய்வு செய்தார். அதில் அவர் கண்டறிந்தது என்ன என்று தெரியவில்லை. ஒருமுறை அது பற்றி விசாரிக்க போயிருந்தபோது, நோய்வாய்ப்பட்டிருந்தார். தொடரமுடியவில்லை.
மடுவிளை ஒரு முக்கியமான, தொல்லியல் தளமாக இருந்திருக்கலாம். முறைப்படி ஆய்வு செய்திருந்தால், வாழ்வியல் பற்றியும், வரலாறு பற்றியும் முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கலாம்.
நான், சென்னை வரும் முன்பே, மடுவிளை சிதைந்துவிட்டது. அதன் பரப்பை  புரட்டிப் போட்டு வேலிக்குள் அடைத்துவிட்டனர். அதன் உரிமையும் பல கைகளுக்கு மாறிவிட்டது.  இப்போது, அது மற்றொன்றாகி விட்டது. நுழைவதும் அரிது. மலையில் விழும் மழை நீரை, முறைப்படுத்தி ஒடுக்கி விட்டனர். பறவைகளுக்கு பொந்துகள் இல்லை. அது விளை நிலமாக்கப்பட்டுவிட்டது. அதன் வரலாறு மண்ணில் புதைந்து அழிந்து விட்டது.
மலைக் கரையில் என், 65.05 செண்ட் நிலப்பரப்பையும் விற்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன். அந்த பரப்பு பற்றி  பெரும் கனவு இருந்தது. அது, கடந்து போய்கொண்டிருக்கிறது. 

Friday, 20 July 2018

போதையில் கிருஷ்ணர் வளர்ச்சியில் காந்தி– மனசின் கதை 3

அப்போது சத்திய சோதனையை அறியேன்.  ‘காந்தி தாத்தா நம் தாத்தா...’ என்று துவங்கும் அழ.வள்ளியப்பாவின் பாடல் வகுப்பறையில் அறிந்தது.  அம்மாவும் கொஞ்சம் உரு ஏற்றிவிடுவார். அவ்வப்போது வாயில் உருண்டு இம்சை படும். வீட்டில் முன் அறை தெற்கு சுவரில், வரிசையாக  நான்கு போட்டோக்கள். நடுவில் காந்தி படம். கொஞ்சம் பெரிதானது.  ஓவியர் திருவடியின் கைவண்ணத்தில்... உறுதியான காப்பு சட்டகத்துக்குள் அடைத்தது. எப்போதும், காந்தி குளிருக்கு போர்த்திக் கொண்டிருப்பது போல் தோன்றும். அப்பாவுக்கு அந்த காந்தியை மிகவும் பிடிக்கும்.
அந்த வரிசை படங்களின் முகத்தில்தான் தினமும் விழிப்பேன். அறுவடை காலங்களில், அந்த அறையை நெல் நிறைத்து விடும். அதன் மேல்தான் இரவில் படுத்திருப்பேன். அப்போது, காந்திக்கு அருகே இருப்பது போல் தோன்றும். நுாலாம் படை படிந்த  படக்கண்ணாடிகளை, அந்தநாட்களில் துடைத்து விடுவேன். மெனக்கெட்டு மேலே ஏற வேண்டிய அவசியம் இல்லை பாருங்கள்.
அது, 1968 ம் ஆண்டு என்று நினைவு . காமராஜர் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். என், எட்டேமுக்கால் செண்ட் நில இயற்கை மரத் தோட்டம், அப்போது தரிசாக கிடந்தது. சில தென்னை மரங்கள், ஒரு புளி, பூவரசு மரங்கள் மட்டும்  நின்றன. அது ஊரில் முகப்பில் உள்ளதால் அங்குதான் பொதுக்கூட்டம். அப்போது, காமராஜர் ஒரு கதர் நுால் மாலையை என் அப்பாவுக்கு போட்டதாக  ஊரில் சொல்வர். அப்பா சொன்னதில்லை. அந்த மாலை, காந்திப்படத்துக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.
மயிலாடி ரிங்கல்தவுபே உயர்நிலைப்பள்ளியில், 7 ம் வகுப்பு சேர்ந்திருந்தேன்.  போட்டிகள் அறிவித்தனர். பொதுவாக, என் நிறத்தை முன்நிறுத்தி, எந்த நிகழ்வுகளிலும் ஆசிரியர்கள் சேர்க்க மாட்டர். வலுக்கட்டாயமாக சேர்ந்தாலும் இம்சைதான் படுவேன். புறக்கணிப்புகளை மீற வேண்டும் என்ற வெறி மனதில் கனன்று கொண்டிருந்தது.  அறிவிப்பு வந்த போது, மாறுவேட போட்டிக்கு பெயர் கொடுத்து விட்டேன்.
ஒரு வெறியில் கொடுத்தேனே தவிர, எப்படி நிறைவேற்றுவது. உரிய தளவாட கருவிகள் உண்டா... என்ன வேஷம் போடுவது... இப்படி எல்லாம் சிந்தனை அலைக்கழிக்க  ஒன்றும் புரியவில்லை.  மறுநாள் வகுப்பறையில் ஒரு ஆசிரியர், ‘லே... நீ என்ன வேஷம் போடப்போற...’ என்றார். பயத்தில் கலங்கிய கண்ணுடன் யோசித்தேன். ‘செணம் சொல்லுல...’ என்று அவசரப்படுத்தினார்.
மனதில் சித்திரங்கள் வந்து போயின. மாறி மாறி ஒரு படம் வந்தது. சொல்லிவிட்டேன். அப்பாவுக்கு பிடித்த  திருவடியின் ‘காந்தி...’
வகுப்றையில் ஒரே எள்ளல். நவிச்சியத்துடன் ஏளனமாக சிரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ‘காந்தியாமில்ல... அவரு ஒன்னப்போலயா கருப்பு. போல... ஒழுங்கா போயி நாலு மாட்ட மேய்ச்சி பொழைக்கிற வழிய பாருல...’ ஆசிரியரின் எள்ளலுடன் வகுப்பறையில் எனக்கு எதிராக குரல்கள் நிறைந்தன.
எதுவும் சொல்லாமல், பார்த்துக் கொண்டிருந்தேன். மனசில் மருந்துவாழ்மலையும், காந்திபடமும் வந்து போயின. ‘எனக்குத்தாம்ல மொத பிரேசு... பாருங்க...’ மனதில் சொல்லிக் கொண்டேன்.
பள்ளியில் இருந்து என் ஊர், 4 கி.மீ., துாரத்தில் உள்ளது. இருவேளை, 8 கி.மீ., நடக்க வேண்டும். அன்று வீட்டுக்கு புறப்பட்ட போது, காந்தியை மீண்டும் மனதில் பதித்தேன். காந்தியாவதற்கு தேவையான கருவிகளை பட்டியலிட்டபடி நடந்தேன்.
அகன்று உருண்ட மூக்கு கண்ணாடி, ஊன்று கோல், உடலை மறைத்து மூடிக் கொள்ள துண்டு, உடுத்த இடுப்பு துண்டு,  அணிய செருப்பு. நுாற்க ஒரு ராட்டை, ஒட்டிக் கொள்ள வெள்ளை மீசை. தலையை வழுக்கையாக்க... இவற்றுக்கு என்ன செய்வது... சிந்தித்துக் கொண்டே நடந்தேன்.
வீட்டை சேரும் முன் சிறு துலக்கம் ஏற்பட்டது. உடுத்தவும் போர்த்தவும் அப்பாவின் பழைய வேட்டியை பயன்படுத்தலாம். வட்ட பிரேம் போட்ட கண்ணாடி அணிபவர் உண்டா என்று யோசித்தேன். வேதக்கோயில் விளை சொக்கலிங்கம் தாத்தா நினைவுக்கு வந்தார். ராட்டைக்கு... நுால் நுாற்கும் பேபி அக்காவும், பவுஸ் அக்காவும் நினைவுக்கு வந்தனர். செருப்பு கண்டிப்பாக கிடைக்காது. ஊரில் யாரிடமும் இல்லை.
மீசைக்கு... வழியில் எருக்கம் செடியில் காய் முற்றி வெடித்து விதை பரவுவதைப் பா்த்தேன். அதை சேகரித்துக் கொண்டேன். ஓட்டை கண்ணாடி பிரேம் கிடைத்தது. அப்பாவின் வேட்டி துண்டுகளும் கிடைத்தன. ஒதுக்கிப் போட்ட உழவு கம்பு ஒன்றை ஊன்றுகோலாக எடுத்துக் கொண்டேன்.
ராட்டைக்காக ஓடினேன். முதுகில் இரண்டு சாத்து வைத்து. ‘ போல அந்தால... காந்தியாமில்ல காந்தி... இவுரு புடுங்கிருவாரு...’ என்று விரட்டியடித்தனர். சரி பாதகமில்லை. இருப்பதை வைத்து சமாளித்துவிடலாம் என்று திருப்திப்பட்டுக் கொண்டேன்.
அன்று இரவே, ஓர் ஒத்திகை பார்த்தேன். கொஞ்சம் திருப்தி வந்தது. கருவிகளை பத்திரப்படுத்திக் கொண்டேன். மறுநாள், காலையில் விவசாயப் பணியைத் தொடர்ந்து பள்ளிக்கு ஓடினேன். மாலையில் வீடு திரும்பியதும் மீண்டும் ஒருமுறை ஒத்திகை. விட்டுப்போன கருவிகளை யாரிடமாவது பெறமுடியுமா... என்று சிந்தித்தேன். இரவெல்லாம் காந்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒப்பனை செய்தபின், ‘உங்களைப் போல இருக்கிறேனா...’ என்று திருவடியின் காந்தியைக் கேட்டுக் கொண்டேன். அந்த புன்னகை பிடித்திருந்தது.
போட்டி நாள் வந்தது. பெயர் கொடுத்திருந்தவர்களை அழைத்தனர். ஒரு வகுப்பறைக்குள் போட்டு பூட்டினர். மாதச் சம்பள குடும்பத்து மாணவ மாணவியர் ஒப்பனை செய்ய உதவியாக பலர் வந்திருந்தனர்.
நான், மூன்றே நிமிடங்களில் காந்தியாகி விட்டேன். என் அருகில்  அண்ணன் குமரேசன். மருங்கூர் அருகே சிறிய கிராமத்தை சேர்ந்தவர். ராஜா வேடம் போட்டிருந்தார். அவரும் சீக்கிரமே தயாராகிவிட்டார். நீண்ட ஒப்பனையிலும் சிலர் திருப்தி படவில்லை. உதவிக்கு வந்தவர்கள், ஒப்பனையை மாற்றிக் கொண்டே இருந்தனர். அதைப் பார்த்து சலிப்புடன் நின்று கொண்டிருந்தேன். ஏக்கமாகவும் இருந்தது.
என் நண்பன், பிரான்சிஸ் கிறிஸ்டோபர் என்ற ரவி. மயிலாடி பஞ்சாயத்து நிர்வாக அலவலரின் மகன். கிருஷ்ணர் வேடம் போட்டான். அவனுக்கு ஒப்பனை செய்துவிட, ஐந்து பேர் வந்திருந்தனர்.  ஒப்பனை செய்ய திரண்டிருந்தவர்கள், என்னை பார்த்து எள்ளல் செய்வதை புரிந்து கொண்டேன். பரிசு கிடைக்காது என்ற மனநிலை வந்துவிட்டது ஆனாலும், தொட்டதை முடிக்கும் உறுதி திடமாக இருந்தது.
போட்டி ஆரம்பமானது. முதலில் ராஜா. பள்ளி வளாகத்தில் சதுர வடிவ பாதையில் சுற்றி வந்தார்.  அவர் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த சுற்று யாருக்கு... கதவருகே நின்ற வாத்தியார், ‘லே... காந்தி நீ போ...’ என்று விரட்டிவிட்டார்.  கம்பு ஊன்றியபடி, வளாகத்தை, புன்னகை பூக்க முயன்று வலம் வந்தேன். அவ்வப்போது, கண்ணாடியை சரி செய்து கொண்டேன். ஒட்டு மீசை விழாதவாறு மேல் உதட்டை நிமிட்டி கவனித்துக் கொண்டேன். ஒரே ஆர்ப்பரிப்பு. ‘லே... காந்தி... காந்தி... வாரம்லே...’  என்று மாணவர்கள் ஆர்ப்பரித்தனர். என் சுற்று முடிந்ததும், அறைக்குள் சென்று, ஒப்பனையை விலக்கினேன். ஒப்புக் கொண்டதை முடித்து விட்டேன்.
போட்டி முடிவு வந்தது. பரிசளிப்பு நடந்தது. கிருஷ்ணர் முதல் பரிசு பெற்றார். காந்தியின் பெயர் ஆறுதல் பரிசுக்கு கூட தேர்வு செய்யப்படவில்லை. கூட்டத்தின் கடைக் கோடியில் நின்ற நான், மருந்துவாழ்மலையைப் பார்த்துக் கொண்டே நடந்தேன்.
ஆனால், பள்ளிக்கு வந்து போகும் போது,  பொது இடங்களில்... ஏதோ சில குரல்கள், ‘காந்தி வாராம்லே...’ என்று சுட்டின. காந்தி பாதிப்பில் பல நாட்கள்  சுட்டுதல் நீடித்தது. அது உவப்பாக இருந்தாலும், வெறுமை கனன்று கொண்டே இருந்தது.
என் மகளுக்கு அப்போது, 7 வயது.  காந்தி பிறந்தநாள் அன்று அதிகாலை, கிண்டி, காந்திமண்டபத்துக்கு,  அழைத்து போனேன். அங்கிருந்த சிலையை பார்த்து, வீட்டுக்கு வந்ததும் ஒரு படம் வரைந்தாள். அதை பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். அப்பாவின் காந்தியை விட, மகளின் காந்தி பிடித்தமாகிவிட்டார்.
இப்போது, கிருஷ்ணர் போதையில் உழல்கிறார். காந்தி, பல ஆயிரக்கணக்கான வளர்ச்சி செய்திகள் எழுதிக் கொண்டிருக்கிறார்.